தமிழ்த் திரையுலகில் தனது பாடல்கள் மூலம் தனி முத்திரை பதித்ததோடு கோடிக்கணக்கான ரசிகர்களின் நெஞ்சில் நீங்காமல் நிறைந்து இருப்பவர் மறைந்த பாடலாசிரியர் நா முத்துக்குமார். அவரது 5௦வது பிறந்தநாளை பிரம்மாண்ட இசை நிகழ்ச்சியாக கொண்டாட திரையுலகினர் முடிவு செய்துள்ளனர், இதற்கான முயற்சிகளை திரைத்துறையினர் ஒன்றிணைந்து முன்னெடுத்துள்ளனர். இதன் அறிவிப்பு நிகழ்வில் தென்னிந்திய திரைப்படத் தொழிலாளர்கள் கூட்டமைப்பு சம்மேளனத்தின் தலைவர் - இயக்குநர் ஆர்.கே செல்வமணி, தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கத்தின் தலைவர் - இயக்குநர் ஆர் வி உதயகுமார், இயக்குநர் லிங்குசாமி, இயக்குநர் ராம், தயாரிப்பாளர் தனஞ்செயன், இயக்குநர் விஜய் , எழுத்தாளர்கள் பவா செல்லத்துரை, அஜயன் பாலா ஆகியோர் கலந்துகொண்ட 'ஆனந்த யாழை' விழா சென்னையில் நடைபெற்றது.
இதுபோன்ற நிகழ்ச்சிகளைத் திறம்பட நடத்தி வரும் ஏசிடிசி நிறுவனத்துடன் கைகோர்த்து ஆனந்த யாழை விழாவை நடத்த இருக்கின்றனர். வரும் ஜூலை 19 ஆம் தேதி இந்த விழா நேரு உள்ளரங்கம்- சென்னையில் நடைபெற இருக்கிறது. இந்த இசை நிகழ்ச்சியில் இசையமைப்பாளர்கள் யுவன் சங்கர் ராஜா, ஜிவி பிரகாஷ் குமார், ஹாரிஸ் ஜெயராஜ், எஸ் தமன், சந்தோஷ் நாராயணன், விஜய் ஆண்டனி, கார்த்திக் ராஜா மற்றும் நிவாஸ் கே பிரசன்னா ஒரு சேர ஒரு நிகழ்வில் இசைப் பந்தி வைப்பது இதுவே முதல் முறை. குரல் வளம் மிக்க கலைஞர்களான சித்தார்த், ஆண்ட்ரியா, திப்பு உத்தரா உன்னிகிருஷ்ணன், சைந்தவி, ஹரிணி ஆகியோர் தங்களது பங்களிப்பைத் தர இருக்கிறார்கள். இந் நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக கமல்ஹாசன், விக்ரம், சூர்யா, தனுஷ், சிம்பு, ரவி மோகன் சிவகார்த்திகேயன் உள்ளிட்ட பலர் கலந்துகொள்ள இசைந்துள்ளனர்.
இந்த நிகழ்வில் கலந்து கொண்ட இயக்குநர் ராம் பேசும்போது, “நா முத்துக்குமார் என் வாழ்க்கையில் மட்டுமல்ல, தமிழ்த் திரை உலகத்திற்கு மட்டுமல்ல.. தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய தமிழ்த் திரை இசைப் பாடல்களைக் கேட்கக்கூடிய எல்லோருடைய வீடுகளிலும் ஆனந்த யாழை மீட்டிக் கொண்டிருக்கிறார். மீட்டப் போகிறார். நா.முத்துக்குமார் யாருடைய சுதந்திரத்திலும் தலையிடவும் இல்லை. முத்துக்குமார் எப்போதும் இமயமலை என்றாலும் தன்னை பனித்துளி அளவே காட்டிக் கொள்வார். நான் முதல் படம் எடுக்கக் காரணமாக இருந்தவரே முத்துக்குமார் தான். திரையுலகில் உள்ள நண்பர்கள் யாரைப் பார்த்தாலும் முதலில் பேசுவது முத்துக்குமாரைப் பற்றித் தான் இருக்கும். இது நா.முத்துக்குமாரை தமிழகம் முழுக்க கொண்டாடப் போகிற ஒரு விழா. முத்துக்குமாரின் சாதனைகளை, முத்துக்குமாரின் வரிகளை என்றென்றும் தமிழகத்தில் நிலைத்திருக்குமாறு செய்யக்கூடிய விழா. தமிழ் சினிமாவில் இதற்கு முன்பு நடந்திராத ஒரு விழா என்று கூட சொல்லலாம்” என்று கூறினார்.
இயக்குநர் லிங்குசாமி பேசும்போது, "தேரடி வீதியில் தேவதை வந்தால்’ என்கிற பாடல் தான் நா முத்துக்குமார் எனக்காக முதன் முதலில் எழுதிய பாடல். ஒரு படத்தில் பறவை பறந்த பிறகும் கிளையின் நடனம் முடியவில்லை என அவர் எழுதிய வரிகள் போல தான், அவர் மறைந்தும் இன்னும் அவர் நினைவுகள் மறையாமல் இருக்கின்றன. ஒரு கட்டத்திற்கு மேல் எழுதுவதற்கு நேரம் இல்லாமல் சொல்லச் சொல்ல எழுதிக்கொள்ளும் அளவிற்கு பிஸியான பாடல் ஆசிரியராக மாறினார். எல்லா இசை அமைப்பாளர்களோடும் இணக்கமாக இருந்த ஒரு பாடல் ஆசிரியர். தொடர்ந்து வருடம் தோறும் அதிக பாடல்களை எழுதும் பாடல் ஆசிரியராக இருந்தார். தனது பாடல் வரிகளால் சில நேரம் ட்யூனையே கூட மாற்றி விடுவார். அவருக்கான விழாவை அவர் இறந்த அந்த காலகட்டத்திலேயே நடத்துவதற்கு சில முயற்சிகள் எடுத்தோம். ஆனால் இப்போதுதான் அதற்கான நேரம் வந்துள்ளது. அந்த பொறுப்பும் சரியாக இயக்குநர் விஜய்யிடம் வந்திருக்கிறது. வீடு மாறிப் போன ஒரு விருந்தாளி போல தான் அவரது மறைவை நான் பார்க்கிறேன்” என்று கூறினார்.
இயக்குநர் விஜய் பேசும்போது, இந்த விழா நடப்பதற்கு மிக முக்கிய காரணமான ஏ சி டி சி குழுவுக்கு நன்றி. 2016ல் நா முத்துக்குமார் மறைந்த சில நாட்கள் கழித்து இயக்குநர் செல்வமணி என்னை அழைத்து முத்துக்குமாருக்கு ஒரு நினைவு விழா எடுக்க வேண்டும் என்று கூறினார். இதை முதலில் ஆரம்பித்தது அவர்தான். இந்த நிகழ்வு பற்றி சொன்னதும் விஜய் ஆண்டனி, ஜிவி பிரகாஷ், ஹாரிஸ் ஜெயராஜ் எனப் பலரும் தாங்கள் இந்த நிகழ்ச்சியில் கான்சர்ட் செய்வதாக முன்வந்தார்கள். இது ஒரு பிரம்மாண்ட விழாவாக அமையப் போகிறது. அதைக் கொண்டாடும் தருணம் இது” என்று கூறினார்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









