Tamil Nadu Government : கர்ப்பிணிகள் ரூ.18,000 உதவித் தொகை உள்ளிட்ட சலுகைகளை பெறுவது எப்படி? முழு விவரம்
Tamil Nadu Government : தமிழ்நாடு அரசு கர்ப்பிணிகளுக்கு வழங்கும் ரூ.18,000 உதவித் தொகை உள்ளிட்ட சலுகைகளை பெறுவது எப்படி? முழு விவரம்
Tamil Nadu Government : தமிழ்நாடு அரசு பொதுமக்களின் நலனுக்காக ஏராளமான திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக கர்ப்பிணி பெண்கள் ஆரோக்கியமான குழந்தையை பெற்றெடுத்திட தமிழ்நாடு அரசு டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவி திட்டத்தின் கீழ் நிதியுதவி வழங்கப்பட்டு வருகிறது.
இத்திட்டத்தின் மூலம் பிரசவத்தின் போது பெண்களின் இறப்பு விகிதம் மற்றும் பச்சிளம் குழந்தைகளின் இறப்பு விகிதம் ஆகியவற்றை குறைக்கவும், கர்ப்பிணிகள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் வழங்கப்படுகிறது.
ஏழை எளிய கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து ஆதரவை வழங்குவது மற்றும் ஊதிய இழப்பை ஈடு செய்ய ரூ.18,000 உதவித் தொகையாக வழங்கப்படுகிறது.
பொதுவாக, பேறுகாலத்தின் போது பெண்கள் நிதிச்சிக்கல்களை சந்திப்பார்கள். அதைக்குறைக்கவும் இத்திட்டத்தின் மூலம் வழங்கப்படும் உதவித் தொகையானது உதவி புரிகிறது.
பெண்களுக்கு ஏற்படும் இரத்தசோகையைப் போக்கவும், பிறக்கும் குழந்தைகளின் எடையளவை அதிகப்படுத்தவும் ரூ. 4000 மதிப்புள்ள 12 ஊட்டச்சத்து பொருட்கள் அடங்கிய ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கப்படுகிறது. இதன் மூலம் தாய் மற்றும் குழந்தைக்கு ஏற்படும் ஊட்டச்சத்து பற்றாக்குறையை நிவர்த்தி செய்யப்படுகிறது.
டாக்டர் முத்துவட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவி திட்டத்தின் கீழ் நிதியுதவித் தொகையானது மார்ச் 2024 வரை 5 தவணைகளாக வழங்கப்பட்டு வந்தது. ஆனால், அது கடந்த ஏப்ரல் 01, 2024 முதல் 3 தவணைகளாக வழங்கப்பட்டு வருகிறது.
1ம் தவணையாக கருவுற்ற சிவது மாதத்தில் ரூ. 5000மும், 2ம் தவணையாக குழந்தை பிறந்த 4வது மாதத்தில் ரூ.6000மும் மற்றும் 3ம் தவணையாக குழந்தை பிறந்த 9வது மாதத்தில் ரூ.2000மும் வழங்கப்படுகிறது.
மேலும் கருவுற்ற 3வது மற்றும் 6வது மாதத்தில் ரூ.2000 மதிப்புள்ள ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கப்படுகிறது.ஊட்டச்சத்து பெட்டகத்தில் கர்ப்பிணி பெண்ணுக்கு பெண்ணுக்கு தேவையான ஊட்டச்சத்து மாவு - 1 கிலோ, இரும்புச் சத்து டானிக் 200 மிலி - 3 ஆவின் நெய் 500 கிராம், உலர் பேரிச்சம்பழம் - 500 கிராம், அவ்பெண்டாசோல் மாத்திரை – 3, பிளாஸ்டிக்கப் – 1, பக்கெட் - 1, கதர் துண்டு - 1 ஆகிய பொருட்கள் இருக்கும்.
இத்திட்டத்தின் கீழ் பயன்பெற கர்ப்பிணித் தாய்மார்கள் கருத்தரித்த 12 வாரத்திற்குள் அருகிலுள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் உள்ள செவிலியரிடம் ஆதார் அட்டை, வங்கிக்கணக்கு எண் உள்ளிட்டவற்றை தெரிவித்து, தங்களுடைய பெயரை பதிவு செய்து, பிக்மி (RCH ID / PICME எண்) எண்ணை பெற்றுக்கொள்ள வேண்டும்.
அதன் பிறகு, உதவித்தொகையானது பயனாளிகளுடைய வங்கி கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படும். கருவுற்ற கர்ப்பிணிப் பெண்கள் இத்திட்டத்தினை பயன்படுத்திக் கொள்ள வேண்டுமென தமிழ்நாடு அரசு கேட்டுக்கொண்டுள்ளது.
கரூர் மாவட்டத்தில் கடந்த 4 ஆண்டுகளில் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவி திட்டத்தின் கீழ் 40,825 கர்ப்பிணிப் பெண்களுக்கு ரூ.26.56 கோடி மதிப்பில் நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது.