)
நேற்று இந்திய மகளிர் கிரிக்கெட் வரலாற்றில் ஒரு முக்கியமான நாளாக மாறியுள்ளது. நவிமும்பையில் நடைபெற்ற 2025 ஆம் ஆண்டுக்கான ஒருநாள் உலக கோப்பை இறுதி போட்டியில், தென்னாப்பிரிக்காவை 52 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி, ஹர்மன்ப்ரீத் கவுர் தலைமையிலான இந்திய அணி முதல் முறையாக உலக சாம்பியன் பட்டத்தை வென்று வரலாறு படைத்துள்ளது. இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றிக்கு பிறகு, இந்திய அணி மீது பண மழை பொழிந்து வருகிறது. சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் மற்றும் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் ஆகிய இரண்டும் இணைந்து, இதுவரை மகளிர் கிரிக்கெட் கண்டிராத மிகப்பெரிய பரிசு தொகையை அறிவித்துள்ளன.
A special moment!
— BCCI (@BCCI) November 2, 2025
ICC Chairman Mr. Jay Shah presents the ICC Women's Cricket World Cup 2025 Trophy to our winning captain Harmanpreet Kaur @JayShah | @ImHarmanpreet
#TeamIndia | #WomenInBlue | #CWC25 | #INDvSA | #Champions pic.twitter.com/wETVXoMNnA
மகளிர் கிரிக்கெட்டின் வளர்ச்சியை பறைசாற்றும் விதமாக, இந்த உலக கோப்பைத் தொடருக்கு ஐசிசி வரலாறு காணாத வகையில் மொத்தமாக 13.88 மில்லியன் அமெரிக்க டாலர்களை சுமார் ரூ.123 கோடி பரிசு தொகையாக அறிவித்துள்ளது. இது 2022 ஆம் ஆண்டு வழங்கப்பட்ட தொகையை விட கிட்டத்தட்ட நான்கு மடங்கு அதிகமாகும். மேலும், 2023 ஆம் ஆண்டு நடைபெற்ற ஆடவர் உலக கோப்பையின் பரிசு தொகையை (10 மில்லியன் டாலர்) விடவும் இது அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த மொத்த பரிசுத் தொகையிலிருந்து, உலக சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணிக்கு 4.48 மில்லியன் அமெரிக்க டாலர்கள் சுமார் ரூ.39.7 கோடி வழங்கப்படும். இது மகளிர் கிரிக்கெட் வரலாற்றில் ஒரு அணி பெறும் மிகப்பெரிய பரிசு தொகையாகும். இறுதி போட்டியில் இரண்டாம் இடம் பிடித்த தென்னாப்பிரிக்க அணிக்கு 2.24 மில்லியன் அமெரிக்க டாலர்கள் சுமார் ரூ.19.8 கோடி கிடைக்கும். அரையிறுதியில் தோல்வியடைந்த ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகள் தலா 1.12 மில்லியன் அமெரிக்க டாலர்களை சுமார் ரூ.9.9 கோடி பெறும்.
ஐசிசி-யின் பரிசு தொகையைத் தாண்டி, உலகின் மிகப்பெரிய பணக்கார கிரிக்கெட் வாரியமான பிசிசிஐ, இந்திய மகளிர் அணிக்கு ஜாக்பாட் பரிசை அறிவிக்கத் திட்டமிட்டுள்ளது. இந்திய கிரிக்கெட்டில் பாலின சமத்துவத்தை நிலைநிறுத்தும் ஒரு முக்கிய நடவடிக்கையாக, 2024 ஆம் ஆண்டு டி20 உலக கோப்பையை வென்ற இந்திய ஆடவர் அணிக்கு வழங்கப்பட்டதை போலவே, மகளிர் அணிக்கும் ரூ.125 கோடி ரூபாய் போனஸாக வழங்க பிசிசிஐ ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த முடிவு எடுக்கப்பட்டால், இந்திய மகளிர் கிரிக்கெட்டில் இது ஒரு புதிய சகாப்தத்தின் தொடக்கமாக அமையும்.
2017 ஆம் ஆண்டு உலக கோப்பை இறுதி போட்டியில் தோல்வியடைந்தபோது, ஒவ்வொரு வீராங்கனைக்கும் தலா ரூ.50 லட்சம் மட்டுமே பரிசாக வழங்கப்பட்டது. ஆனால், இன்றைய வெற்றிக்கு பிறகு அறிவிக்கப்பட்டுள்ள இந்த கோடிக்கணக்கான பரிசு தொகை, கடந்த சில ஆண்டுகளில் இந்தியாவில் மகளிர் கிரிக்கெட் அடைந்துள்ள அபரிமிதமான வளர்ச்சியை காட்டுகிறது. இந்த வெற்றி மற்றும் அங்கீகாரம், மகளிர் கிரிக்கெட்டை ஒரு தொழிலாக தேர்ந்தெடுக்க மிகப்பெரிய உத்வேகத்தை அளிக்கும் என்பதில் சந்தேகமில்லை.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ