)
Elephant Attack, Chennai Women Death: ஒரு அழகான வார இறுதி விடுமுறை, இப்படி ஒரு தீராத துயரமாக மாறும் என்று அந்த குடும்பம் நிச்சயம் நினைத்திருக்காது. கர்நாடகாவின் புகழ்பெற்ற சுற்றுலாத் தலமான குடகு (கூர்க்) மாவட்டத்தில் உள்ள துபாரே யானைகள் முகாமில் (Dubare Elephant Camp) நேரிட்ட கோர விபத்து, ஒட்டுமொத்த நாட்டையும் உலுக்கியுள்ளது. யானைகள் குளிப்பதைப் பார்க்கச் சென்ற இடத்தில், இரு யானைகள் திடீரென மோதிக்கொண்ட கோர விபத்தில் சென்னையைச் சேர்ந்த 33 வயது இல்லத்தரசி ஜூனேஷி (சில ஊடகங்களில் துளசி/ஜான்சி என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது) சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
சென்னையைச் சேர்ந்த ஜூனேஷி, மென்பொருள் பொறியாளராகப் பணிபுரியும் தனது கணவர் மற்றும் குழந்தையுடன் கோடைகால விடுமுறையைக் கொண்டாட குடகு மாவட்டத்திற்குச் சுற்றுலா சென்றிருந்தார். ஞாயிற்றுக்கிழமை காலை, காவிரியாற்றின் கரையில் அமைந்துள்ள துபாரே யானைகள் முகாமிற்கு அவர்கள் சென்றுள்ளனர். அங்கு பாகன்கள் யானைகளைக் குளிப்பாட்டும் அழகை நூற்றுக்கணக்கான சுற்றுலாப் பயணிகளுடன் சேர்ந்து ஜூனேஷியின் குடும்பமும் ரசித்துக் கொண்டிருந்தது.
வழக்கமான குளியல் நிகழ்வின் போது, 'ஜெய் மார்த்தாண்டா' (38) என்ற யானை ஆற்றில் குளித்துக் கொண்டிருந்தது. அப்போது அங்கிருந்த தண்ணீரை குடிப்பதற்காக 'கஞ்சன்' (27) என்ற மற்றொரு தசரா யானை அங்கு கொண்டு வரப்பட்டது. எதிர்பாராதவிதமாக கஞ்சன் யானை திடீரென ஜெய் மார்த்தாண்டா யானையை ஆக்ரோஷமாகத் தாக்கத் தொடங்கியது. தந்தங்கள் இல்லாத ஜெய் மார்த்தாண்டா யானை, கஞ்சனின் பலத்த தாக்குதலைத் தாங்க முடியாமல் ஆற்றுக்குள்ளேயே நிலைதடுமாறி விழுந்தது.
ஆனாலும் விடாத கஞ்சன் யானை ஆக்ரோஷமாகத் துரத்த, பயந்துபோன ஜெய் மார்த்தாண்டா யானை ஆற்றை விட்டு வெளியேறி, சுற்றுலாப் பயணிகள் நின்றிருந்த பகுதியை நோக்கி அலறியடித்துக் கொண்டு ஓடியது. யானைகளின் இந்த திடீர் மோதலைக் கண்டு அதிர்ச்சியடைந்த பாகன்களால் ஆக்ரோஷமடைந்த யானைகளைக் கட்டுப்படுத்த முடியவில்லை.
Horrible
— Sumit (@SumitHansd) May 18, 2026
Woman Trampled to Death in Elephant Clash at Dubare Camp.
Juneshe, a 33-year-old homemaker from Chennai vacationing with her software engineer husband and young child, died Sunday at Dubare Elephant Camp in Karnataka's Kodagu district. pic.twitter.com/rvV5K8VPIN
யானைகள் தங்களை நோக்கி ஓடி வருவதைக் கண்டு அங்கிருந்த சுற்றுலாப் பயணிகள் நாலாபுறமும் சிதறி ஓடினர். கூட்ட நெரிசலில் தப்பி ஓட முயன்ற ஜூனேஷி, எதிர்பாராதவிதமாக நிலைதடுமாறி தரையில் விழுந்தார். அப்போது கஞ்சன் யானையின் தாக்குதலால் நிலைதடுமாறி ஓடிவந்த மார்த்தாண்டா யானை, நேராக விழுந்து கிடந்த ஜூனேஷி மீது விழுந்தது. டன் கணக்கிலான யானையின் எடையில் நசுங்கிய அவர், கணவர் மற்றும் குழந்தையின் கண் முன்னாலேயே கடுமையான காயங்களுடன் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். நல்வாய்ப்பாக அருகில் நின்றிருந்த அவரது கணவரும் குழந்தையும் காயமின்றி உயிர் தப்பினர்.
இந்த கோர விபத்து குறித்து தகவல் அறிந்ததும் வனத்துறை அதிகாரிகளும், உள்ளூர் காவல்துறையினரும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். இச்சம்பவம் குறித்து ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ள கர்நாடக வனத்துறை அமைச்சர் ஈஸ்வர் கந்த்ரே, இந்த விபத்து குறித்து விரிவான விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்.
மேலும் எதிர்காலத்தில் இதுபோன்ற அசம்பாவிதங்கள் நடக்காமல் தடுக்க, யானைகள் முகாம்களில் சுற்றுலாப் பயணிகளுக்குப் புதிய கடுமையான கட்டுப்பாடுகளை விதிக்க அரசு உத்தரவிட்டுள்ளது.
வனவிலங்குகள் எவ்வளவுதான் பழக்கப்பட்டவையாக இருந்தாலும், அவற்றின் இயற்கையான குணங்கள் எப்போது மாறும் என்று கணிக்க முடியாது என்பதற்கு இந்த துயரச் சம்பவம் ஒரு எச்சரிக்கையாக அமைந்துள்ளது. இயற்கை எழில் கொஞ்சும் துபாரே முகாமில், ஒரு குடும்பத்தின் மகிழ்ச்சி இப்படிப் பறிபோனது அங்கிருந்த ஒட்டுமொத்த சுற்றுலாப் பயணிகளையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.