தமிழகத்தில் வரும் நாட்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து பார்க்கலாம்.
தமிழகத்தில் வரும் மே 14, 15ஆம் தேதிகளில் 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இது தொடர்பாக நேற்று (மே 11) சென்னை வானிலை மையம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், தென்மேற்கு பருவமழை தெற்கு அந்தமான் கடல், நிகோபார் தீவு மற்றும் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் வரும் 13ம் தேதி துவங்கக்கூடும்.
மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, மே 13ம் தேதி நீலகிரி, கோவை, ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர் மற்றும் வேலூர் ஆகிய 7 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
நீலகிரி, கோவை, ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், திருப்பத்தூர், வேலூர் மற்றும் திருவண்ணாமலை ஆகிய 10 மாவட்டங்களில் மே 14,15ம் தேதி ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
தமிழகத்தில் அடுத்த 5 நாட்களில் ஒரு சில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.