)
இயக்குநர் ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள "மதராஸி" படம் வரும் செப்டம்பர் 5ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்நிலையில் இப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் உள்ள சாய்ராம் கல்லூரியில் ஞாயிற்றுக்கிழமை பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்த விழாவில், நடிகர் சிவகார்த்திகேயன், இயக்குனர் ஏஆர் முருகதாஸ், நடிகை ருக்மணி மற்றும் படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டனர். சமீபத்தில் வெளியான பெரிய ஹீரோ படங்கள் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகி தோல்வியை தழுவியது. அதனை மனதில் கொண்டு மதராஸி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிக அளவில் ஏற விடாமல் படக்குழு முடிந்த வரை அப்டேட்களை தவிர்த்து வந்தது. தற்போது வெளியாகி உள்ள ட்ரைலரும் பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தவில்லை.
#NewsUpdate | "அண்ணன் அண்ணன்தான்.. தம்பி தம்பிதான்"#ZeeTamilNews #Sivakarthikeyan #SK #Vijay #GOAT #ActorSivakarthikeyan #Madharaasi #Anirudh #ARMurugadoss #ActorVijay #news pic.twitter.com/oXyMSgSYbh
— Zee Tamil News (@ZeeTamilNews) August 25, 2025
மதராஸி இசை மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழாவில் ரசிகர்கள், தன் மீதான விமர்சனங்கள் மற்றும் தனது திரையுலக பயணம் குறித்து சிவகார்த்திகேயன் பேசியது தற்போது வைரல் ஆகி வருகிறது. நடிகர் சிவகார்த்திகேயன் பேசுகையில், "மற்ற நடிகர்களின் ரசிகர்களை அவ்வளவு எளிதாக நம் பக்கம் திருப்பிவிட முடியாது. விஜய் சார் அரசியலுக்கு சென்றாலும், அஜித் சார் ரசிகர் மன்றங்களை கலைத்தாலும், கமல் சார் வெற்றி தோல்விகளை தாண்டி வந்தாலும், ரஜினி சார் சினிமாவுக்கு வந்து 50 வருடங்கள் ஆனாலும், அவர்களுக்கான ரசிகர்கள் அப்படியே தான் இருக்கிறார்கள். அவர்களுக்கு பிறகு சூர்யா, விக்ரம், தனுஷ், சிம்பு என்று எல்லோருக்கும் ரசிகர்கள் இருக்கிறார்கள். அந்த மாதிரி, எனக்கும் கொஞ்சம் ரசிகர்கள் சேர்ந்து வருகிறார்கள். என்னுடைய ரசிகர்கள் அனைவரும் மிகவும் லாயலானவர்கள். அவர்களை அவ்வளவு எளிதாக யாராலும் மாற்றிவிட முடியாது" என்று பேசியுள்ளார்.
கடந்த ஆண்டு வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான G.O.A.T படத்தில் சிவகார்த்திகேயன் சிறிய கேமியோவில் நடித்து இருந்தார். அதில் விஜய்யிடமிருந்து சிவகார்த்திகேயன் துப்பாக்கியை பெற்று கொள்ளும் காட்சி ஒன்று இடம் பெற்று இருந்தது. அந்த காட்சி வைரல் ஆன நிலையில், சிவகார்த்திகேயனை பலரும் "குட்டி தளபதி", "திடீர் தளபதி" என்று சமூக வலைதளங்களில் விமர்சனம் செய்து இருந்தனர். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக மதராஸி விழாவில் பேசிய சிவகார்த்திகேயன், "ஒரு படம் நன்றாக இருக்கிறது... எனக்கு பிடித்திருக்கிறது... என்றால் அதை பாராட்டுவேன். நல்லது செய்வதற்கு நான் ஏன் யோசிக்க வேண்டும்?
G.O.A.T படத்திற்கு பிறகு, நிறைய பேர் என்னை குட்டி தளபதி, திடீர் தளபதி என்றெல்லாம் சொன்னார்கள். அதெல்லாம் இல்லை. என்னைக்குமே, அண்ணன் அண்ணன்தான், தம்பி தம்பிதான். நான் மான் கராத்தே படத்தில் நடித்தபோது, அதன் இசை வெளியீட்டு விழாவிற்கு தயாரிப்பாளர் ஏ.ஆர். முருகதாஸ் சாரும், இயக்குநர் ஷங்கர் சாரும் சிறப்பு விருந்தினர்களாக வந்திருந்தார்கள். அன்று அந்த மேடையில், என்றாவது ஒருநாள், நான் முருகதாஸ் சார் மற்றும் ஷங்கர் சார் இயக்கத்தில் நடிக்க வேண்டும். அதற்காக என் திறமையையும், வியாபாரத்தையும் நிச்சயம் வளர்த்துக்கொள்வேன் என்று சொன்னேன். அப்போது, இரண்டு படம் ஹிட் ஆன உடனே, உனக்கு முருகதாஸ் படம் கேட்குதா? என்று சிலர் கிண்டல் செய்தார்கள்.
ஆனால், அன்று எனக்கு நம்பிக்கை மட்டும் இருந்தது. நீங்கள் கைதட்டி கொண்டே இருந்தீர்கள், நான் ஓடிக்கொண்டே இருந்தேன். இன்று, நான் ஆசைப்பட்டபடியே, மதராஸி படத்தில் ஏ.ஆர். முருகதாஸ் சாரின் இயக்கத்தில், நான் ஹீரோவாக இங்கே நின்று பேசிக்கொண்டிருக்கிறேன்" என்று தெரிவித்துள்ளார். மதராஸி படம், வரும் செப்டம்பர் 5 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ருக்மிணி வசந்த் நடித்துள்ளார், மேலும் இசையமைப்பாளர் அனிருத் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். ரசிகர்கள் பலரும் இந்த படத்திற்கு ஆவலாக காத்து கொண்டுள்ளனர்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ