)
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவர் பதவி காலியாக உள்ள நிலையில், இந்த தேர்தலுக்கான போட்டியில் அடுத்து யார் வருவார்கள் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. இந்நிலையில் யாரும் எதிர்பாராத விதமாக, டெல்லியின் முன்னாள் கேப்டனும், எம்.எஸ். தோனியின் முன்னாள் சிஎஸ்கே சக வீரருமான மிதுன் மன்ஹாஸ் முன்னிலை பெற்றுள்ளார். இந்த திடீர் திருப்பம் இந்திய கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
THE NEW BCCI PRESIDENT.
— Mufaddal Vohra (@mufaddal_vohra) September 20, 2025
- Mithun Manhas likely to become the new BCCI president. (Vaibhav Bhola). pic.twitter.com/wEkDKcDObN
45 வயதாகும் மிதுன் மன்ஹாஸ் 1997-98-ம் ஆண்டு முதல் உள்நாட்டு கிரிக்கெட்டில் விளையாடி வருகிறார். சச்சின் டெண்டுல்கர், ராகுல் டிராவிட், விவிஎஸ் லட்சுமணன், சவுரவ் கங்குலி போன்ற ஜாம்பவான்கள் இந்திய அணியின் மிடில்-ஆர்டரை அலங்கரித்த காலகட்டத்தில், திறமை இருந்தும் இந்திய அணியில் இடம்பிடிக்க முடியாத பல வீரர்களில் இவரும் ஒருவர்.
இருப்பினும், டெல்லி ரஞ்சி அணியின் மிக முக்கிய வீரராகவும், உத்வேகம் அளிக்கும் தலைவராகவும் மன்ஹாஸ் விளங்கினார். வீரேந்திர சேவாக், கவுதம் கம்பீர் போன்ற முன்னணி வீரர்கள் இந்திய அணிக்காக விளையாடியபோது, டெல்லி அணியை பல ஆண்டுகளாக இவரே வழிநடத்தினார். தற்போதைய சூப்பர் ஸ்டார் வீரரான விராட் கோலி கூட, தனது கிரிக்கெட் வாழ்க்கையின் ஆரம்ப காலத்தில், மன்ஹாஸின் தலைமையின் கீழ் டெல்லி அணிக்காக விளையாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
2007-08ம் ஆண்டு ரஞ்சி டிராபியை டெல்லி அணி வென்ற போது, அந்த சீசனில் 921 ரன்களை குவித்து அணியின் வெற்றிக்கு மன்ஹாஸ் முக்கியப் பங்காற்றினார். ஜம்முவில் பிறந்த இவர், கிரிக்கெட் வாய்ப்புகளுக்காக டெல்லிக்கு குடிபெயர்ந்தார். பின்னர், 2015ல் மீண்டும் ஜம்மு மற்றும் காஷ்மீர் அணிக்காக விளையாடினார்.
மிதுன் மன்ஹாஸ், ஐபிஎல் தொடரில் டெல்லி டேர்டெவில்ஸ், புனே வாரியர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் ஆகிய மூன்று அணிகளுக்காக விளையாடியுள்ளார். 2014ல் எம்.எஸ். தோனியின் தலைமையில் சிஎஸ்கே அணிக்காக அவர் விளையாடினார். விளையாட்டில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு, பஞ்சாப் அணியின் உதவி பயிற்சியாளராகவும், வங்கதேசத்தின் 19 வயதுக்குட்பட்டோருக்கான அணியின் பேட்டிங் ஆலோசகராகவும் பணியாற்றியுள்ளார். தற்போது, குஜராத் டைட்டன்ஸ் அணியின் உதவி பயிற்சியாளராக உள்ளார். மேலும், ஜம்மு மற்றும் காஷ்மீர் கிரிக்கெட் சங்கத்தின் கிரிக்கெட் செயல்பாடுகளின் இயக்குநராகவும் பணியாற்றிய அனுபவம் இவருக்கு உண்டு.
பிசிசிஐ தலைவர் பதவிக்கான வேட்புமனு தாக்கல் செய்ய இன்று ஞாயிற்றுக்கிழமை கடைசி நாள். கடந்த சில ஆண்டுகளாக முன்னாள் கிரிக்கெட் வீரர்களே சவுரவ் கங்குலி, ரோஜர் பின்னி போன்றோர் பிசிசிஐ தலைவராக போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டு வரும் நிலையில், மன்ஹாஸின் பெயர் முன்னிலையில் இருப்பது முக்கியத்துவம் பெறுகிறது. அவர் தேர்ந்தெடுக்கப்பட்டால், இந்திய அணிக்காக விளையாடாத ஒருவர் பிசிசிஐயின் தலைவராவது இதுவே முதல் முறையாக இருக்கும்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ