Tamilnadu Government | விவசாயிகள் தேசிய அடையாள எண் ஏன் பெற வேண்டும்? எப்படி பெற வேண்டும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்
Tamilnadu Government News | விவசாயிகளுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு மத்திய, மாநில அரசுகளிடமிருந்து வந்துள்ளது. அவர்கள் ஏன் தேசிய அடையாள எண் வாங்க வேண்டும் என்பதை அவசியம் தெரிந்து கொள்ளுங்கள்.
இந்தியா முழுவதும் இருக்கும் விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. அவர்கள் தேசிய அடையாள எண் வாங்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. விவசாயிகளுக்கான இந்த தேசிய அடையாள எண் ஏன் வாங்க வேண்டும்? எப்படி வாங்க வேண்டும்?, தேசிய அடையாள எண் வாங்க கட்டணம் செலுத்த வேண்டுமா? என்பது குறித்தெல்லாம் இங்கே முழுமையாக தெரிந்து கொள்ளுங்கள்.
விவசாயிகள் அரசின் பல்வேறு திட்டப் பலன்களைப் பெறுவதற்கு தங்களது நில உடைமை விவரங்கள், பயிர்சாகுபடி அறிக்கை போன்ற தொடர்புடைய ஆவணங்களை ஒவ்வொரு முறையும்ச மர்ப்பிக்க வேண்டியுள்ளது.
இதில் ஏற்படும் காலதாமதத்தினை தவிர்க்கும் வகையிலும் அரசின் திட்டங்களில் விவசாயிகள் குறித்த நேரத்தில் பயன்பெற ஏதுவாகவும், அனைத்து விவரங்களையும் மின்னணு முறையில் சேகரித்திட தமிழ்நாட்டில் வேளாண் அடுக்குத் திட்டம் (AgriStack) செயல்படுத்தப்பட்டு வருகின்றது.
தற்போது, திருவள்ளூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் விவசாயிகளின் பதிவு விவரங்களுடன், ஆதார்எண், கைபேசிஎண், நில உடைமை விவரங்களையும் விடுபாடின்றி இணைக்கும் பணி சம்பந்தப்பட்டவருவாய் கிராமங்களில் நடைபெற்று வருகிறது.
இதில் கலந்து கொண்டு நில உடைமை விவரங்கள் இணைத்துக் கொள்ள வேண்டும். அல்லது விவசாயிகள் பொது சேவை மையம் (CSCs) சென்று இந்த சேவையை முடித்துக் கொள்ளலாம்.
அனைத்து விவரங்களும் ஒருங்கிணைக்கப்பட்ட பிறகு ஆதார் எண் போன்ற தனித்துவமான தேசிய அளவிலான அடையாள எண் 2025-26 ஆம் நிதியாண்டு முதல் வ்வொரு விவசாயிக்கும் ஏற்படுத்தப்படும்.
இதன் மூலம் பயிர்க் காப்பீடுத் திட்டம்(PMFBY), பிரதம மந்திரி கவுரவ நிதித்திட்டம் (PMKISAN), போன்ற ஒன்றிய மற்றும் மாநில அரசின் திட்டங்களில் விவசாயிகள் எளிதில் பயன்பெறலாம். இதற்காகவே இந்த தேசிய அளவிலான தனித்துவ அடையாள எண் மிகவும் அவசியம்.
எனவே, விவசாயிகள் தங்களது கிராமங்களில் வேளாண்மை உழவர் நலத்துறை அலுவலர்களால் நடத்தப்படும் சிறப்பு முகாம்கள், அருகில் உள்ள பொதுசேவை மையங்களுக்கு நேரடியாகச் சென்று தங்கள் நில உடைமை விவரங்கள், ஆதார், கைபேசி எண் ஆகிய விவரங்களை அளித்து எவ்வித கட்டணமுமின்றி 31.03.2025 ஆம் தேதிக்குள் இத்திட்டத்தில் பதிவு செய்து பயன் பெற்றுக் கொள்ளலாம்.