TN ePass: ஊட்டி, கொடைக்கானலை போல் இனி இந்த சுற்றுலா தலத்திற்கும் வரும் நவம்பர் 1ஆம் தேதி முதல் இ-பாஸ் நடைமுறையை அமல்படுத்த தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Tamil Nadu Government ePass: தமிழ்நாட்டின் முக்கிய சுற்றுலா தளங்களான ஊட்டி, கொடைக்கானல் ஆகிய இடங்களில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில், எத்தனை சுற்றுலா வாகனங்களை அனுமதிக்கலாம் என்பது குறித்து உயர் நீதிமன்ற உத்தரவின்படி, சென்னை ஐஐடி மற்றும் பெங்களூரு ஐஐஎம் நிறுவனங்கள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றன.
இந்நிலையில், இதுதொடர்பான வழக்கு நீதிபதிகள் சதீஷ்குமார் மற்றும் பரத சக்கரவர்த்தி அமர்வில் இன்று (செப். 19) விசாரணைக்கு வந்தன. அப்போது, ஐஐடி மற்றும் ஐஐஎம் குழுவின் இடைக்கால அறிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டன. அந்த அறிக்கையில், ஊட்டிக்குச் செல்லும் வாகனங்களின் எண்ணிக்கையை குறைக்க வேண்டும், அரசு போக்குவரத்தை பயன்படுத்த ஊக்குவிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு பரிந்துரைகள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன. மேலும், வரும் டிசம்பர் மாதம் இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்படும் என ஐஐடி - ஐஐஎம் குழுவினர் தெரிவித்தனர்.
இதையடுத்து, ஐஐடி - ஐஐஎம் குழுவினருக்கு தேவையான தகவல்களையும், ஆலோசனைகளையும் வழங்க ஏதுவாக தலைமைச் செயலாளர் தலைமையில் விரைவில் கூட்டம் கூட்ட வேண்டும் என அரசு தரப்புக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும் வழக்கின் விசாரணையை அக்டோபர் 31ஆம் தேதிக்கும் தள்ளிவைத்தனர்.
மேலும், ஊட்டி, கொடைக்கானலில் இ-பாஸ் நடைமுறை செயல்படுத்தப்பட்டு உள்ளதால் சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் வால்பாறையில் குவிந்து வருவதாக நீதிமன்றத்துக்கு உதவியாக நியமிக்கப்பட்ட வழக்கறிஞர் மனுத்தாக்கல் செய்தார். இதனை விசாரித்த நீதிபதிகள், பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்தார். அதில், "ஊட்டி, கொடைக்கானலை விட, வால்பாறை, டாப் சிலிப், ஆனைமலை புலிகள் காப்பகம் ஆகியன சுற்றுச்சூழல் ரீதியாக தீவிரமான பகுதிகள் ஆகும். அதனால், வால்பாறை செல்லும் அனைத்து வழிகளிலும் சோதனைச் சாவடிகளை அமைத்து, இ பாஸ் வழங்கும் நடைமுறையை நவம்பர் 1ஆம் தேதி முதல் அமல்படுத்த வேண்டும்.
வால்பாறை செல்லும் வாகனங்களில் பிளாஸ்டிக் பொருட்கள் கொண்டு செல்லப்படுகின்றனவா என்பது குறித்தும் சோதனை நடத்த வேண்டும்" என உத்தரவு பிறப்பித்தனர். தொடர்ந்து உயர் நீதிமன்ற நீதிபதிகள் வழக்கு விசாரணையை அக்டோபர் 31ஆம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.
தற்போது ஊட்டி, கொடைக்கானலுக்கு தனி வாகனத்தில் செல்பவர்கள் இ-பாஸ் எடுப்பது கட்டாயம் ஆகும். அதே நேரத்தில், இ-பாஸ் எடுக்கும் வழிமுறைகளையும் தமிழ்நாடு அரசு எளிமையாகவே வகுத்துள்ளது. TN ePass என்ற அதிகாரப்பூர்வ இணையத்தளமும் (https://www.tnepass.tn.gov.in) தமிழ்நாடு அரசால் தொடங்கப்பட்டுள்ளது.
இணையதளத்தில், பயணம் செய்பவரின் இருப்பிடம், வாகன விவரங்கள், பயணம் செய்யும் தேதிகள் போன்ற படிவத்தில் கேட்கப்பட்டிருக்கும் கேள்விகளுக்கு உரிய பதிலை நிரப்ப வேண்டும். மேலும், ஓட்டுநர் உரிமம், வாகனத்தின் பதிவுச் சான்றிதழ் (RC), காப்பீட்டு ஆவணங்கள் உள்ளிட்ட தேவையான ஆவணங்களின் நகல்களை அதில் பதிவேற்றம் செய்ய வேண்டும். மேலும், உங்களின் விண்ணப்பப் படிவும் சரிபார்க்கப்பட்டதும், உங்களுக்கு இ-பாஸ் வழங்கப்படும். நீங்கல் கொடுத்த மின்னஞ்சலிலோ அல்லது கொடுத்த மொபைல் நம்பருக்கு SMS மூலமாகவோ இ-பாஸ் வந்துவிடும்.
தற்போது இதில் ஊட்டி மற்றும் கொடைக்கானல் பகுதிகளுக்கு மட்டும் இ-பாஸ் ஆப்ஷன் கொடுக்கப்பட்டிருக்கிறது. நீதிமன்றத்தின் உத்தரவை அடுத்து விரைவில் வால்பாறை பகுதிக்கான இ-பாஸ் ஆப்ஷனும் அதில் இடம்பெற வாய்ப்புள்ளது. எனவே நவம்பர் 1ஆம் தேதிக்கு பின் கோவையில் உள்ள வால்பாறைக்கு பயணம் செய்ய இருந்தால் கட்டாயம் இ-பாஸ் எடுக்க வேண்டும் என்பதை மறக்காதீர்கள்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ