)
ரோஹித் சர்மா ஓய்வு பெற்ற நிலையில், சமீபத்தில் இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனாக சுப்மன் கில் நியமிக்கப்பட்டார். இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் சிறப்பாக செயல்பட்ட சுப்மன் கில் அதிக ரன்கள் அடித்த வீரராக இருந்தார். இதனை தொடர்ந்து, வரவிருக்கும் ஆசிய கோப்பைக்கான இந்திய அணியின் துணை கேப்டனாகவும் அறிவிக்கப்பட்டார் கில். இந்த நிலையில், அவருக்கு திடீரென உடல்நல குறைவு ஏற்பட்டுள்ளதாகவும், இதனால் அவர் பிசிசிஐ-யின் முக்கிய உள்நாட்டு தொடரான துலீப் டிராபியில் பங்கேற்க மாட்டார் என்றும் கூறப்படுகிறது. இந்த செய்தி இந்திய கிரிக்கெட் வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

25 வயதான சுப்மன் கில், தற்போது சண்டிகரில் உள்ள தனது வீட்டில் ஓய்வெடுத்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்திய அணியின் பிசியோதெரபிஸ்ட்கள் சமீபத்தில் அவரை பரிசோதித்து, அவரது உடல்நிலை குறித்த அறிக்கையை 24 மணி நேரத்திற்கு முன்பு பிசிசிஐ-க்கு சமர்ப்பித்துள்ளனர். இருப்பினும், அவரது உடல்நல குறைவுக்கான காரணம் மற்றும் அதன் தீவிரம் குறித்த விவரங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை.
இந்த மாதம் கடைசி வாரத்தில் பெங்களூருவில் தொடங்கவிருக்கும் துலீப் டிராபி தொடரில், வடக்கு மண்டல அணியின் கேப்டனாக சுப்மன் கில் நியமிக்கப்பட்டிருந்தார். இங்கிலாந்து சுற்றுப்பயணத்திற்கு பிறகு, இந்திய அணியின் முன்னணி வீரர்கள் பங்கேற்கும் முதல் முக்கிய தொடர் இதுவாகும். ஆனால், தற்போதைய உடல்நல குறைவு காரணமாக, அவர் இந்த தொடரில் பங்கேற்பது சந்தேகமாகியுள்ளது. சுப்மன் கில் இந்த தொடரில் பங்கேற்பது குறித்து, பிசிசிஐ மற்றும் தேசிய மற்றும் மண்டல தேர்வுக்குழு அதிகாரிகள் எந்தவிதமான அதிகாரப்பூர்வ அறிவிப்பும் அளிக்கவில்லை. ஆனால், கில் துலீப் டிராபியில் பங்கேற்க மாட்டார் என்று கூறப்படுகிறது.
சுப்மன் கில்லின் இந்த உடல்நலக் குறைவு, செப்டம்பர் 9 ஆம் தேதி ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்கவிருக்கும் ஆசிய கோப்பை தொடருக்கு சில வாரங்களுக்கு முன்பு ஏற்பட்டுள்ளது. இது அணி நிர்வாகத்திற்குச் சற்று கவலையை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும், ஆசிய கோப்பைக்கு முன்பு அவர் முழுமையாக குணமடைந்துவிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 2025 ஆம் ஆண்டுக்கான ஆசிய கோப்பை தொடர் செப்டம்பர் 9 முதல் 28 வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய் மற்றும் அபுதாபி ஆகிய மைதானங்களில் நடைபெற உள்ளது.
இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள், குரூப் ஏ-வில் இடம்பெற்றுள்ள நிலையில், தங்களது முதல் போட்டியில் செப்டம்பர் 14 ஆம் தேதி துபாயில் மோதுகின்றன. சூப்பர் ஃபோர் சுற்றில், செப்டம்பர் 21 ஆம் தேதி மீண்டும் இரு அணிகளும் மோத வாய்ப்புள்ளது. இரு அணிகளும் இறுதி போட்டிக்குத் தகுதி பெற்றால், மூன்றாவது முறையாகவும் மோதுவதற்கான வாய்ப்பு உள்ளது. இந்திய அணியின் முக்கிய வீரரும், துணை கேப்டனுமாகிய சுப்மன் கில், விரைவில் பூரண குணமடைந்து, ஆசிய கோப்பையில் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என்று ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ