ஐபிஎல் 2025 தொடரில் இக்கட்டான நிலையில் உள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இன்று வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்கொள்கிறது.
கடந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் 2025 ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் ரவிச்சந்திரன் அஸ்வினை 9.75 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது. கிட்டத்தட்ட ஒன்பது ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் சென்னை அணியில் இணைந்துள்ளார் அஸ்வின்.
அதிக எதிர்பார்ப்புகளுக்கு இடையே விளையாடிய அஸ்வின், இதுவரை விளையாடிய 6 போட்டிகளில் ஒட்டுமொத்தமாக 5 விக்கெட் மட்டுமே எடுத்துள்ளார். மேலும் அதிகமான ரன்களையும் லீக் செய்து வருகிறார்.
இதன் காரணமாக லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் அஸ்வின் இடம்பெறவில்லை. நூர் அகமது மற்றும் ஜடேஜா ஆகியோர் மட்டுமே அணியில் இடம் பெற்றனர்.
இந்நிலையில் இனி வரும் போட்டிகளில் அஸ்வின் சிஎஸ்கே அணியில் இடம் பெறுவாரா மாட்டாரா என்ற கேள்விகள் வர தொடங்கியது. இது குறித்து அணியின் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளமிங் விளக்கம் அளித்துள்ளார்.
"அஸ்வின் போன்ற ஒரு திறமை மிக்க வீரரை வெளியில் உட்கார வைப்பது சிரமம். அவரை இம்பேக்ட் வீரராக விளையாட வைக்க முயற்சி செய்தோம், ஆனால் டாஸ் வேறு விதமாக அமைந்தது. மூன்றாவது ஸ்பின்னரை அணியில் விளையாட வைப்பது சற்று சிரமமாக உள்ளது" என்று பிளமிங் தெரிவித்துள்ளார்.
"அணியை பலமாக மாற்றுவதற்கு சில கடினமான முடிவுகளை எடுக்க வேண்டி இருக்கும், அதுபோல்தான் அஸ்வினை எடுக்காததும். நாங்கள் சரியான காம்பினேஷன் அமைவதற்கு ஒவ்வொரு முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறோம்" என்று தெரிவித்துள்ளார்.
"ஜடேஜாவிற்கு கூடுதல் பேட்டிங் கொடுப்பதற்காக கடந்த போட்டியில் டாப் ஆர்டரில் இறக்கினோம். பவுலிங் போலவே அவரிடம் இருந்து பேட்டிங்கிலும் சென்னை அணி அதிகம் எதிர்பார்க்கிறது" என்று பிளம்மிங் தெரிவித்துள்ளார்.