அய்யா வைகுண்டரை முடிவெட்டும் பெருமாள் என்று கூறுவதா? அன்புமணி, அண்ணாமலை ஆவேசம்!

அய்யா வைகுண்டரின் பெயரை, "the god of hair cutting" என்று  மொழிபெயர்த்திருக்கிறார்கள் என அன்புமணி ராமதாஸ் மற்றும் அண்ணாமலை குற்றம்சாட்டி உள்ளனர்.   

Written by - R Balaji | Last Updated : Sep 1, 2025, 08:27 PM IST
  • அய்யா வைகுண்டர் டிஎன்பிஎஸ்இ கேள்வி சர்ச்சை
  • அண்ணாமலை, அன்புமணி ராமதாஸ் கண்டனம்
அய்யா வைகுண்டரை முடிவெட்டும் பெருமாள் என்று கூறுவதா? அன்புமணி, அண்ணாமலை ஆவேசம்!

அய்யா வைகுண்டர் குறித்து டிஎன்பிஎஸ்இ-யில் கேளவி கேட்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கும் நிலையில், பலரும் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், அய்யா வைகுண்டரை முடிவெட்டும் பெருமாள் என்று கூறுவதா? அரசுப் பணியாளர் தேர்வாணையம் மன்னிப்பு கேட்க வேண்டும்! என அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். 

Add Zee News as a Preferred Source

இது தொடர்பாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள பதிவில், அய்யா வழி என்ற புதிய கோட்பாட்டை உருவாக்கிய சாமித்தோப்பு அய்யா வைகுண்டரை இழிவுபடுத்தும் வகையில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய போட்டித் தேர்வுகளில் அவரை  முடிவெட்டும் கடவுள் என குறிப்பிடப்பட்டிருப்பது கண்டிக்கத்தக்கது. இந்த விஷயத்தில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் காட்டிய அலட்சியத்தை  ஏற்றுக்கொள்ள  முடியாது.

இளநிலை உதவி வரைவாளர் பணிக்காக  தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய போட்டித் தேர்வில், அய்யா  வைகுண்ட சுவாமிகள் குறித்த கீழ்க்கண்ட  கூற்றுகளில் சரியானவற்றை தேர்வு செய்க என்ற கேள்வி கேட்கப்பட்டுள்ளது. அதற்கான முதல் விருப்பவாய்ப்பாக “முடிசூடும் பெருமாள் மற்றும் முத்துக்குடி என்று அழைக்கப்பட்டார்” என குறிப்பிடப்பட்டிருந்தது. அதற்கான ஆங்கில மொழிபெயர்ப்பில் முடிசூடும் பெருமாள் என்பதை  “Vishnu with a crown” என்று மொழிபெயர்ப்பதற்கு பதிலாக ‘the god of hair cutting'  என்று தவறாக மொழிபெயர்த்துள்ளனர். இது அய்யா வழியை பின்பற்றுபவர்களின் உணர்வுகளையும் காயப்படுத்தியுள்ளது.

தமிழ்நாடு அரசின் துணை ஆட்சியர் உள்ளிட்ட உயரிய பதவிகளுக்கான தேர்வுகளை நடத்தும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்  ஒரு சாதாரண சொல்லைக் கூட சரியாக ஆங்கிலத்தில் மொழி பெயர்க்க முடியாத நிலையில் இயங்கி வருவது வருத்தமளிக்கிறது. சுவாமி அய்யா வைகுண்டரை  ‘the god of hair cutting'  என்று குறிப்பிட்டதற்காக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மன்னிப்பு கேட்க வேண்டும்; அந்த  வினாவுக்கு அனைவருக்கும் மதிப்பெண் வழங்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார். 

தமிழக பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை எக்ஸ் தளத்தில் கூறியதாவது, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) தேர்வில் வெற்றி பெற்று, அரசுப் பணிக்குத் தேர்வாவது, பல லட்சம் இளைஞர்களின் கனவாக இருக்கிறது. திமுக ஆட்சிக்கு வந்ததில் இருந்து, TNPSC தேர்வுகளைக் குறித்த நேரத்தில் நடத்தாமலும், தேர்வு முடிவுகளை முறையாக வெளியிடாமலும், பல முறைகேடுகளாலும், குளறுபடிகளாலும், தமிழக இளைஞர்களின் அரசுப் பணி கனவு சிதைந்து கொண்டிருக்கிறது.

நேற்றைய தினம், இளநிலை உதவி  வரைவாளர் பணிக்காக நடைபெற்ற TNPSC தேர்வில், அய்யா வைகுண்டர் குறித்த கேள்வியின் ஆங்கில மொழிபெயர்ப்பில், முடிசூடும் பெருமாள் என்ற அய்யா வைகுண்டரின் பெயரை, "the god of hair cutting" என்று  மொழிபெயர்த்திருக்கிறார்கள். தமிழக அரசுப் பணிக்கான தேர்வில், பல கோடி மக்கள் வணங்கும் அய்யா வைகுண்டரின் மற்றொரு பெயரை, இத்தனை கவனக்குறைவாகவும், பொறுப்பின்றியும் மொழிபெயர்த்திருப்பது, கடுமையான கண்டனத்துக்குரியது. 

அதோடு மட்டுமல்லாமல், மற்றொரு கேள்வியில், மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் சரியான கூற்றுகளை கண்டறியவும் என கேள்விக்கு, '2024 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையிடமிருந்து விருதை பெற்றது' என்பதை, 
"It Begged the United Nations award" - பிச்சை எடுத்தார்கள் என்று மொழிபெயர்த்திருக்கிறார்கள்.

திமுக தலைவர்கள், காலகாலமாக, இல்லாத விருதுகளை வாங்கியதாக கூறிவருவதாலும், ஆஸ்திரியா ஸ்டாம்ப், ஆக்ஸ்போர்டு புகைப்படம் என, பணம் கொடுத்து வாங்குவதை எல்லாம் விருதுகள் என்று பொய் கூறி ஏமாற்றி வருவதாலும், இந்தக் கேள்வியைத் தயாரித்தவர்களுக்குக் குழப்பம் ஏற்பட்டிருக்கலாம் என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது. 

எனினும், அரசுப் பணி தேர்வுகளுக்கான கேள்விகளைத் தயார் செய்யும்போது, இது போன்று கவனக்குறைவாக இருப்பது, திமுக அரசு, தமிழக இளைஞர்களின் எதிர்காலத்தை எத்தனை கிள்ளுக்கீரையாக நினைக்கிறது என்பதையே காட்டுகிறது. 

எல்லா இளைஞர்களும், கோபாலபுரம் குடும்பத்தினரைப் போல, எந்தத் தகுதியும் இன்றி மேலே வர வேண்டும் என்று நினைப்பவர்கள் அல்ல. அரசுப் பணித் தேர்வுகளுக்காகக் கடுமையாக உழைக்கும் இளைஞர்களை  அவமானப்படுத்தும் போக்கை, திமுக அரசு இத்தோடு நிறுத்திக் கொள்ள வேண்டும் எனத் தெரிவித்துள்ளார். 

மேலும் படிக்க: வங்கக்கடலில் உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதி.. இன்று எங்கெல்லாம் மழை பெய்யும்?

மேலும் படிக்க: பழைய ஓய்வூதிய திட்டம்: அமல்படுத்துமா தமிழக அரசு? ஆசிரியர் சங்கம் எச்சரிக்கை!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

 

 

About the Author

Trending News