அதிமுகவில் முக்கிய தலைவராகவும், தமிழகத்தின் முதல்வராகவும் இருந்த ஓ பன்னீர்செல்வம் புதிய கட்சி தொடங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. புதிய கட்சியை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்து விட்டதாகவும் விரைவில் அதன் அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தீவிர விசுவாசியாக இருந்த ஓ பன்னீர்செல்வம் ஜெயலலிதா சிறைக்கு சென்ற சமயத்தில் முதல்வராக பதவியேற்று உள்ளார். மேலும் ஜெயலலிதா இறந்த பிறகு உடனடியாக தமிழக முதலமைச்சராக பதவி ஏற்றார். அதிமுகவில் பல சீனியர்கள் இருந்தாலும் ஜெயலலிதாவிற்கு பிறகு ஓ பன்னீர்செல்வம் தான் என்ற நிலை இருந்து வந்தது. ஆனால் ஜெயலலிதா இறந்த பிறகு காட்சிகள் அப்படியே மாறியது.
பல தரப்பில் இருந்து வந்து அழுத்தங்களால் முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் ஓ பன்னீர்செல்வம். அதனைத் தொடர்ந்து மெரினாவில் தர்ம யுத்தத்திலும் ஈடுபட்டார். ஊழல் வழக்கில் அதிமுகவின் பொதுச் செயலாளர் சசிகலா சிறை சென்றதால் உடனடியாக புதிய முதல்வராக எடப்பாடி பழனிச்சாமி பொறுப்பேற்றார். அதிலிருந்து ஓ பன்னீர்செல்வம் கொஞ்சம் கொஞ்சமாக ஓரம் கட்டப்பட்டார். எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஓ பன்னீர்செல்வம் என இருவருக்கும் கட்சியில் முக்கியத்துவம் இருக்க வேண்டும் என்பதற்காக அதிமுகவின் ஒருங்கிணைப்பாளராக ஓ பன்னீர் செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிச்சாமியின் பொறுப்பேற்றுக் கொண்டனர்.
இந்த கூட்டணி சிறிது நாட்கள் நல்லபடியாக சென்ற நிலையில் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட தொடங்கியது. பிறகு ஒற்றை தலைமை வேண்டும் என்ற கோரிக்கை அதிமுக தொண்டர்கள் மத்தியில் எழுந்தது. எடப்பாடி பழனிச்சாமியை அதிமுகவிலிருந்து நீக்க பாஜகவுடன் கை கோர்த்தார் ஓ பன்னீர்செல்வம். பிறகு ஓபிஎஸ்-ஐ முழுவதுமாக அதிமுகவிலிருந்து வெளியேற்றினார் எடப்பாடி பழனிச்சாமி. பலதரப்பு சட்டப் போராட்டங்கள் நடத்திய நிலையிலும், அனைத்தும் எடப்பாடி பழனிச்சாமிக்கு சாதகமாக அமைந்தது. பிறகு வேறு வழியின்றி கடந்த மக்களவைத் தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் தனி சின்னத்தில் போட்டியிட்டு தோல்வியடைந்தார் ஒ பன்னீர்செல்வம். எப்படியாவது மீண்டும் அதிமுகவில் இணைய வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்த ஓ பன்னீர் செல்வத்திற்கு அதிமுக பாஜக கூட்டணி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் ஓபிஎஸ் அதிமுகவில் மீண்டும் இணைவாரா என்று அமித்ஷாவிடம் கேட்கப்பட்டபோது, அதிமுகவின் உட்கட்சி விவகாரத்தில் நாங்கள் தலையிட மாட்டோம் என்று வெளிப்படையாகவே தெரிவித்தார். இதனால் இனி அதிமுகவில் சேர வாய்ப்பில்லை என்று புரிந்து கொண்ட ஓ பன்னீர்செல்வம் புதிய கட்சியை தொடங்க திட்டமிட்டுள்ளார். இந்த கட்சிக்கு எம்ஜிஆர் அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் என்று பெயர் வைத்துள்ளதாகவும், இதனை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்து விட்டதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. இன்னும் சில நாட்களில் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் படிக்க | அமைச்சர் பொன்முடி திமுக கட்சி பொறுப்பில் இருந்து நீக்கம் - முழு விவரம்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









