)
Harbajan Singh Slapped Sreeshanth Video Viral: 2008ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரின் முதல் சீசனின் போது பெரும் சர்ச்சைக்குரிய சம்பவம் ஒன்று நடைபெற்றது. இந்திய அணியின் மூத்த சுழற்பந்துவீச்சாளராக இருந்த ஹர்பஜன் சிங், இந்திய வீரர் ஸ்ரீசாந்தை கன்னத்தில் அறைந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.
இந்த சம்பவம் கிரிக்கெட் உலகையே உலுக்கியிருந்தாலும் இந்த சம்பவத்தின் காட்சிகள் இதுவரை வெளியாகவில்லை. அப்படியிருக்க தற்போது முன்னாள் ஐபிஎல் ஆணையர்களில் ஒருவரான லலித் மோடி, ஸ்ரீசாந்தை ஹர்பஜன் அறைந்த அந்த வீடியோவை வெளியிட்டுள்ளார். ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் கேப்டன் மைக்கெல் கிளார்க் உடனான பாட்காஸ்ட் நிகழ்ச்சியின் போது, லலித் மோடி இந்த வீடியோவை வெளியிட்டுள்ளார்.
கடந்த 2008ஆம் ஆண்டு நடந்த இந்த சம்பவத்தை Slap-Gate சர்ச்சை என பொதுவாக அழைப்பார்கள். அப்போது கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கும் (இப்போது பஞ்சாப் கிங்ஸ்) மும்பை இந்தியன்ஸ் அணிக்கும் இடையிலான போட்டியின்போது இச்சம்பவம் நடந்திருக்கிறது. போட்டி முடிந்த பின்னர், வீரர்கள் கைக்குழுக்கிக் கொண்டபோது, ஹர்பஜன் சிங் தனது புறங்கையால் ஸ்ரீசாந்தின் கன்னத்தில் அறைந்தார். இதுகுறித்து பேசிய லலித் மோடி, "போட்டி முடிந்துவிட்டது. அனைத்து கேமராக்களும் அணைக்கப்பட்டுவிட்டன. ஒரே ஒரு பாதுகாப்பு கேமராவில் மட்டுமே அந்த சம்பவம் பதிவானது. ஹர்பஜன் ஸ்ரீசாந்திடம், 'இங்கே வா' என கூப்பிட்டு புறங்கையால் கன்னத்தில் அறைந்தார்" என விவரித்தார்.
Bhajji vs Sreesanth
— Sudhir Dahiya (@isudhirdahiya) August 29, 2025
This is the video which was not made public till date. It was reported that Bhajji slapped Sreesanth in this IPL match Who made this video public after so many years? Michael Clarke is probably seen at the end of the video. pic.twitter.com/W3PD4QIG6M
ஸ்ரீசாந்த் இந்த சம்பவத்தின் போது அழுது கண்ணீர் விடும் காட்சி பலருக்கும் நினைவில் இருக்கும். 17 வருடங்களாக யாருமே பார்க்காத காட்சிகள் தற்போது வெளியாகி இணையத்தில் பரபரப்பை கிளப்பியிருக்கிறது. அந்த வீடியோவில் ஸ்ரீசாந்த் கண்ணீருடன் நிற்க, ஹர்பஜன் மீண்டும் தகராறு செய்ய வந்தபோது, பஞ்சாப் அணியின் சக வீரர்கள் இர்பான் பதான், மஹேலா ஜெயவர்தனே ஆகியோர் இருவரையும் விலக்கிவிட்டனர்.
2008ஆம் ஆண்டு ஏப்ரல் 25ஆம் தேதி அன்று மொஹாலியில் நடந்த போட்டியின்போதே இச்சம்பவம் நடந்தது. அந்த போட்டியில் பஞ்சாப் 66 ரன்கள் வித்தியாசத்தில் மும்பையை வீழ்த்தியது. அந்த போட்டியில் சச்சின் இல்லாத நிலையில், ஹர்பஜன் சிங் கேப்டன்ஸியை கவனித்துக்கொண்டார். வெற்றிக்கு பின் ஸ்ரீசாந்த் சிரித்துக்கொண்டே ஹர்பஜன் சிங்கிடம் "Hard Luck" என சொல்லியுள்ளார். இது அவரை இன்னும் கொந்தளிக்க வைத்துள்ளது. மேலும் ஷான் பொல்லாக்கை அவுட்டாக்கிய பின் ஸ்ரீசாந்த் ஆக்ரோஷம் காட்டி உள்ளார். மேலும், ராபின் உத்தப்பா உடன் மோதி உள்ளார். இவை அனைத்தும் ஹர்பஜனுக்கு தலைக்கேறி அவர் ஸ்ரீசாந்தை கன்னத்தில் அறைந்துள்ளார்.
இச்சம்பவம் குறித்து பல ஆண்டுகளுக்கு பின் அஸ்வின் உடனான யூ-ட்யூப் உரையாடலின்போது பேசிய ஹர்பஜன் சிங், "எனது வாழ்க்கையில் ஒரு சம்பவத்தை நான் மாற்ற வேண்டும் என நினைத்தால் அது ஸ்ரீசாந்தை அறைந்த சம்பவம்தான். அது மிகவும் தவறானது. நான் அப்படி செய்திருக்கக் கூடாது. நான் 200 முறை மன்னிப்பு கேட்டிருப்பேன்" என்று அவர் பேசியிருந்தார்.
மேலும் மற்றொரு தருணத்தில் ஸ்ரீசாந்தின் மகளை சந்திக்கும் வாய்ப்பு ஹர்பஜனுக்கு கிடைத்துள்ளது. அப்போது ஸ்ரீசாந்தின் மகள், "உங்களுடன் நான் பேச விரும்பவில்லை. நீங்கள் எனது தந்தையே அடித்துள்ளீர்கள்" என கூறியிருக்கிறார். இது ஹர்பஜனுக்கு நீங்காத வடுவை ஏற்படுத்தி உள்ளது. ஸ்ரீசாந்தை அறைந்த காரணத்தினால் ஹர்பஜன் சிங்கிற்கு 11 போட்டிகளில் தடை விதிக்கப்பட்டது. மேலும் ஆஸ்திரேலியாவில் அவர் Monkey Gate பிரச்னையில் சிக்கிய சில மாதங்களிலேயே இந்த சர்ச்சையிலும் சிக்கியது குறிப்பிடத்தக்கது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ