உப்புச்சப்பு இல்லாமல் முடிந்த ஓடிஐ தொடர்... இந்திய அணிக்கு இதனால் என்ன பயன்?

India vs England: இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடரை 3-0 என்ற கணக்கில் இந்திய அணியில் வென்றுள்ளது. இதனால், சாம்பியன்ஸ் டிராபியில் இந்திய அணிக்கு கிடைத்த நன்மைகள் என்ன என்பதை இங்கு காணலாம்.

Written by - Sudharsan G | Last Updated : Feb 12, 2025, 09:26 PM IST
  • இந்தியா 3-0 என்ற கணக்கில் தொடரை வென்றது.
  • சுப்மான் கில் ஆட்ட நாயகன் மற்றும் தொடர் நாயகன் விருதுகளை வென்றார்.
  • சாம்பியன்ஸ் டிராபியில் பிப். 20இல் வங்கதேசத்திற்கு எதிரான போட்டியில் இந்தியா விளையாடுகிறது.
உப்புச்சப்பு இல்லாமல் முடிந்த ஓடிஐ தொடர்... இந்திய அணிக்கு இதனால் என்ன பயன்?

India vs England: இந்திய அணியுடன் 5 டி20 போட்டிகள், 3 ஒருநாள் போட்டிகளில் விளையாட இங்கிலாந்து அணி இங்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டது. ஜன. 22ஆம் தேதி தொடங்கிய இந்த சுற்றுப்பயணம், இன்றுடன் நிறைவுபெற்றிருக்கிறது. சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு முன் நடைபெறுவதால் இந்த தொடர் மீது எதிர்பார்ப்பு அதிகம் இருந்தது.

Add Zee News as a Preferred Source

சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி 4-1 என்ற கணக்கில் டி20 தொடரையும், ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி 3-0 என்ற கணக்கில் ஓடிஐ தொடரையும் வென்று இங்கிலாந்து அணியை கதிகலங்க வைத்துள்ளனர். இந்திய அணியை போன்று ஓடிஐ, டி20இல் வெவ்வேறு வீரர்கள் இடம்பெறவில்லை. பெரும்பாலும் ஒரே வீரர்கள்தான் இரண்டு பார்மட்களிலும் விளையாடினர். இதே அணிதான் அடுத்து சாம்பியன்ஸ் டிராபி தொடருக்காக பாகிஸ்தானுக்கு பறக்க உள்ளது.

India vs England: ஏன் இந்த தொடர் மிகவும் முக்கியம்?

அப்படியிருக்க, இங்கிலாந்து அணிக்கு எதிரான ஓடிஐ தொடரை வைட்வாஷ் செய்தது இந்திய அணிக்கு சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு முன் மிகுந்த நம்பிக்கையையே அளிக்கும் எனலாம். சாம்பியன்ஸ் டிராபி தொடரை இங்கிலாந்து அணி பாகிஸ்தானிலும், இந்திய அணி துபாயிலும் விளையாட இருக்கின்றன. இந்திய அணியுடன் நாக்-அவுட் சுற்றுகளில் மோதினால் மட்டுமே இங்கிலாந்து அணி துபாய் செல்ல நேரிடும்.

மேலும் படிக்க | சுப்மன் கில் செய்த அபார சாதனை..! இதுவரை எந்த இந்திய பிளேயரும் செய்யவில்லை

எனவே, இந்தியாவில் நடந்த போட்டியால் இரு அணிகளுக்குமே பலன் இல்லையே என்பதுதான் பல ரசிகர்களின் வாதமாக இருக்கிறது. ஆனால் அப்படி இல்லை. இங்கிலாந்து அணி 3 போட்டிகளிலும் மோசமாக தோற்றிருந்தாலும் அந்த அணி சாம்பியன்ஸ் டிராபியில் சிறப்பாக செயல்பட்டு அரையிறுதிக்கு முன்னேற அதிக வாய்ப்புள்ளது.

India vs England: இங்கிலாந்துக்கு கிடைத்த பயன்கள்

காரணம் பாகிஸ்தானில் ஆடுகளம் பேட்டிங்கிற்கு சாதகமாகவே இருக்கும். கடந்த முறை பாகிஸ்தானில் ஓடிஐ தொடரை விளையாடி அதனை இங்கிலாந்து அணியே வென்றது. இந்த தொடரில் சிறப்பான பேட்டிங் காம்பினேஷனை இங்கிலாந்து அணி கண்டறிந்துள்ளது நாம் கவனிக்கத்தக்கது.

India vs England: இந்திய அணி மீது இருந்த சந்தேகங்கள்

தோல்வியடைந்த இங்கிலாந்து அணிக்கே இந்த தொடர் பெரியளவில் உதவியிருக்கும் போது இந்திய அணிக்கு மட்டுமே உதவாமல் போகுமா என்ன...? இந்திய அணி மீது இந்த தொடர் தொடங்குவதற்கு முன்பு பல்வேறு கேள்விகள் இருந்தன. ரோஹித் - விராட் பார்ம், சுப்மான் கில்லுக்கு துணை கேப்டன் பதவி கொடுக்கப்பட்டது ஏன்?, நம்பர் 4 வீரர் யார்?, விக்கெட் கீப்பர் பேட்டர் யார்?, பும்ரா விளையாடாவிட்டால் அவருக்கான மாற்று யார்?, ஆல்-ரவுண்டர்களில் பிளேயிங் லெவனில் விளையாடப்போவது யார்?, ஜெய்ஸ்வாலுக்கு பிளேயிங் லெவனில் இடமிருக்குமா?, பந்துவீச்சு காம்பினேஷன் எப்படி இருக்கும் என பல கேள்விகள் இருந்தன.

மேலும் படிக்க | சாம்பியன்ஸ் டிராபிக்கு பிறகு ஓய்வை அறிவிக்கும் 5 முக்கிய வீரர்கள்!

India vs England: இந்தியாவுக்கு இதில் என்ன பயன்?

இந்த சந்தேகங்கள், கேள்விகள் அனைத்திற்கும் இந்த தொடரில் ரோஹித் சர்மா, கௌதம் கம்பீர் ஆகியோருக்கு மட்டுமின்றி கிரிக்கெட் வல்லுநர்களுக்கும் பதில் கிடைத்துள்ளது. ரோஹித்தின் சதம், விராட் கோலியின் இன்றைய அரைசதம் ஆகியவை அவர்களது பார்ம் குறித்த கேள்வியை துவம்சம் செய்துவிட்டது. கில் தொடர் நாயகன் விருதை வென்றுள்ளார். ஷ்ரேயாஸ் 2 அரைசதங்களை அடித்து நம்பர் 4 இடத்தை தனதாக்கிவிட்டார். கேஎல் ராகுல்தான் விக்கெட் கீப்பர் பேட்டர் என்பதும் இன்று உறுதியாகிவிட்டது.

ஜடேஜா, அக்சர் பட்டேலுக்கு பிளேயிங் லெவனில் இடம் என்பது முதல் போட்டியிலேயே தெரிந்துவிட்டது. பும்ராவுக்கு மாற்று பும்ரா மட்டும்தான். எனவே, ஹர்ஷித் ராணா சரியான மாற்று இல்லை என கூறினாலும் அவர் இந்திய அணிக்கு பழைய பந்தில் கைக்கொடுக்கிறார். தொடக்கக் கட்ட போட்டிகளில் ஹர்ஷித் ராணாவுக்கு வாய்ப்பில்லை என்றாலும் ஷமி - அர்ஷ்தீப் ஆகியோரில் யாராவது சொல்லிக்கொள்ளும்படி பந்துவீசாவிட்டால் உடனே ஹர்ஷித் உள்ளே வந்துவிடுவார்.

India vs England: சாம்பியன்ஸ் டிராபிக்கு உதவுமா?

ஆடுகளத்தில் சிற்சில மாற்றங்கள் துபாயில் இருக்கும் என்றாலும் இந்திய அணி வீரர்கள் அங்கு விரைவாக அதற்கேற்ப மாற்றிக்கொள்வார்கள் எனலாம். வங்கதேச அணிக்கு எதிரான முதல் போட்டி அந்த சூழலை புரிந்துகொள்ள அவர்களுக்கு உதவியாக இருக்கும். இந்திய அணிக்கு இன்னும் சில சிக்கல்களும், பிரச்னைகளும் இருக்கிறது என்றாலும் அதற்கான அனுபவங்களையும், திருத்த வேண்டிய இடங்களையும் இந்த இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடர் உணர்த்தியிருக்கிறது என்பதும் மறுப்பதற்கில்லை.

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

About the Author

Sudharsan G

I’m Sudharsan G, Sub Editor at Zee Tamil News, with over five years of experience in Tamil content writing. I cover Tamil Nadu, national, and international news, along with sports stories that connect with readers. A follower of cricket, cinema, and politics, I bring depth and perspective to every piece. I also have on-screen camera experience, which helps me present news stories in a more engaging and impactful way. Outside work, I enjoy modern Tamil literature and discovering new voices in contemporary writing.

...Read More

Trending News