Kalaignar Magalir Urimai Thogai : கலைஞர் மகளிர் உரிமைத்தொகை விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டால் என்ன செய்ய வேண்டும்?
Kalaignar Magalir Urimai Thogai : கலைஞர் மகளிர் உரிமைத்தொகை கேட்டு புதிதாக விண்ணப்பித்தவர்களின் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டால் என்ன செய்ய வேண்டும்?
தமிழ்நாடு அரசு கலைஞர் மகளிர் உரிமைத் தொகை (Kalaignar Magalir Urimai Thogai) திட்டத்துக்கு புதிதாக விண்ணப்பித்தவர்களின் விண்ணப்பங்களை பரிசீலிக்க தொடங்கியுள்ளது.
ஜூலை 15 முதல் தற்போது வரை 28 லட்சத்துக்கும் அதிகமான பெண்கள் மாதம் ரூ. 1000 கிடைக்கும் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்திற்கு விண்ணப்பித்துள்ளனர்.
அதில் தகுதியான பெண்களை தேர்வு செய்யும் பணியை அரசு தொடங்கியுள்ளது. ஊராட்சி வாரியாக விண்ணப்பித்தவர்களின் தகுதிகள் இப்போது சரிபார்க்கப்படுகின்றன.
அனைத்து விதிமுறைகளையும் பூர்த்தி செய்யும் பெண்கள் மட்டுமே இத்திட்டத்தில் பயனாளியாக தேர்வு செய்யப்பட இருக்கின்றனர்.
நிலம், வருமானம் உள்ளிட்ட தகவல்கள் விதிமுறைகளுக்கு உட்பட்டு சரியாக இருக்க வேண்டும். முகவரி, வசிப்பிடம் ஆவணங்களில் இருப்பது சரியாக இருக்க வேண்டும்.
இவற்றில் பிழை இருந்தால் கூட மகளிர் உரிமைத்தொகை விண்ணப்பம் நிராகரிக்கப்படும். புதிதாக அரசு வேலை சேர்ந்தவர்களின் குடும்பங்களைச் சேர்ந்தவர்களையும் அரசு கணக்கில் கொள்ளும்.
அக்குடும்பத்தைச் சேர்ந்தவர்களின் பெண்கள் மகளிர் உரிமைத்தொகை கேட்டு விண்ணப்பித்திருந்தால் அவர்களின் விண்ணப்பம் நிராகரிக்கப்படும்.
இது ஒருபுறம் இருக்க, ஒருவேளை தகுதியானவர்கள் நிராகரிக்கப்பட்டால் என்ன செய்ய வேண்டும் என்ற சந்தேகம் பெண்கள் மத்தியில் இருக்கிறது. கடந்தமுறை அப்படி நிராகரிக்கப்பட்டவர்களுக்கு அரசு மேல்முறையீடு செய்ய வாய்ப்பு கொடுத்தது.
அதன்படி இம்முறையும் பயனாளிகள் பட்டியல் இறுதி செய்யப்பட்ட பிறகு நிராகரிக்கப்பட்டவர்களுக்கு மேல்முறையீடு செய்ய அரசு வாய்ப்பு கொடுக்கும். இது தொடர்பான அறிவிப்பு நவம்பர் மாத இறுதி அல்லது டிசம்பரில் வெளியாக வாய்ப்புள்ளது.