ரிஷப் பண்ட் விலகல்? - ஷாக்கில் இந்திய அணி... 10 பேர் படையால் வெற்றி கிடைக்குமா?

Rishabh Pant Injury: இங்கிலாந்து அணிக்கு எதிராக இந்திய அணி வீரர் ரிஷப் பண்டுக்கு காயம் ஏற்பட்டுள்ள நிலையில் அவர் 4வது போட்டியில் இருந்து விலகவே அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

Written by - Sudharsan G | Last Updated : Jul 24, 2025, 08:35 AM IST
  • ரிஷப் பண்ட் வலது கணுக்கால் பகுதியில் காயம்
  • அவரது கணுக்கால் பகுதியில் இருந்து ரத்தம் வந்தது
  • மேலும் காயம்பட்ட இடம் உடனே வீக்கம் கண்டது.
ரிஷப் பண்ட் விலகல்? - ஷாக்கில் இந்திய அணி... 10 பேர் படையால் வெற்றி கிடைக்குமா?

India vs England, Rishabh Pant Injury: இங்கிலாந்து - இந்தியா அணிகளுக்கு இடையிலான 4வது டெஸ்ட் போட்டி மான்செஸ்டர் நகரில் உள்ள ஓல்ட் டிராஃபோர்ட் கிரிக்கெட் மைதானத்தில் நேற்று (ஜூலை 24) தொடங்கியது. நடப்பு ஆண்டர்சன் - டெண்டுல்கர் கோப்பை தொடரில் இந்திய அணி 1-2 என பின்தங்கியிருக்கும் சூழலில், இந்த போட்டியில் வென்று தொடரை சமநிலையாக்கும் வியூகத்துடன் களமிறங்கி உள்ளது.

Add Zee News as a Preferred Source

India vs England: 4வது டெஸ்டில் செய்யப்பட்ட மாற்றங்கள்

நடப்பு தொடரில் 4வது முறையாக டாஸை இந்தியா தோற்றது. தொடர்ந்து இந்தியாவை முதலில் பேட்டிங் செய்யும்படி இங்கிலாந்து பணித்தது. இங்கிலாந்து அணி சோயப் பஷீருக்கு பதில் லியம் டாவ்சனை அணிக்குள் கொண்டுவந்தது. இந்திய அணி பெரிய மாற்றங்களைச் செய்திருக்கிறது. காயத்தால் வெளியேறிய நிதிஷ்குமார் ரெட்டி மற்றும் ஆகாஷ் தீப் யாருக்கு பதில் ஷர்துல் தாக்கூர் மற்றும் அன்ஷுல் கம்போஜை சேர்த்துள்ளது. தொடர்ந்து 3 போட்டிகளாக பெரிய ஸ்கோரை எட்டாத கருண் நாயருக்கு பதில் சாய் சுதர்சனுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது.

India vs England: இந்திய அணி நிதான ஆட்டம் 

நேற்றைய நாள் ஆட்ட நேர முடிவில் (83 ஓவர்கள்) இந்திய அணி 264 ரன்களுக்கு 4 விக்கெட்டை இழந்துள்ளது. ஜடேஜா 19, ஷர்துல் தாக்கூர் 19 ரன்களுடன் களத்தில் உள்ளனர். கேஎல் ராகுல் 46, யஷஸ்வி ஜெய்ஸ்வால் 58, சுப்மான் கில் 12, சாய் சுதர்சன் 61 என கில்லை தவிர அனைவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். குறிப்பாக ரிஷப் பண்ட் 48 பந்துகளில் 2 பவுண்டரி, 1 சிக்ஸருடன் 37 ரன்களை அடித்திருந்தார். 

Rishabh Pant Injury: ரிஷப் பண்ட் காயம்

அப்போது கிறிஸ் வோக்ஸ் வீசிய பந்தை ரிவர்ஸ் ஸ்வீப் ஷாட் அடிக்க முற்பட்டபோது வலது காலை பந்து தாக்கியது. இங்கிலாந்து LBW-க்கு ரிவ்யூ எடுத்த நிலையில், பந்து பேட்டில்பட்டதால் அவுட் இல்லை என்பது உறுதியானது. ஆனால் ரிஷப் பண்ட் வலியால் துடித்துக்கொண்டிருந்தார். 

உடனே இந்திய அணியின் பிஸியோதெரபிஸ்ட் களத்திற்கு வந்து ரிஷப் பண்டுக்கு சிகிச்சை அளிக்க தொடங்கினார். ரிஷப் பண்டால் பாதத்தை ஊன்றவே முடியவில்லை, பிஸியோ அவரது காயத்தை ஆய்வு செய்தபோது ரிஷப் பண்ட் வலியில் துடித்ததை பார்க்க முடிந்தது, தொடர்ந்து காயத்தை தொட வேண்டாம் என ரிஷப் பண்ட் பிஸியோவிடம் அடிக்கடி கூறுவதையும் பார்க்க முடிந்தது. 

வலது கால் பாதத்தில் இருந்து ரத்தம் வருவதையும் பார்க்க முடிந்தது, மேலும் அந்த இடம் கடுமையாக வீக்கம் அடைந்திருந்தது. அவரால் நடக்கவே முடியாத நிலையில், சிறு வண்டியின் மூலம் அவர் களத்தில் இருந்து பெவிலியனுக்கு அழைத்துவரப்பட்டார். ரிஷப் பண்ட் Retired Hurt ஆன பின்னரே ஜடேஜா களத்திற்கு வந்தார்.

Rishabh Pant Injury: மூத்த வீரர்கள் சொல்வது என்ன?

காயத்தை பார்த்ததும் இந்திய அணி முன்னாள் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி Sky Sports வர்ணனையில் பேசும்போது, "அவர் (ரிஷப் பண்ட்) முகத்தைப் பார்த்தாலே தெரிகிறது, அவருக்கு அதிகமாக வலி இருக்கிறது என்று... அந்த மாதிரி அவர் வலியில் முகம் சுளிப்பது அதை மிகவும் மோசமாக்குகிறது. இரவில் காயம் மோசமாகவே செய்யும்" என்றார். இது இந்திய ரசிகர்களுக்கு பெரிதும் அதிர்ச்சி அளித்தது. 

அதே Sky Sports வர்ணனையில் ரிக்கி பாண்டிங் பேசும்போது, "அவரால் (பண்ட்) தனது காலை தரையில் வைக்கவே முடியவில்லை. உடனடி வீக்கம்தான் எனக்கு கவலையளிக்கிறது. எனக்கும் கணுக்கால் பகுதியில் காயம் ஏற்பட்டுள்ளது. கணுக்கால் சிறிய மற்றும் எளிதாக உடையக்கூடிய எலும்புகளை கொண்டவை. அவரால் அதன் மீது எடையை செலுத்த முடியவில்லை என்பது உண்மைதான், அது கவலையளிக்கும் விதமாக உள்ளது" என்றார்.

Rishabh Pant Injury: சாய் சுதர்சன் கொடுத்த அப்டேட்

போட்டிக்கு பின் இந்திய அணியின் தரப்பில் செய்தியாளர்களைச் சந்தித்த சாய் சுதர்சனிடம் ரிஷப் பண்டின் காயம் குறித்து கேட்கப்பட்டது. அதற்கு அவர், "அவர் (ரிஷப் பண்ட்) நிச்சயமாக நிறைய வலியில் இருந்தார். தற்போது ஸ்கேன் செய்வதற்கு அழைத்துச் செல்லப்பட்டார். இரவில் எங்களுக்குத் தெரியவரும், நாளை (அதாவது இன்று) தகவல் கிடைக்கும். அவர் இல்லையென்றால் மிகப்பெரிய தாக்கம் இருக்கும்.

ஏனென்றால் அவர் இன்றும் நன்றாக பேட்டிங் செய்தார், மேலும் ஒரு பேட்டரை நாங்கள் தவறவிடுவோம். அவர் மீண்டும் வரவில்லை என்றால் அது நிச்சயமாக விளைவுகளை உண்டாக்கும். ஆனால் அதே நேரத்தில், தற்போது பேட்டிங் செய்யும் பேட்டர்களும், இன்னும் சில ஆல்ரவுண்டர்களும் உள்ளனர். நாங்கள் எங்களின் சிறந்த பங்களிப்பைக் கொடுத்து நீண்ட நேரம் பேட்டிங் செய்வோம். இதனால் அந்த இழப்பை நன்றாக ஈடு செய்வோம்" என்றார். இதன்மூலம், ரிஷப் பண்ட் காயத்தின் தீவிரத்தை புரிந்துகொள்ள முடிந்தது.

Rishabh Pant Injury: இங்கிலாந்து அணி தரப்பு

இங்கிலாந்து அணி சார்பில் போட்டிக்கு பின் செய்தியாளர்களைச் சந்தித்த லியம் டாவ்சன், "அவர் நலமாக இருப்பார் என்று நம்புகிறேன். அவரது காயம் மோசமானதாக இருந்தது. இந்திய அணிக்கு அவர் முக்கியமான வீரர். இந்த ஆட்டத்தில் அவரை மீண்டும் விளையாட வரமாட்டார் என்றே நினைக்கிறேன்" என பேசியிருந்தார். 

Rishabh Pant Injury: பிசிசிஐ அப்டேட்

தொடர்ந்து நேற்றிரவு பிசிசிஐ வெளியிட்ட X பதிவில், "மான்செஸ்டர் டெஸ்டின் முதல் நாளில் பேட்டிங் செய்யும் போது ரிஷப் பந்தின் வலது காலில் காயம் ஏற்பட்டது. அவர் மைதானத்தில் இருந்து ஸ்கேன் எடுப்பதற்கு அழைத்துச் செல்லப்பட்டார். பிசிசிஐ மருத்துவக் குழு அவரது உடல்நிலை முன்னேற்றத்தைக் கண்காணித்து வருகிறது" என குறிப்பிடப்பட்டுள்ளது.

Rishabh Pant Injury: ரிஷப் பண்ட் விலகல்?

அனைத்துவிதமான கருத்துகளையும் பார்க்கும்போது, ரிஷப் பண்ட் காயத்தில் இருந்து உடனடியாக குணமடையும் வாய்ப்பு குறைவு என்றே தெரிகிறது. குறைந்தபட்சம் இந்த 4வது போட்டியில் இருந்து ரிஷப் பண்ட் விலக வாய்ப்புள்ளது. ரிஷப் பண்ட் விலகும்பட்சத்தில் இந்திய அணிக்கு 10 பேட்டர்கள் மட்டுமே இருப்பார்கள்.

Rishabh Pant Injury: துருவ் ஜூரேல் ஏன் பேட்டிங் செய்ய முடியாது?

துருவ் ஜூரேல் விக்கெட் கீப்பிங்கை கவனித்துக்கொள்ளலாம் என்றாலும் துருவ் ஜூரேல் பண்டுக்கு பதில் பேட்டிங் செய்ய முடியாது. ஒரு வீரருக்கு தலையில் அடிப்பட்டு அவரால் விளையாட முடியாதபட்சத்தில்தான், அவருக்கு பதில் வேறொரு வீரர் பேட்டிங் செய்ய வர முடியும் என்பது கிரிக்கெட் விதியாகும்.  

மேலும் படிக்க | இனி இந்த பிளேயருக்கு இந்திய டெஸ்ட் அணியில் வாய்ப்பு கிடைக்காது! முடிவுரை எழுதிய கவுதம் கம்பீர்

மேலும் படிக்க | இந்த 10 இந்திய வீரர்களை விட... லியம் டாவ்சன் அதிக சதங்களை அடித்திருக்கிறாராம் - எதில் தெரியுமா?

மேலும் படிக்க | இந்திய அணிக்கு ஆப்பு உறுதி... டெஸ்டில் 5 நாள்களும் மழைக்கு வாய்ப்பு - இதுகளும் சதி பன்னுதே!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

About the Author

Sudharsan G

I’m Sudharsan G, Sub Editor at Zee Tamil News, with over five years of experience in Tamil content writing. I cover Tamil Nadu, national, and international news, along with sports stories that connect with readers. A follower of cricket, cinema, and politics, I bring depth and perspective to every piece. I also have on-screen camera experience, which helps me present news stories in a more engaging and impactful way. Outside work, I enjoy modern Tamil literature and discovering new voices in contemporary writing.

...Read More

Trending News