Viral Story: இந்தியாவின் தொழில்நுட்ப தலைநகரம், இந்தியாவின் சிலிக்கான் வேலீ என்றெல்லாம் பல விதமாக புகழப்படும் நகரம் பெங்களூரு. ஐடி துறை அங்கு செழித்து வளர்ந்து அந்த மாநிலத்தின் முன்னேற்றத்திற்கு பெரும் பங்காற்றி வருகிறது. சமீபத்தில் ஒரு பெங்களூர்வாசியின் கதை சமூக ஊடகங்களில் வைரலாக பரவி வருகிறது. அதை பற்றி இந்த பதிவில் காணலாம்.
பெங்களூருவில் ஒருவர் மேற்கொண்ட ஒரு ஆட்டோ சவாரி, அவருக்கு வாழ்க்கைக்கான முழு அர்த்தத்தையும் புரிய வைக்கும் வண்னம் அமைந்தது. இதை அவர் தனது LinkedIn கணக்கில் பகிர, அது வைரல் ஆனது. மனிதவள (HR) துறையில் பணிபுரியும் ஒருவர், ஒரு முன்னாள் ஐடி ஊழியரை சந்தித்துள்ளார். அந்த சந்திப்பு அவருக்கு பெரும் அதிர்ச்சியை அளித்தது. அந்த ஐடி ஊழியர் அப்போது ஆட்டோ ஓட்டிக்கொண்டிருந்ததே அதற்கு காரணம். அவர் தன் வாழ்க்கைச் செலவுகளை ஈடு செய்வதற்காக ஆட்டோ ஓட்டுவதை அந்த HR நிபுணர் அறிந்துகொண்டார்.
LinkedIn இல் பகிரப்பட்ட ஒரு பதிவில், காயத்ரி கோபகுமார் என்ற HR ஊழியர், தான் வேலை நிமித்தமால பேசிக்கோண்டிருந்ததை கேட்ட அந்த ஆட்டோ ஓட்டுநர் சுரேந்திரா ஆர், தன்னிடம், "மன்னிக்கவும் மேடம், நீங்கள் HR இல் இருக்கிறீர்களா? எனக்கு வேலை கிடைக்க உதவ முடியுமா?" என்று பணிவுடன் கேட்டதாகத் தெரிவித்துள்ளார். இந்த கேள்வி எளிமையானதாக தோன்றினாலும், பல வருட அனுபவம், இழப்பு மற்றும் விடாமுயற்சியின் எடையை அந்த கேள்வி சுமந்துவந்தது.
ஆட்டோ ஓட்டுநரின் நிலையை கண்டு ஆச்சரியப்பட்ட காயத்ரி அவரை மேலும் விசாரிக்க முடிவு செய்தார். சுரேந்திராவுக்கு ஒரு உறுதியான தொழில்முறை பின்னணி இருந்தது. அவர் கால்பியன் மென்பொருள் தொழில்நுட்பங்கள் மற்றும் OSPROSYS போன்ற நிறுவனங்களில் சீனியர் அசோசியேட் ஆகவும், தர ஆய்வாளராகவும் பணியாற்றியுள்ளார். அவர் பிராஜெக்டுகளுக்கு தலைமை வகித்துள்ளார் என்பதையும், பல பேர் கொண்ட குழுக்களை கையாண்டுள்ளார் என்பதையும், சுயாதீனமாக வேலை செய்யும் திறனுக்காக பல அங்கீகாரங்களைப் பெற்றுள்ளார் என்றும் காயத்ரி அவருடன் பேசி தெரிந்துகொண்டார்.
"அவர் பிராஜெக்டுகளுக்கு தலைமை வகித்துள்ளார், குழுக்களை நிர்வகித்துள்ளார், மேலும் சுயாதீனமாக பொறுப்புகளைக் கையாளும் திறனுக்காக அவரது மேலாளர்களால் அங்கீகரிக்கப்பட்டுள்ளார்" என்று காயத்ரி தனது பதிவில் கூறியுள்ளார்.
ஆனால் வாழ்க்கை அவரை திடீரென அந்த பாதையிலிருந்து விலக்கியது. கடுமையான குளிர்கால பயணத்தால் ஏற்பட்ட பக்கவாதம், அதைத் தொடர்ந்து குடும்பத்தில் ஏற்பட்ட மருத்துவ அவசரநிலை ஆகியவை அவரை கார்ப்பரேட் உலகத்தை விட்டு வெளியேற கட்டாயப்படுத்தின. நிதி நெருக்கடியால், சுரேந்திரா தனது குடும்பத்தை ஆதரிக்கவும், தினசரி செலவுகளை சமாளிக்கவும் ஆட்டோ ஓட்டத் தொடங்கினார்.
"துரதிர்ஷ்டவசமாக, எதிர்பாராத உடல்நலப் பின்னடைவுகள் மற்றும் தனிப்பட்ட சவால்கள், குளிர்காலத்தில் பயணத்தால் ஏற்பட்ட பக்கவாதம் மற்றும் குடும்ப மருத்துவ நெருக்கடியைத் தொடர்ந்து ஏற்பட்ட உணர்ச்சிகரமான மன அழுத்தம் காரணமாக, சுரேந்திரா கார்ப்பரேட் உலகத்திலிருந்து விலக வேண்டியிருந்தது," என்று காயத்ரி கூறியுள்ளார்.
"வலுவான நிதி ஆதரவு இல்லாமல், வீட்டுச் செலவுகளை நிர்வகிக்கவும் தனது குடும்பத்தை ஆதரிக்கவும் அவர் ஆட்டோ ஓட்டத் தொடங்கினார்" என்று அவர் மேலும் தனது பதிவில் எழுதியுள்ளார்.
இப்போது, அவர் மீண்டும் தனது துறைக்குள் நுழைய விரும்புகிறார்.

"க்வாலிடி அஷ்யூரன்ஸ், ஆப்ஸ் சப்போர்ட் அல்லது அவரது அனுபவத்திற்கு ஏற்ற வேறு பேக்-ஆஃபிஸ் பணியாக இருந்தாலும், அவர் மீண்டும் வேலைக்குத் திரும்பத் தயாராக உள்ளார்," என்று காயத்ரி கூறியுள்ளார். ஒரு புதிய தொடக்கத்தைக் கண்டறிய அவருக்கு உதவுமாறு தனது நெட்வொர்க்கிடம் காயத்ரி வலியுறுத்தினார். மேலும் அவரது புகைப்படம் மற்றும் தொடர்பு விவரங்களையும் பதிவில் சேர்த்தார்.
காயத்ரியின் இந்த போஸ்ட் சட்டென வைரல் ஆனது. சமூக ஊடக பயனர்கள் தங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ள கருத்துகள் பிரிவில் வெள்ளமென கமெண்ட் செய்தனர். "இதைப் பகிர்ந்துகொண்டு கூடுதல் முயற்சி எடுத்ததற்கு உங்களுக்குப் பாராட்டுகள்" என்று ஒரு பயனர் கூறியுள்ளார். மற்றொருவர், "அவருக்கு வாழ்த்துக்கள். அவர் ஒரு நல்ல ஐடி ரோலிற்கு தகுதியானவர்" என்று தெரிவித்துள்ளார்.
காயத்ரியின் இந்த பதிவின் வாயிலாக அந்த ஆட்டோக்காரரின் வாழ்க்கை மீண்டும் வேகமெடுக்கும் என நம்புவோம்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









