)
Madurai Latest News Updates: மதுரையில் அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ இன்று (ஆகஸ்ட் 28) செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில் "மதுரை மாநகராட்சி வரி முறைகேட்டில் வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை அதிமுக பெற்று தந்துள்ளது, சொத்து வரி முறைகேட்டில் அதிமுக மட்டுமே முழுமையாக போராடியது, இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சொத்து வரி முறைகேட்டில் வெற்று கம்பை சுற்றி வருகிறது.
மனைவி மேயர் பதவியில் இருந்ததால் பொன் வசந்த் வரி முறைகேட்டில் ஈடுபட்டுள்ளார். மாநகராட்சி வரி முறை வீட்டிற்கு முழு பொறுப்பேற்று மேயர் இந்திராணி பதவி விலக வேண்டும், ஊழலின் ஊற்றுக் கண்ணாக இருந்த பொன்.வசந்தின் மனைவி இந்திராணி மேயராக தொடரலாமா?, மேயர் பதவி விலகும் வரை அதிமுக மாமன்ற உறுப்பினர்கள் மாமன்ற கூட்டங்களில் பங்கேற்க மாட்டார்கள்.
மதுரை மாநகராட்சியில் ஊழல் பெருக்கெடுத்து உள்ளதால் வளர்ச்சிப் பணிகள் பின்னோக்கி சென்றது, வரி முறைகேட்டில் ஈடுபட்டவரின் மனைவி மேயராக இருக்கும்போது மக்கள் பிரச்சனையை அவரிடம் எப்படி பேச முடியும்?, ஊழல் இந்திராணியிடம் மக்கள் பிரச்சினைகளை பேசினால் மேலும் மேலும் ஊழலுக்குத்தான் வழிவகுக்கும். மதுரை மாநகராட்சி வரி முறைகேட்டில் 28 கோடியே 21 லட்ச ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
மதுரை மாநகராட்சி மேயராக இந்திராணி தொடரும் போது அவரிடம் முறைகேடு தொடர்பாக விசாரிப்பது சரியாக இருக்காது, இந்திராணி பதவி விலகிய பின்னர் அவரிடம் விசாரிப்பது முறையான விசாரணையாக இருக்கக்கூடும். மதுரை மாநகராட்சி மேயராக இந்திராணி தொடர்ந்தால் திமுக அரசுக்கு தான் கெட்ட பெயர் உண்டாகும்.
முல்லைப் பெரியாறு கூட்டு குடிநீர் திட்டம் மதுரையில் முழுமையாக நிறைவேற்றினால் சுத்திகரிக்கப்பட்ட குடிநீரே மக்கள் வாங்க தேவை இருக்காது. மதுரையில் இரண்டு அமைச்சர்கள் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் என தெரியவில்லை. அமைச்சர் மூர்த்தி மதுரை மேற்கு தொகுதியில் டிபன் கேரியரை கொடுத்துவிட்டு வழிமுறைகளை கவனிக்க தவறி விட்டார். ஊழலுக்கு பின் இரண்டு அமைச்சர்களும் மக்கள் மத்தியில் எப்படி முகத்தை காண்பிக்கிறார்கள் என தெரியவில்லை. மதுரை மாநகராட்சி வரி முறைகேடு நடைபெறுவதற்கு இரண்டு அமைச்சர்களும் காரணமாக இருந்துள்ளனர். 2 அமைச்சர்களே மாநகராட்சி பணிகளை கவனித்திருந்தால் முறைகேடுகள் நடந்திருக்குமா?" என கேள்வி எழுப்பினார்.
அமைச்சர் மூர்த்தி மதுரை மேற்கு தொகுதியில் சூரியன் உதிக்கும் எனும் கருத்து குறித்த கேள்விக்கு, "அமைச்சர் மூர்த்தி நார்வே ஸ்வீடனில் இருக்கிறாரா? அங்கே தான் சூரியன் மேற்கே உதிக்கும்" என செல்லூர் ராஜூ பதிலளித்தார். ஆர்எஸ்எஸ் போன்ற இயக்கம் வலிமை பெறுவதற்கு அதிமுக துணை போவது கவலை அளிப்பதாக திருமாவளவன் பேசிய கருத்திற்கு பதில் அளிக்கையில், "அதிமுக தனது கொள்கையில் இருந்து என்றும் வழுவாது, தவறாது. அது எல்லோருக்கும் தெரியும், நாங்கள் யாருக்கும் எஜமானர் இல்லை. அடிமையும் இல்லை" என கூறினார்.
முன்னதாக, அதிமுகவையும் ஆர்எஸ்எஸ் வழிநடத்துவதாக தவெக தலைவர் விஜய் குற்றஞ்சாட்டிய நிலையில், அதற்கு மத்திய இணையமைச்சர் எல். முருகன் கடுமையான விமர்சித்திருந்தார். அதாவது, அரசியல் கட்சிகளை நல்வழிப்படுத்தும் அனைத்து கொள்கைகளையும் ஆர்எஸ்எஸ் கொண்டுள்ளது என்றும் அப்படிப்பட்ட ஆர்எஸ்எஸ் இயக்கம் அதிமுகவை வழிநடத்தினால் என்ன தவறு என்றும் கேள்வி எழுப்பினார்.
மேலும், முதலில் விஜய்தான் ஆர்எஸ்எஸ் இயக்கத்தில் சேர்ந்து அரசியல் தெளிவு பெற வேண்டும் என்றும் ஆர்எஸ்எஸ் கொள்கைகள் மூலம் விஜய் அரசியல் கற்றுக் கொள்ள வேண்டும் என்றும் அவர் தெரிவித்திருந்தார். அதிமுகவையும் ஆர்எஸ்எஸ் இயக்கம் வழிநடத்துவமாக எல். முருகன் கூறியிருந்த நிலையில், நாங்கள் யாருக்கும் எஜமானர் இல்லை. அடிமையும் இல்லை என செல்லூர் ராஜூ பேசியிருப்பது குறிப்பிடத்தக்கது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ