)
ஹோம்பாலே ஃபிலிம்ஸ் சார்பில் தயாரிப்பாளர் விஜய் கிரகந்தூர் தயாரிப்பில் வெளியாகியுள்ள படம் காந்தாரா சாப்ட்டர் 1. இந்த படத்தை ரிஷப் ஷெட்டி எழுதி இயக்கியுள்ளார். அனிருத் மகேஷ், ஷானில் கவுதம் இணைந்து இப்படத்திற்கு கதை எழுதியுள்ளனர். அரவிந்த் S காஷ்யப், ISC ஒளிப்பதிவு செய்ய, இசை & பின்னணி இசை B. அஜனீஷ் லோக்நாத் அமைக்க மற்றும் சுரேஷ் எடிட்டிங் பணிகளை மேற்கொண்டு உள்ளார். 2022 ஆம் ஆண்டு பெரிய எதிர்பார்ப்புகள் இல்லாமல் வெளியான காந்தாரா படம் உலக அளவில் மிகப்பெரிய வசூல் சாதனை படைத்தது. அதனைத் தொடர்ந்து இந்த காந்தாரா சாப்ட்டர் 1 படம் வெளியாகி உள்ளது. மிகப்பெரிய பொருள் செலவல் உருவாகியுள்ள இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்புகளும் சர்ச்சைகளும் எழுந்த வந்த நிலையில் தற்போது இந்த படம் திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. படத்தின் விமர்சனத்தை பற்றி பார்ப்போம்.
2022 ஆம் ஆண்டு வெளியான காந்தாரா படத்திற்கு முன்பு நடப்பது போல் காந்தாரா சாப்ட்டர் 1 கதை வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனால் நீங்கள் ஏற்கனவே வெளியான படத்தை பார்க்கவில்லை என்றாலும் இந்த படத்தை பார்க்கலாம். ஒரு கொடூர அரசன் தன்னுடைய நிலப்பரப்பில் இருந்து தூரத்தில் இருக்கும் ஈஸ்வர தோட்டத்தை எப்படியாவது கைப்பற்ற வேண்டும் என்று நினைக்கிறார். காரணம் அந்த இடத்தில் பலவித அமானுஷ்யங்கள் இருப்பதாக கூறப்படுகிறது. குலிங்கா எனப்படும் கடவுள் அந்த காட்டை பாதுகாப்பதாக கூறப்படுகிறது. அந்த பகுதிக்கு வரும் கொடூர எண்ணம் கொண்ட ராஜாவை கொலை செய்து விடுகிறது குலிங்கா. அவரது மகன் ஜெயராம் அங்கிருந்து தப்பித்து மீண்டும் தனது நாட்டிற்கு திரும்புகிறார். ஜெயராமிற்கும் அந்த இடத்திற்கு மீண்டும் செல்ல வேண்டும் என்ற ஆசை இருந்து வருகிறது. நீண்ட ஆண்டுகளுக்கு பிறகு ஜெயராம் மகன் குல்ஷன் தேவய்யா (குலசேகரா) அந்த இடத்திற்கு செல்ல முயற்சிக்கிறார். அங்கு பழங்குடியின மக்களின் தலைவனாக இருக்கும் ரிஷப் ஷெட்டி (பெர்மே) மீண்டும் அவரை விரட்டி அடிக்கிறார். அதன் பின்பு என்ன நடந்தது என்பதே காந்தரா சாப்ட்டர் 1 படத்தின் கதை.
படத்தின் இயக்குனர் மற்றும் நடிகர் ரிஷப் ஷெட்டி தன்னுடைய முழு உழைப்பையும் இந்த படத்திற்காக கொடுத்துள்ளார், அது ஒவ்வொரு ஃபிரேமிலும் நமக்கு தெரிகிறது. முதல் காட்சி முதல் கடைசி காட்சி வரை தன்னுடைய 200 சதவீத நடிப்பை கொடுத்துள்ளார். இந்த படம் அவருக்கு ஒரு வாழ்நாள் சாதனையையும் கொடுக்கலாம். சண்டைக் காட்சிகளிலும், தன்னுடைய மக்களுக்காக குரல் கொடுக்கும் போதும், கதாநாயகி உடனான காட்சிகளிலும் அசத்தலான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார். குறிப்பாக கிளைமாக்ஸ் மற்றும் ப்ரீ கிளைமாக்ஸ் காட்சிகளில் அசத்தலான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். பழங்குடியினராக வரும் அனைவரும் நன்றாக நடித்துள்ளனர்.
ஜெயராமிற்கு படம் முழுக்க வரும் ஒரு முக்கிய கதாபாத்திரம் கொடுக்கப்பட்டுள்ளது. ஆரம்பத்தில் வயதான ஒருவராக தனது மகனுக்காக பொறுமையாக செல்லும் காட்சிகளிலும், இறுதியில் போரில் சண்டையிடும் காட்சிகளிலும் நன்றாக நடித்துள்ளார். அவரது மகனாக குல்ஷன் தேவய்யா வில்லன் கதாபத்திரத்தில் நடித்துள்ளார். ராஜாவாக பொறுப்பேற்ற பின்பு தனது நண்பர்களுடன் சென்று குடித்துவிட்டு அரசபைக்கு வரும் காட்சிகளிலும், பழங்குடியின மக்களை கொள்ளும் காட்சிகளிலும் ஒரு வில்லத்தனத்தை வெளிப்படுத்தியுள்ளார். மொத்த படத்திலும் அவருடைய கதாபாத்திரம் சற்று வித்தியாசமாக அமைக்கப்பட்டிருந்தது. கதாநாயகி ருக்மணி வசந்த் திரையில் ஜொலிக்கிறார். அவருடைய கதாபாத்திரமும் வித்தியாசமாகவும் அதேசமயம் மிரட்டல் ஆகவும் வடிவமைக்க பட்டியிருந்தது.
அர்விந்த் எஸ். காஷ்யப் ஒளிப்பதிவு வேலை, அஜனீஷ் லோக்நாத் பின்னணி இசை, அதிக அளவு VFX காட்சிகள் ரசிகர்களை கவரும் விதத்தில் அமைந்துள்ளது. குறிப்பாக இடைவேளைக்கு முன் வரும் சண்டைக் காட்சிகள், ரிஷப் ஷெட்டியின் குலிகா தொடர்பான காட்சிகள், கிளைமேக்ஸ் காட்சிகள் ஆகியவை கூஸ்பம்ப்ஸ் தருணங்களை தருகின்றன. முதல் பாதியில் சில இடங்களில் படம் சற்று மெதுவாக நடந்தாலும், இரண்டாம் பாதியில் பல இடங்கள் பிரமிக்க வைக்கிறது.
கந்தாரா படத்துக்கான முன்னோட்ட கதையாக கடம்பர் காலத்து நில உரிமை, காடுகள், தெய்வ நம்பிக்கை, பழங்குடியினர் வாழ்வு ஆகியவற்றை புராண கதையுடன் இணைத்து ஒரு சுவாரசியமான படமாக கொடுக்க முயற்சித்துள்ளார் நடிகர் மற்றும் இயக்குனர் ரிஷப் செட்டி. அதில் கிட்டத்தட்ட வெற்றியும் அடைந்துள்ளார் என்று சொல்லலாம். படத்தின் நீளம் தான் சற்று குறையாக உள்ளது. அதனையும் இரண்டாம் பாதியில் அதிரடியான திரைக்கதை மூலம் சரி செய்து விடுகின்றனர்.