Lalit Modi : இந்தியன் பிரீமியர் லீக் எனும் பிரம்மாண்ட கிரிக்கெட் திருவிழாவைத் தொடங்கி வைத்த லலித் மோடி, இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்தின் (ECB) ஒரு முக்கிய கிரிக்கெட் தொடர் இன்னும் மூன்று ஆண்டுகளில் முற்றிலும் காணாமல் போய்விடும் என்று அதிரடியாகத் தெரிவித்துள்ளார். இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்தால் நடத்தப்படும் 100 பந்துகள் கொண்ட 'தி ஹண்டர்ட்' கிரிக்கெட் தொடர் குறித்து மைக்கேல் வாகன் உடனான நேர்காணலில் லலித் மோடி கடுமையாக விமர்சித்துள்ளார். அவர் கூறுகையில், "இந்தத் தொடர் அடுத்த மூன்று ஆண்டுகளில் முழுமையாக அழிந்துவிடும். இதற்கு நான் கேரண்டி தருகிறேன். இதற்காக எவ்வளவு பணத்தைக் கொட்டினாலும் இதற்கு எதிர்காலம் கிடையாது," என்று கூறியுள்ளார்.
ஏன் இந்த தி ஹண்டர்ட் இருக்காது?
பள்ளிகளில் குழந்தைகள் கற்கும் கிரிக்கெட் விதிகளையே இந்த 100 பந்து கிரிக்கெட் மாற்றுகிறது. இது ரசிகர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்துகிறது. ஐபிஎல் தொடரை அல்லது லலித் மோடியை நகலெடுக்கக் கூடாது என்ற ஈகோ காரணத்தினால் மட்டுமே ECB இந்த வினோதமான 100 பந்து முறையைக் கொண்டு வந்ததாக அவர் சாடியுள்ளார். இந்தத் தொடருக்கு சரியான விளம்பரம் அல்லது மார்க்கெட்டிங் கிடையாது. ஸ்கை ஸ்போர்ட்ஸ் (Sky Sports) போன்ற ஒளிபரப்பு நிறுவனங்களுக்கு இதை விளம்பரப்படுத்தப் போதிய காரணங்கள் இல்லை.
வருமானம் இல்லாத தொடர்
"எந்தவொரு லீக் தொடரும் ஒளிபரப்பு உரிமம் (Media Rights) மூலமே லாபம் ஈட்டும். ஆனால், இங்கிலாந்து சந்தையில் தற்போது கிரிக்கெட்டை விட கால்பந்து மற்றும் ஃபார்முலா 1 பந்தயங்கள் வேகமாக வளர்ந்து வருகின்றன. மக்கள் தங்கள் பணத்தைச் செலவழித்து 'தி ஹண்டர்ட்' தொடரைப் பார்க்கத் தயாராக இல்லை," என மோடி சுட்டிக்காட்டினார். மேலும், இந்திய ரசிகர்கள் நள்ளிரவில் எழுந்து அமர்ந்து இந்தத் தொடரைப் பார்க்க மாட்டார்கள் என்பதால் சர்வதேசச் சந்தையிலும் இதற்கு வரவேற்பு இல்லை என்கிறார்.
2 பில்லியன் டாலர் ஆஃபரை நிராகரித்த இங்கிலாந்து வாரியம்
இந்த நேர்காணலில் லலித் மோடி ஒரு ரகசியத்தையும் உடைத்துள்ளார். இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்தின் ஆகஸ்ட் மாத கால இடைவெளியைப் பயன்படுத்தி ஒரு பிரம்மாண்ட டி20 லீக் நடத்த அவர் முன்வந்துள்ளார். இதற்காக சுமார் 2 பில்லியன் டாலர் (சுமார் ₹18,645 கோடி) மதிப்பிலான ஒப்பந்தத்தை அவர் இங்கிலாந்து வாரியத்திடம் முன்மொழிந்ததாகத் தெரிவித்துள்ளார். "நான் முன்மொழிந்த திட்டம் இங்கிலாந்து பிரீமியர் லீக் (EPL) போல ஒரு சுதந்திரமான அமைப்பாக இருந்திருக்கும். ஆனால், அந்தத் திட்டத்தை நான் கொண்டு வந்தேன் என்ற ஒரே காரணத்திற்காக இங்கிலாந்து வாரியம் அதை நிராகரித்துவிட்டது," என அவர் வருத்தத்துடன் தெரிவித்தார்.
மாற்றுத் திட்டம் என்ன?
இங்கிலாந்தின் 100 பந்து கிரிக்கெட்டிற்குப் பதிலாக, அங்கு ஏற்கனவே புகழ்பெற்ற டி20 பிளாஸ்ட் தொடரைத் தனியார்மயமாக்கி இருந்தால் அது மிகப்பெரிய வெற்றியைப் பெற்றிருக்கும் என்பது மோடியின் கருத்து. 18 கவுண்டி அணிகளில் தனியார் முதலீடுகளை ஊக்குவித்து, சினிமா நட்சத்திரங்களை உரிமையாளர்களாகக் கொண்டு வந்திருந்தால் இங்கிலாந்து கிரிக்கெட் இன்று உலக அளவில் முதன்மையாக இருந்திருக்கும் என்று அவர் கூறியுள்ளார். தற்போது 'தி ஹண்டர்ட்' தொடரில் முதலீடு செய்துள்ளவர்கள் விரைவில் ஏமாற்றத்தைச் சந்திப்பார்கள் என்றும், இந்தத் தொடர் அதன் முடிவை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது என்றும் லலித் மோடி எச்சரித்துள்ளார்.
மேலும் படிக்க: நடப்பு ஐபிஎல் தொடரில் சொதப்பும் டாப் 5 பிளேயர்கள்! ரிஷப் பந்த் டூ கேம்ரூன் கிரீன்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!









