Reason Behind Punjab Kings Josh Inglis Release: ஐபிஎல் 2026 சீசனை முன்னிட்டு மினி ஏலம் வரும் டிசம்பர் 16ஆம் தேதி நடைபெற இருக்கிறது. அபுதாபி நகரில் மினி ஏலம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 10 அணிகளும் தங்கள் தக்கவைத்த வீரர்களின் பட்டியலை வெளியிட்டன. இதன்மூலம், ஐபிஎல் மினி ஏலத்திற்கு பல வீரர்கள் விடுவிக்கப்பட்டிருக்கிறார்கள்.
IPL 2026 Punjab Kings: இந்த வருஷமும் ஷாக் கொடுத்த பஞ்சாப் கிங்ஸ்
அந்த வகையில் அதிர்ச்சி அளிக்கக்கூடிய, யாருமே எதிர்பார்க்காத பல முன்னணி வீரர்கள் நேற்று விடுவிக்கப்பட்டார்கள். ஆன்ட்ரே ரஸ்ஸல், மதீஷா பதிரானா, ரவி பிஷ்னோய் உள்ளிட்டோர் விடுவிக்கப்பட்டனர். வழக்கமாக ஏலம் என்றாலே அதிர்ச்சியை கொடுக்கும் பஞ்சாப் கிங்ஸ், கடந்த முறை இறுதிப்போட்டி வரை வந்ததால் பெரியளவு இந்தாண்டு ஷாக் கொடுக்காது என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ஜாஷ் இங்கிலிஸை விடுவித்து பஞ்சாப் கிங்ஸ் பெரும் அதிர்ச்சியை கொடுத்தது.
சர்வதேச கிரிக்கெட்டில் ஜாஷ் இங்கிலிஸ் போல் 360 கோணத்திலும் ஷாட்களை அடிக்கக் கூடிய அதிரடி பேட்டர்களை விரல்விட்டு எண்ணிவிடலாம். இந்தியாவின் சூர்யகுமார் யாதவ்விற்கு இணையான பேட்டிங் திறனை கொண்ட ஜாஷ் இங்கிலிஸ் ரிலீஸ் செய்யப்பட்டது நேற்று பெரும் ஆச்சர்யத்தையும், அதிர்ச்சியையும் கொடுத்தது. ஜாஷ் இங்கிலிஸை மட்டுமின்றி கிளென் மேக்ஸ்வெல், ஆரோன் ஹார்டி, குல்தீப் சென், பிரவீன் துபே உள்ளிட்டோரை பஞ்சாப் கிங்ஸ் வெளியிட்டுள்ளது. அவர்களிடம் ரூ.11.5 கோடி பர்ஸில் உள்ளது. மிக குறைவான தொகையை கொண்ட அணிகளின் பட்டியலில் 2வது இடத்தில் உள்ளது.
IPL 2026 Punjab Kings: மேக்ஸ்வெல்லை கழட்டிவிட்டது ஏன்?
அந்த வகையில், ஜாஷ் இங்கிலிஸ், மேக்ஸ்வெல் ஆகியோரை விடுவித்ததன் பின்னணியில் உள்ள காரணத்தை பஞ்சாப் கிங்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளரும், ஆஸ்திரேலியாவின் முன்னாள் கேப்டனுமான ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார். முதலில், மேக்ஸ்வெல்லை வெளியிட்டது குறித்து பேசிய அவர், "மேக்ஸ்வெல்லையும், அவர் போட்டியில் செயல்படும் விதமும் மிகவும் பிடித்தமானது. துரதிர்ஷ்டவசமாக, கடந்த சீசனில் அவரிடம் இருந்து சிறந்த ஆட்டத்தை எங்களால் பெற முடியவில்லை. அடுத்த சீசனை திட்டமிடுகையில், அவர் எங்கள் தொடக்கக் கட்ட பிளேயிங் லெவனில் இடம்பெறுவார் என்று நாங்கள் நினைக்கவில்லை. எனவே அவரை விடுவிக்க முடிவு செய்தோம்" என்றார்.
37 வயதான மேக்ஸ்வெல் ஆப் ஸ்பின் வீசக்கூடிய பேட்டிங் ஆல்-ரவுண்டர் ஆவார். கடந்த சில ஆண்டுகளாகவே இவர் பெரியளவில் ஐபிஎல் தொடரில் பங்களிப்பு செலுத்தவில்லை. சர்வதேச அளவிலும் சோபிக்கவில்லை. எனவே அவரை பஞ்சாப் தக்கவைக்காதது பெரிய ஆச்சர்யம் இல்லை. அவர் மினி ஏலத்தில் குறைந்த தொகையில் எடுக்கப்படலாம், சிஎஸ்கே கூட அவரை எடுக்க முயற்சிக்கலாம்.
IPL 2026 Punjab Kings: ஜாஷ் இங்கிலிஸ் விடுவிக்கப்பட்டது ஏன்?
ஜாஷ் இங்கிலிஸ் விடுவிக்கப்பட்டது குறித்து பேசிய ரிக்கி பாண்டிங், "ஜாஷ் (இங்கிலிஸ்) ஒரு சிறந்த வீரர். எதிர்காலத்தில் அவர் எங்கள் அணியில் இடம்பெற்றால் நான் மிகவும் மகிழ்ச்சியடைவேன். ஆனால் இந்த ஐபிஎல் சீசனில் பெரும்பகுதியில் அவர் விளையாட வாய்ப்பில்லை. அதனால், அவரைத் தக்கவைத்துக்கொள்வது சாத்தியமில்லை என்று நான் கண்டேன்" என்றார். ஜாஷ் இங்கிலிஸை பஞ்சாப் கிங்ஸ் ரூ.2.4 கோடிக்கு மெகா ஏலத்தில் எடுத்தது. ஏற்கெனவே விக்கெட் கீப்பர் பேட்டராக பிரப்சிம்ரன் சிஙஅ இருக்கிறார் என்பதால் வேறு வெளிநாட்டு வீரரை எடுக்கவும் பஞ்சாப் திட்டமிடலாம். ஜாஷ் இங்கிலிஸ் இந்த மினி ஏலத்திற்கு வர வாய்ப்பில்லை.
மேலும் படிக்க | சைலண்டாக சம்பவம் செய்த மும்பை இந்தியன்ஸ்! இப்போதே பிளேயிங் 11 ரெடி!
மேலும் படிக்க | CSK அணியின் 4 முக்கிய தேவைகள்... மினி ஏலத்தில் இந்த வீரர்கள் தான் டார்கெட்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









