)
கோவை விமான நிலையத்தில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்,
டெல்டா மாவட்டங்களில் ஏற்பட்ட கனமழையால் சுமார் 2.5 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் நீரில் மூழ்கி பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தார். பருவமழை முன்பே மழைநீர் வெளியேறும் நடவடிக்கை எடுக்க அரசு தவறிவிட்டதாகவும், இதனால் விவசாயிகள் பெரும் நஷ்டத்தை சந்தித்துள்ளதாகவும் கூறினார்.
மேலும், “டெல்டா மாவட்டங்களில் 6.5 இலட்சம் ஏக்கரில் நெல் பயிரிடப்பட்டுள்ள நிலையில், 18 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்ய வேண்டியதாயிருந்தது. ஆனால், அரசு இதுவரை 5 லட்சம் டன் மட்டுமே கொள்முதல் செய்துள்ளது. ஈரப்பதம் காரணம் காட்டி கொள்முதல் செய்யாதது விவசாயிகளை தற்கொலை செய்யும் நிலைக்கு தள்ளுகிறது. திமுக அரசு இதுவரை எந்தவிதமான தற்காலிக நிவாரண நடவடிக்கையும் எடுக்கவில்லை” என குற்றம் சாட்டினார்.
மேலும், கனிம வளங்கள் கேரளாவிற்கு கடத்தப்பட்டு வருவதாகவும், தினமும் ஆயிரக்கணக்கான லாரிகள் சட்டவிரோதமாக கனிமங்களை எடுத்து செல்கின்றன என்றும், இதற்கு தமிழக அரசு கண்மூடி இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். “கனிம வள கொள்ளைக்குப் பின்னால் திமுகவில் உள்ள முக்கிய நபர் ஒருவர் காரணம், அவர் விரைவில் வெளிச்சம் காண்பார்” எனவும் அவர் கூறினார்.
சாதிவாரி கணக்கெடுப்பு குறித்து பேசும் போது, “தமிழ்நாட்டில் சமூகநீதி நிலைநாட்ட சாதிவாரி கணக்கெடுப்பு அவசியம். ஆனால், ஸ்டாலின் அரசு இதை நோக்காகவே தாமதப்படுத்தி வருகிறது. கூட்டணி கட்சிகளும் இதில் அமைதியாக உள்ளன. வைகோ, திருமாவளவன், செல்வபெருந்தகை போன்ற தலைவர்கள் ஏன் இதுபற்றி பேசவில்லை?” என அவர் கேள்வி எழுப்பினார்.
அத்திக்கடவு-அவிநாசி திட்டம் குறித்து அவர், “திட்டம் தோல்வியடைந்துள்ளது. ஆயிரத்து 50 ஏரிகளுக்கு தண்ணீர் சென்றிருக்க வேண்டும், ஆனால் 20% மட்டுமே சென்றுள்ளது. திட்டம்–2 என்ற பெயரில் திருத்தி மீண்டும் தொடங்க வேண்டும். கடந்த 4.5 ஆண்டுகளில் முதல்வர் ஸ்டாலின் எந்த நீர் மேலாண்மை திட்டத்தையும் மேற்கொள்ளவில்லை” என தெரிவித்தார்.
திரைப்படங்கள் மற்றும் சாதி ஒழிப்பு குறித்து பேசிய அன்புமணி, “சினிமாவில் வசனம் பேசுவதால் சாதி ஒழியாது; கல்வி, வேலை வாய்ப்பு மூலம் மட்டுமே மாற்றம் வரும். அதற்காக சாதிவாரி கணக்கெடுப்பு அவசியம்” என்றார்.
இறுதியாக, தந்தை–மகன் உறவில் உள்ள கருத்து வேறுபாடு குறித்து கேட்கப்பட்டபோது, “அது கட்சியின் உள்நிலை விவகாரம்; கருத்து சொல்ல விரும்பவில்லை” எனத் தெரிவித்தார். மேலும், “அப்பா–மகன் சண்டை வெளியே, இணக்கம் உள்ளே என்கிற கேள்விக்கு அவர் சிரித்துக்கொண்டு, ‘ஆளை விடுங்க ஐயா’ என கையெடுத்து வணங்கி சென்றார்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ