கடந்த பிப்ரவரி 19ஆம் தேதி தொடங்கிய சாம்பியன்ஸ் டிராபி தொடர் தற்போது இறுதி கட்டத்தை எட்டி உள்ளது. இரண்டு அரை இறுதி போட்டிகள் முடிவடைந்த நிலையில், வரும் ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 09) இறுதி போட்டியானது நடைபெற உள்ளது.
தென்னாப்பிரிக்க vs நியூசிலாந்து
முதல் அரை இறுதி போட்டியில் ஆஸ்திரேலியா அணியை வீழ்த்தி இந்திய அணி இறுதி போட்டிக்கு முன்னேறியது. இதனைத் தொடர்ந்து இந்தியாவுடன் மோத இருக்கும் அணியை தீர்மாணிக்கும் இரண்டாவது அரை இறுதி போட்டி நேற்று (மார்ச் 05) நடைபெற்றது. பாகிஸ்தானின் லாகூர் கராச்சி மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் நியூசிலாந்து அணியின் கேப்டன் மிட்செல் சண்ட்னர் டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்தார்.
அதன்படி நியூசிலாந்து அணி களம் இறங்கி பேட்டிங் செய்தது. சிறப்பாக பேட்டிங் செய்த அந்த அணி 50 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்கள் இழப்பிற்கு 362 ரன்கள் குவித்தது. முதலில் வில் யங் ஆட்டமிழந்தாலும், அடுத்ததாக ஜோடி சேர்ந்த ரச்சின் - வில்லியம்சன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி சதம் விளாசினர். ரச்சின் ரவீந்திரா 108 ரன்களும், வில்லியம்சன் 102 ரன்களும் விளாசினர்.
இறுதி வரை போராடிய மில்லர்
இதனைத் தொடர்ந்து 363 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய தென்னாப்பிரிக்கா அணி டெம்பா பவுமா, வென் டர் டூசென் ஆட்டமிழப்பிற்கு பிறகு கடுமையாக சொதப்பியது. இதனால் நியூசிலாந்து அணியின் பக்கம் வெற்றிப்பாதை திரும்பியது. மறுபக்கம் தொடர்ந்து தென்னாப்பிரிக்கா அணி வீரர்கள் விக்கெட்களை இழந்து வந்தாலும், டேவிட் மில்லர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி சதம் விளாசினார். இருப்பினும் தென்னாப்பிரிக்கா அணியால் 50 ஓவர்கள் முடிவில் 312 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதனால் நியூசிலாந்து அணி 50 ரன்கள் வித்தியாசத்தி வெற்றிப் பெற்றதுடன் இறுதி போட்டிக்கும் முன்னேறி உள்ளது.
மார்ட் 09ஆம் தேதி இறுதி போட்டி
இறுதி போட்டியில் இந்திய அணியை எதிர்கொள்ள இருக்கிறது நியூசிலாந்து அணி. இப்போட்டி மார்ச் 09 ஆம் தேதி நடைபெற உள்ளது. இறுதி போட்டிக்கு இந்திய அணி முன்னேறி உள்ளதால், போட்டி துபாயிலேயே நடைபெறும். இரு அணிகளும் பலமான அணி என்பதால் கடும் போட்டி நிலவக்கூடும். நியூசிலாந்து அணி கடைசியாக 2000ம் ஆண்டில் சாம்பியன்ஸ் டிராபி கோப்பையை கைப்பற்றியது. கோப்பை வென்று 25 ஆண்டுகள் ஆன காரணத்தினால் இம்முறை கண்டிப்பாக வெல்ல வேண்டும் என்ற முனைப்புடன் களம் இறங்கும்.
மறுபுறம் இந்திய அணி 2013ஆம் ஆண்டில் சாம்பியன்ஸ் டிராபி தொடர் கோப்பையை வென்றது. ரோகித் சர்மாவின் தலைமையில் இந்திய அணி அனைத்து விதமான ஐசிசி தொடர்களிலும் இறுதி போட்டியை எட்டி உள்ளது. எந்த கேப்டனும் செய்யாத சாதனையை ரோகித் சர்மா நிகழ்த்தி உள்ளார். மேலும், 2023ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பை இறுதி போட்டியில் தோற்றதை, இந்த சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இறுதி போட்டியில் வென்று சரிகட்ட நினைக்கும்.
கணிக்கப்பட்ட இரு அணிகளுக்கான பிளேயிங் 11
இந்தியா: ரோஹித் சர்மா (கேப்டன்), சுப்மான் கில், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், அக்சர் படேல், கே.எல். ராகுல் (விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, முகமது ஷமி, குல்தீப் யாதவ், வருண் சக்ரவர்த்தி.
நியூசிலாந்து: வில் யங், ரச்சின் ரவீந்திரா, கேன் வில்லியம்சன், டேரில் மிட்செல், டாம் லாதம் (விக்கெட் கீப்பர்), க்ளென் பிலிப்ஸ், மைக்கேல் பிரேஸ்வெல், மிட்செல் சாண்ட்னர் (கேப்டன்), மேட் ஹென்றி, கைல் ஜேமிசன், வில்லியம் ஓரூர்க்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









