Kalaignar Magalir Urimai Thogai : கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்துக்கு தகுதியான பெண்கள் இனி விண்ணப்பிக்க முடியாது. முழு விவரம்
Kalaignar Magalir Urimai Thogai : கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்துக்கு இனி ஏன் விண்ணப்பிக்க முடியாது? என்பதை இங்கே பார்க்கலாம்.
தமிழ்நாடு அரசு சிறப்பாக செயல்படுத்தி வரும் திட்டம் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை (Kalaignar Magalir Urimai Thogai) திட்டம். தமிழ்நாட்டில் தான் நாட்டிலேயே முதன்முறையாக பெண்களுக்காக அறிமுகப்படுத்தப்பட்ட திட்டம் இது.
இத்திட்டத்தில் பெண்களுக்கு மாதம்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது. அதுவும் அவர்களது வங்கிக் கணக்கிலேயே நேரடியாக வரவு வைக்கப்படுகிறது. இதனால், இத்திட்டம் பெண்கள் மத்தியில் ஏகோபித்த வரவேற்பை பெற்றுள்ளது.
தமிழ்நாட்டில் மாதந்தோறும் இத்திட்டத்தின் கீழ் சுமார் 1.15 கோடி பெண்கள் ஆயிரம் ரூபாய் பெறுகின்றனர். விரைவில், அதாவது டிசம்பர் மாதம் முதல் புதிதாக தேர்வு செய்யப்பட்ட பெண்களுக்கும் மாதம் ஆயிரம் ரூபாய் தமிழ்நாடு அரசு கொடுக்க உள்ளது.
இதற்காக ஜூலை 15 ஆம் தேதி முதல் உங்களுடன் ஸ்டாலின் முகாமில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்துக்கு விண்ணப்பிக்கலாம் என அரசு அறிவித்து, பெண்களிடம் விண்ணப்பத்தை பெற்று வந்தது.
இதில் சுமார் 28 லட்சத்துக்கும் அதிகமான பெண்கள் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் தங்களையும் சேர்க்கும்படி விண்ணப்பித்துள்ளனர். இதில் தகுதியானவர்களை தேர்வு செய்யும் பணி இப்போது மும்முரமாக நடந்து வருகிறது.
இந்த சூழலில் இனி யாரேனும் மகளிர் உரிமைத்தொகை திட்டத்துக்கு புதிதாக விண்ணப்பிக்க முடியாது. அனைத்து தகுதிகளிலும் இருந்தும், இதுநாள் வரை விண்ணப்பிக்காமல் இருந்தால், அவர்களுக்கான வாய்ப்பு முடிந்துவிட்டது.
ஏனென்றால், கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்துக்கு அவரவர் பகுதிகளில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் முகாம்களில் மட்டுமே நேரடியாக விண்ணப்பிக்க அரசு வாய்ப்பு வழங்கியது. இதனைப் பயன்படுத்திக் கொள்ளாதவர்கள் இனி நேரடியாக விண்ணப்பிக்க முடியாது.
ஏனென்றால் தமிழ்நாடு முழுவதும் மதுரை, சேலம், திருவள்ளூர், திரூப்பூர் ஆகிய மாவட்டங்களைத் தவிர பிற மாவட்டங்கள் அனைத்திலும் உங்களுடன் ஸ்டாலின் முகாம்கள் நிறைவடைந்துவிட்டன. மேலே சொன்ன மாவட்டங்களிலும் இறுதிகட்ட முகாம்களே இன்று நடக்கிறது.
எனவே, இனி கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்துக்கு தகுதியான பெண்கள் நேரடியாக விண்ணப்பிக்கும் வாய்ப்பை இழந்துவிட்டனர். இதனால், இத்திட்டத்தில் சேர விரும்பினால், அவரவர் பகுதிகளில் நடக்கும் குறைதீர்முகாம்களில் இதுகுறித்து மனு அளிக்கலாம்.
அதனை அதிகாரிகள் பரிசீலித்து வாய்ப்பு அளித்தால் மட்டுமே மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் சேர்க்கப்பட்டு ரூ.1000 பெற வாய்ப்பு இருக்கிறது.
இல்லையென்றால் அரசு மீண்டும் ஒருமுறை இப்படியான முகாம்கள் மூலம் மகளிர் உரிமைத்தொகை திட்டத்துக்கு விண்ணப்பிக்குமாறு ஏதேனும் ஒரு அறிவிப்பு கொடுத்தால் அப்போது மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.
எனவே, கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்துக்கு இதுநாள் வரை விண்ணப்பிக்காத பெண்கள், இதுதொடர்பாக அரசு அடுத்த அறிவிப்பை வெளியிடும் வரை காத்திருக்க வேண்டியது தான்.