Ration Card News: ரேஷன் கடைகளில் ரேஷன் அட்டைத்தாரர்களுக்கு தலா 5 கிலோ கோதுமை வழங்கப்பட்டு வந்துள்ள நிலையில், தற்போது 2 கிலோ மட்டுமே வழங்கப்படுகிறது.
Wheat Allocation For Ration Cards: ஒவ்வொரு மாதமும் மத்திய அரசு, தமிழ்நாடு ரேஷன் கடைகளுக்கு கோதுமையை ஒதுக்கீடு செய்யும். அந்த வகையில், தற்போது கோதுமை ஒதுக்கீடு அளவு குறைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
தமிழ்நாடு அரசின் நியாய விலை கடைகளில் அரிசி, கோதுமை ஆகியவை இலவசமாக வழங்கப்படுகிறது. அரிசிக்கு பதில் கோதுமையையும் பெற்றுக்கொள்ளலாம். இது ஒரு அட்டைக்கு 5 கிலோ முதல் 10 கிலோ வரை கோதுமை வழங்கப்படுகிறது.
மாநகராட்சி பகுதிகளில் கோதுமையை 10 கிலோ வரை கோதுமை வழங்கப்படுகிறது. மற்ற பகுதிகளில் தேவைகேற்ப 5 கிலோ வரை வழங்கப்படுகிறது.
ரேஷன் அட்டைத்தாரர்கள் தங்களின் விருப்பத்தின்பேரில் அரிசிக்கு பதிலாக இலவசமாக கோதுமையை பெற்றுக்கொள்ளலாம். இது தமிழ்நாடு முழுவதும் உள்ள ரேஷன் கடைகளில் ரேஷன் அட்டைத்தாரர்களுக்கு வழங்கப்பட்டு வந்தது.
இந்த கோதுமையை தமிழ்நாட்டுக்கு மத்திய அரசே ஒதுக்கீடு செய்து வருகிறது. இதுவரை மொத்தம் 7 லட்சத்து 25 ஆயிரத்து 482 மெட்ரிக் டன் கோதுமை தமிழ்நாட்டு ரேஷன் அட்டைத்தாரர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
அந்த வகையில் ரேஷன் அட்டைத்தாரர்களுக்கு இலவசமாக கோதுமை வழங்கும் பொருட்டு தமிழ்நாடு ரேஷன் கடைகளுக்கு மாதம் 17 ஆயிரத்து 100 டன் கோதுமையை மத்திய அரசு ஒதுக்கீடு செய்தது. தற்போது இதை மத்திய அரசு குறைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
தொடக்க கட்டத்தில் தமிழ்நாட்டுக்கு 13 ஆயிரத்து 500 டன் கோதுமை ஒவ்வொரு மாதமும் ஒதுக்கீடு செய்யப்பட்டுவந்தது. அதன்பின் 2023ஆம் ஆண்டு வாக்கில் மாதம் 8,500 டன்னாக கோதுமை ஒதுக்கீடு குறைக்கப்பட்டது.
அதன் பின் தமிழ்நாடு அரசின் தொடர் கோரிக்கைகளை அடுத்து, கடந்தாண்டு அக்டோபர் மாதம் கோதுமை ஒதுக்கீடு 17 ஆயிரத்து 100 ஆக உயர்த்தப்பட்டது. தற்போது இம்மாதம் முதல் 8 ஆயிரத்து 576 டன்னாக கோதுமை ஒதுக்கீடு குறைக்கப்பட்டது.
தற்போது கோதுமை குறைக்கப்பட்டுள்ளதால், ரேஷன் அட்டைத்தாரர்களுக்கு 2 கிலோ கோதுமை மட்டும் வழங்க தமிழ்நாடு உணவு வழங்கல் துறை அறிவுறுத்தியிருப்பதாக கூறப்படுகிறது. இதனால், தற்போது 5 கிலோ கோதுமை வழக்கம்போல் வழங்கப்படாததால் ரேஷன் அட்டைத்தாரர்கள், ரேஷன் ஊழியர்களின் மீது கடும் அதிருப்தி அடைவதாக தகவல்கள் கூறுகின்றன. விரைவில் பழையபடி கோதுமை ஒதுக்கீட்டை அதிகப்படுத்தும்பட்சத்தில் இந்த பிரச்னையும் முடிவுக்கு வரும்.