)
வரவிருக்கும் அயர்லாந்து மற்றும் இங்கிலாந்துக்கு எதிரான டி20 கிரிக்கெட் தொடர்களுக்கான இந்திய அணியில் இருந்து, முன்னணி வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜுக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து போட்டிகளில் விளையாடி வருவதால் ஏற்பட்டுள்ள பணிச்சுமையை குறைக்கும் பொருட்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இந்திய அணி இந்தச் சுற்றுப்பயணத்தில் மொத்தம் 7 டி20 போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் பங்கேற்க உள்ளது. முன்னதாக, ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் தொடரிலும் சிராஜுக்கு ஓய்வு வழங்கப்பட்டிருந்தது. எனினும், ஜஸ்பிரித் பும்ரா அணியில் இல்லாத காரணத்தால், அயர்லாந்து மற்றும் இங்கிலாந்துக்கு எதிரான தொடர்களில் அவர் சேர்க்கப்பட்டிருந்தார். மேலும், ஆசிய விளையாட்டு போட்டிகளுக்கான இந்திய அணியிலும் சிராஜ் இடம் பெறாத நிலையில், தற்போது இந்த டி20 தொடர்களிலிருந்தும் அவர் விடுவிக்கப்பட்டுள்ளார்.
சமீபத்தில் முடிந்த 2026 ஐபிஎல் தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக 17 போட்டிகளில் விளையாடியது மற்றும் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஒரே ஒரு டெஸ்ட் போட்டியில் பங்கேற்றது எனத் தொடர்ச்சியாக விளையாடியதே சிராஜின் பணிச்சுமை அதிகரித்தற்கு காரணமாக கூறப்படுகிறது.
"மருத்துவ குழு மற்றும் அணி நிர்வாகத்தின் ஆலோசனையின்படி, பணிச்சுமை மேலாண்மைத் திட்டத்தின் கீழ் சிராஜுக்கு இந்த ஓய்வு வழங்கப்பட்டுள்ளது. வரவிருக்கும் நீண்ட சர்வதேச கிரிக்கெட் சீசனை எதிர்கொள்ளும் வகையில், அவர் முழுமையாக குணமடைந்து புத்துணர்ச்சி பெறுவதை உறுதி செய்யவே இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது" என்று பிசிசிஐ தெரிவித்துள்ளது.
சிராஜுக்கு மாற்றாக வேகப்பந்து வீச்சாளர் பிரசித் கிருஷ்ணா அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். கடந்த 2023ல் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் அதிக ரன்களை வாரி வழங்கி விமர்சனத்திற்கு உள்ளான பிரசித், அதன் பிறகு தனது பந்துவீச்சை வெகுவாக மேம்படுத்தியுள்ளார். குறிப்பாக, 2025 ஐபிஎல் தொடரில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தி 'பர்பிள் கேப்' வென்றதும், நடப்பு 2026 சீசனில் 16 விக்கெட்டுகளைக் கைப்பற்றியதும் அவர் மீண்டும் இந்திய அணிக்குத் திரும்ப வழிவகுத்துள்ளது.
ஸ்ரேயாஸ் ஐயர் (கேப்டன்), திலக் வர்மா (துணை கேப்டன்), அபிஷேக் சர்மா, சஞ்சு சாம்சன், இஷான் கிஷன், சிவம் துபே, நிதிஷ் குமார் ரெட்டி, அக்சர் படேல், வாஷிங்டன் சுந்தர், வருண் சக்கரவர்த்தி, ரவி பிஷ்னோய், ஹர்ஷித் ரானா, அர்ஷ்தீப் சிங், பிரின்ஸ் யாதவ், வைபவ் சூர்யவன்ஷி, பிரசித் கிருஷ்ணா.
ஜூலை 1 முதல் இங்கிலாந்துக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர். இத்தொடரின் கடைசி போட்டி ஜூலை 11 ஆம் தேதி நடைபெறுகிறது.