Team India Worst Catch Efficiency: ஐசிசி டி20 உலகக் கோப்பை 2026 தொடரில் (ICC T20 World Cup 2026) முதல் அணியாக மிட்செல் சான்ட்னர் தலைமையிலான நியூசிலாந்து அணி இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றிருக்கிறது.
எய்டன் மார்க்ரம் தலைமையிலான தென்னாப்பிரிக்க அணி மீண்டும் ஒருமுறை நாக்-அவுட் போட்டியில், நாக்-அவுட்டாகி உள்ளது. இந்நிலையில், 2வது அரையிறுதி போட்டியில் இந்தியா - இங்கிலாந்து அணிகள் இன்று இரவு 7 மணிக்கு மும்பை வான்கடே மைதானத்தில் மோதுகின்றன.
4வது முறையாக பைனல் போகுமா இந்தியா?
இந்திய அணி நான்காவது முறையாக டி20 உலகக் கோப்பையின் இறுதிப்போட்டிக்கு தகுதிபெற காத்திருக்கிறது. 2007 மற்றும 2024 டி20 உலகக் கோப்பையில் சாம்பியன் பட்டத்தை வென்ற இந்திய அணி 2014ஆம் ஆண்டில் இறுதிப்போட்டியில் இலங்கை அணியிடம் தோல்வியைடந்தது. 2016 மற்றும் 2022 டி20 உலகக் கோப்பையில் இந்திய அணி அரையிறுதியோடு வெளியேறியிருக்கிறது.
சொந்த மண்ணில் டி20 உலகக் கோப்பையை வெல்லும் முதல் அணி என்ற பெருமையை பெறவும், டி20 உலகக் கோப்பையை தொடர்ச்சியாக இரண்டு முறை வெல்லும் அணி என்ற பெருமையை பெறவும், முதல்முறையாக 3வது டி20 உலகக் கோப்பையை வெல்லும் முனைப்பிலும் இந்திய அணி உள்ளது.
தீவிரம் காட்டும் இங்கிலாந்து அணி
மறுபுறம், இங்கிலாந்து அணி 2010 மற்றும் 2022 ஆகிய இரண்டு முறை டி20 உலகக் கோப்பையை வென்றிருக்கிறது. 2016ஆண்டில் இறுதிப்போட்டி வரை வந்து மேற்கு இந்திய தீவுகளிடம் இங்கிலாந்து அணி மண்ணைக் கவ்வியது. 2021, 2024 டி20 உலகக் கோப்பை தொடர்களில் அரையிறுதியோடு வெளியேறியது இங்கிலாந்து.
அந்த வகையில், 3வது முறையாக டி20 உலகக் கோப்பையை வெல்லும் முனைப்பில் இங்கிலாந்து அணியும் உள்ளது. அதுவும் சூப்பர் 8 சுற்றில் இலங்கையின் கடினமான சூழலில் 3 போட்டிகளையும் வென்று பலமாகவும், தன்னம்பிக்கையுடனும் இங்கிலாந்து அணி இன்றைய போட்டியை எதிர்கொள்ளும்.
நாக்-அவுட் ஆகப்போவது யார்?
நடப்பு தொடரில் தென்னாப்பிரிக்காவிடம் மட்டுமே இந்திய அணி தோற்றது. இங்கிலாந்து அணி, மேற்கு இந்திய தீவுகள் அணியிடம் மட்டுமே தோல்வியடைந்தது. அந்த வகையில், இன்றைய போட்டியில் இந்தியா - இங்கிலாந்து என இரு அணிகளும் முட்டிமோதும். இன்றைய போட்டியில் வெல்லும் அணி வரும் ஞாயிறு (மார்ச் 8) அன்று குஜராத் அகமதாபாத் மைதானத்தில் நடைபெற உள்ள இறுதிப்போட்டியில் நியூசிலாந்து அணியை எதிர்கொள்ளும்.
இந்திய அணியின் பலவீனம்
அந்த வகையில், இன்றைய போட்டியில் வெற்றிபெற வேண்டும் என்றால் இந்திய அணி அதன் பலவீனத்தை திருத்தியாக வேண்டும். இந்திய அணியின் பலவீனமாக பீல்டிங் உள்ளது என முன்னாள் இந்திய வீரர் பார்த்திவ் பட்டேல் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ஜியோஸ்டாரில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், "இந்திய அணி குறித்து எனக்கு இருக்கும் ஒரே கவலை, அதன் பீல்டிங்தான். ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடந்த கடந்த போட்டியில் இந்திய அணி பீல்டிங் செய்த விதத்தை வைத்து மட்டும் இதை கூறவில்லை. இது கடந்த ஒன்றரை வருடங்களாக நடந்து வருகிறது. நாம் பல கேட்ச்களை விடுகிறோம். இந்திய அணி அதை நிச்சயம் திருத்திக்கொள்ள வேண்டியுள்ளது" என்றார்.
இந்திய அணியின் மோசமான பீல்டிங்
அவர் கூறுவதை போன்று இந்திய அணியின் கேட்ச் பிடிக்கும் திறன் கவலையளிப்பதாகவே உள்ளது. நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரில் மட்டும் 13 கேட்ச்களை இந்திய அணி தவறவிட்டுள்ளது. அதாவது, சூப்பர் 8 சுற்றுக்கு தகுதிபெற்ற 9 அணிகளில் இந்திய அணியின் கேட்ச் பிடிக்கும் திறன்தான் மிக மோசமான நிலையில் உள்ளது. குறிப்பாக, அரையிறுதிக்கு முன்னேறிய அணிகளின் கேட்ச் பிடிக்கும் திறனை பார்த்தோமானால், இங்கிலாந்து - 87.2%, நியூசிலாந்து - 83.9%, தென்னாப்பிரிக்கா - 81.1% ஆக உள்ளது. இந்திய அணியின் கேட்ச் பிடிக்கும் திறனோ 72.7% ஆக மட்டுமே உள்ளது. அதாவது, 27.3% கேட்ச்களை இந்திய அணி இத்தொடரில் தவறவிட்டுள்ளது.
மேலும் படிக்க | இந்திய அணி செமி பைனல் போகாது... டி20 உலகக் கோப்பை கிடைக்காது - காரணம் என்ன?
மேலும் படிக்க | IND vs ENG: இந்த 3 வீரர்கள் சிறப்பாக விளையாடினால்... இந்திய அணி பைனல் போகும்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









