சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது 5வது லீக் ஆட்டத்தில் இன்று ஏப்ரல் 14 கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர்கொள்கிறது. இந்த ஆட்டத்தில் தோனி களமிறங்குவாரா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் நிலவி வருகிறது.

இந்தியன் பிரீமியர் லீக் வரலாற்றில் சென்னை சூப்பர் கிங்ஸ் என்றாலே கிரிக்கெட் ரசிகர்களுக்கு சட்டென நினைவுக்கு வருவது மகேந்திர சிங் தோனி தான். சிஎஸ்கே அணியை பல ஆண்டுகளாக ஒரு மாபெரும் சூப்பர் ஸ்டார் அணியாக கட்டமைத்ததில் தோனியின் பங்கு முக்கியமானது. ஆனால், கடந்த இரண்டு சீசன்களாகவே காயம் மற்றும் வயது முதிர்வு காரணமாக அவரால் தனது முழு திறமையையும் வெளிப்படுத்த முடியாத நிலை இருந்து வருகிறது. இந்த நிலையில், தோனியின் ஐபிஎல் பயணத்திற்கு ஒட்டுமொத்தமாக முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் ஒரு புதிய விதிமுறையை கொண்டு வரத் திட்டமிட்டுள்ளது சிஎஸ்கே ரசிகர்கள் மத்தியில் பேரிடியாக அமைந்துள்ளது.

ஐபிஎல் தொடர் என்பது அடிப்படையில் இளம் திறமையாளர்களை கண்டறிந்து, அவர்களை இந்திய சர்வதேச அணிக்கு உருவாக்குவதற்கான ஒரு மாபெரும் தளமாகும். ஆனால், சமீப காலங்களில் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற வயது முதிர்ந்த வீரர்களும் தொடர்ந்து விளையாடி வருவதால், இளம் வீரர்களுக்கான வாய்ப்புகள் பறிக்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதனை கருத்தில் கொண்டு, பிசிசிஐ நிர்வாகிகள் குழு சமீபத்தில் ஒரு முக்கிய ஆலோசனை கூட்டத்தை நடத்தியது.
இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி, ஐபிஎல் தொடரில் இனி இளம் வீரர்களுக்கு அதிக முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்காக, ஐபிஎல் போட்டிகளில் விளையாடும் வீரர்களுக்கு அதிகபட்சமாக 43 வயது என்ற உச்சவரம்பை நிர்ணயிக்க பிசிசிஐ முடிவு செய்துள்ளது. அதாவது, 43 வயதை கடந்த எந்தவொரு வீரரும் இனி ஐபிஎல் தொடரில் விளையாட முடியாது; அவர்களுக்கு கட்டாய ஓய்வு அளிக்கப்படும் என்ற புதிய விதியை கொண்டு வர முடிவெடுக்கப்பட்டுள்ளது. இந்த அதிரடி விதிமுறை வரும் ஐபிஎல் 2027 மெகா ஏலத்திற்கு முன்பாகவே அதிகாரப்பூர்வமாக அமல்படுத்தப்படும் என தெரிகிறது. இந்த விதிமுறை மட்டும் அமலுக்கு வந்தால், மகேந்திர சிங் தோனியால் நிச்சயமாக அடுத்த ஐபிஎல் சீசனில் பங்கேற்க முடியாது. புதிய விதியின் காரணமாக அதிகாரப்பூர்வமாகவே அவர் ஐபிஎல் தொடரில் இருந்து விலக நேரிடும்.
அடுத்த வருட பிரச்சனை ஒருபுறம் இருக்க, தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வரும் ஐபிஎல் 2026 தொடரிலேயே தோனிக்கு மிகப்பெரிய சிக்கல் எழுந்துள்ளது. நடப்பு சீசனில் சென்னை அணி இதுவரை 4 போட்டிகளில் விளையாடியுள்ளது. முதல் மூன்று போட்டிகளில் தொடர் தோல்வியை சந்தித்த சிஎஸ்கே, நான்காவது போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியை வீழ்த்தி த்ரில் வெற்றி பெற்று வெற்றி பாதைக்கு திரும்பியுள்ளது. ஆனால், இந்த 4 போட்டிகளிலுமே தோனி பிளேயிங் லெவனில் இடம் பெறவில்லை. தசைப்பிடிப்பு பிரச்சனையால் அவதிப்பட்டு வரும் அவர், இன்னமும் முழுமையான உடல் தகுதியை எட்டவில்லை. அவர் முழுமையாக குணமடைய இன்னும் ஒரு வாரம் வரை ஆகலாம் என மருத்துவ குழுவினர் தெரிவித்துள்ளனர்.
ஒருவேளை தோனி முழுமையான உடல் தகுதி பெற்றாலும், தற்போதுள்ள சூழ்நிலையில் அவரை பிளேயிங் லெவனில் சேர்ப்பது சிஎஸ்கே நிர்வாகத்திற்கு மிகப்பெரிய தலைவலியாக மாறியுள்ளது. காரணம், சிஎஸ்கே அணியின் பேட்டிங் மற்றும் பந்துவீச்சு வரிசை தற்போது வலுவாகக் கட்டமைக்கப்பட்டு செட் ஆகிவிட்டது. தொடக்க வீரர்களாக சஞ்சு சாம்சன் மற்றும் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் ஆகியோர் உள்ளனர். அவர்களை தொடர்ந்து மிடில் ஆர்டரில் இளம் புயல் ஆயுஷ் மாத்ரே, சர்பராஸ் கான், சிவம் துபே, டிவால்ட் ப்ரீவிஸ் மற்றும் ஜேமி ஓவர்டன் என ஒரு அசைக்க முடியாத பட்டாளம் உருவாகியுள்ளது. இவர்கள் அனைவரும் தற்போது மிக சிறந்த ஃபார்மில் விளையாடி வருகின்றனர். கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் முதல் 4 போட்டிகளில் பெரிய அளவில் ரன் குவித்து சோபிக்கவில்லை என்றாலும், அவர் அணியின் கேப்டன் என்பதால் அவரை நீக்க முடியாது.
மற்ற எந்த வீரரை நீக்கினாலும் அது அணியின் சமநிலையை கடுமையாக பாதிக்கும். இதனால், முதல் 7 இடங்களில் எந்தவொரு மாற்றமும் செய்ய முடியாத ஒரு இக்கட்டான நிலையில் சிஎஸ்கே அணி நிர்வாகம் தவித்து வருகிறது. தற்போதைய அணியின் இந்த நெருக்கடியான நிலைமையை கேப்டன் கூலான தோனியும் மிக நன்றாகவே அறிவார். அணியின் நலனை கருத்தில் கொண்டும், ஃபார்மில் இருக்கும் இளம் வீரர்களின் வாய்ப்பை பறிக்கக் கூடாது என்பதற்காகவும் அவர் ஒரு முக்கிய முடிவை எடுக்கலாம் என தெரிகிறது. எனவே, இந்த சீசனில் தனது உடல் தகுதி முழுமையாக தேறிய பிறகு, ரசிகர்களுக்காக சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் ஏதேனும் ஒரு லீக் போட்டியில் மட்டும் அவர் களமிறங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அந்த ஒரு போட்டியோடு ஐபிஎல் தொடரில் இருந்து தனது அதிகாரப்பூர்வ ஓய்வை அவர் அறிவிக்க அதிக வாய்ப்புகள் உள்ளதாக கிரிக்கெட் விமர்சகர்கள் கணித்துள்ளனர்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ