2026-ம் ஆண்டு நடைபெறவுள்ள டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடருக்கு இன்னும் இரண்டு மாதங்களே உள்ள நிலையில், சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலுக்கு மிகப் பெரிய தலைவலி உருவாகியுள்ளது. டி20 உலக கோப்பைக்கான ஒளிபரப்பு உரிமத்தை வைத்திருக்கும் இந்தியாவின் முன்னணி நிறுவனமான ஜியோஸ்டார், ஒப்பந்தத்திலிருந்து பாதியிலேயே வெளியேற முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது ஐசிசி மற்றும் கிரிக்கெட் ரசிகர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் படிக்க: IPL Mini Auction: லக்னோ அணி குறிவைக்கும் 4 முக்கிய வீரர்கள்.. CSK-க்கு தலைவலி!

ரூ. 25,000 கோடி நஷ்டம்!
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் கட்டுப்பாட்டில் இயங்கும் ஜியோஸ்டார் நிறுவனம், ஐசிசி உடன் 2024 முதல் 2027 வரையிலான நான்கு ஆண்டுகளுக்கு சுமார் 3 பில்லியன் டாலர் (தோராயமாக ரூ. 25,000 கோடி) மதிப்பிலான ஒப்பந்தத்தை செய்திருந்தது. ஆனால், கடந்த ஓராண்டில் விளையாட்டு போட்டிகளை ஒளிபரப்பியதில் ஏற்பட்ட கடுமையான நிதி இழப்பு காரணமாக, இந்த ஒப்பந்தத்தை தொடர முடியாது என்று ஐசிசியிடம் திட்டவட்டமாக கூறிவிட்டது. ஜியோஸ்டார் நிறுவனத்தின் தணிக்கை செய்யப்பட்ட கணக்கு விவரங்களின்படி, விளையாட்டு போட்டிகளுக்கான ஒப்பந்தங்களில் ஏற்பட்ட நஷ்டம், ஒரே ஆண்டில் ரூ. 12,319 கோடியிலிருந்து ரூ. 25,760 கோடியாக அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த தாங்க முடியாத நஷ்டமே ஒப்பந்த முறிவுக்கு முக்கியக் காரணமாக சொல்லப்படுகிறது.
அடுத்த ஒளிபரப்பாளர் யார்?
ஜியோஸ்டாரின் இந்த முடிவால் அதிர்ச்சியடைந்துள்ள ஐசிசி, 2026 முதல் 2029 வரையிலான காலக்கட்டத்திற்கான ஒளிபரப்பு உரிமத்தை மீண்டும் விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளது. இதற்காக சோனி பிக்சர்ஸ் நெட்வொர்க்ஸ் இந்தியா (Sony), அமேசான் பிரைம் (Amazon Prime) மற்றும் நெட்ஃபிலிக்ஸ் (Netflix) ஆகிய நிறுவனங்களை ஐசிசி அணுகியதாக கூறப்படுகிறது.
இருப்பினும், ஐசிசி நிர்ணயித்துள்ள 2.4 பில்லியன் டாலர் என்ற தொகை மிக அதிகமாக இருப்பதாக கருதி, இந்த நிறுவனங்கள் எதுவும் வெளிப்படையாக ஆர்வம் காட்டவில்லை என்று தெரிகிறது. ஏற்கனவே உள்ள நஷ்டத்தை சமாளிக்கவே ஜியோஸ்டார் திணறும் போது, இவ்வளவு பெரிய தொகையை முதலீடு செய்ய மற்ற நிறுவனங்கள் தயக்கம் காட்டுகின்றன.
டி20 உலக கோப்பை 2026
இந்தியா மற்றும் இலங்கை நாடுகள் இணைந்து நடத்தும் 2026 டி20 உலகக் கோப்பை தொடர், வரும் பிப்ரவரி 2026 முதல் தொடங்க உள்ளது. இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதும் ஆட்டம் பிப்ரவரி 15-ம் தேதி கொழும்பில் நடைபெறவுள்ளது. இவ்வளவு முக்கியமான தொடர் நெருங்கும் நேரத்தில், ஒளிபரப்பு உரிமத்தில் ஏற்பட்டுள்ள இந்த சிக்கல், போட்டிகளை நேரலையில் காண்பதில் தடங்கலை ஏற்படுத்துமோ என்ற அச்சம் ரசிகர்களிடையே எழுந்துள்ளது. ஒருவேளை வேறு எந்த நிறுவனமும் முன்வராவிட்டால், ஒப்பந்தப்படி 2027 வரை ஜியோஸ்டாரே நஷ்டத்தை பொருட்படுத்தாமல் ஒளிபரப்பை தொடர வேண்டிய கட்டாயம் ஏற்படலாம் அல்லது புதிய சமரச திட்டம் வகுக்கப்படலாம்.
மேலும் படிக்க: CSK இந்த ஸ்பின்னரை எடுக்கனும்.. அஸ்வின், ஜடேஜா இடத்துக்கு இவர்தான் சரி!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









