)
Bangalore Hosur Metro Service: தென்னிந்தியாவில் இரண்டு மாநிலங்கள், கர்நாடகா மற்றும் தமிழ்நாடு. தகவல் தொழில்நுட்பத்துறையில் இரு மாநிலங்களுக்கும் சிறப்பான முதலீட்டை பெறுவது மட்டுமின்றி தொடர்ச்சியான முன்னேற்றத்தை கண்டுவரும் மாநிலங்களாகும்.
இந்த இரு மாநிலங்களையும் இணைக்கும் பெங்களூரு – ஓசூர் இடையிலான மெட்ரோ ரயில் சேவை திட்டத்தை செயல்படுத்துவது, தொழில்நுட்ப ரீதியில் சாத்தியமில்லை என பெங்களூரு மெட்ரோ ரயில் நிறுவனம் தெரிவித்திருப்பது, பொதுமக்கள் மத்தியில் பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாட்டின் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர், கர்நாடக மாநிலத்தின் பெங்களூரு நகருக்கு அருகிலேயே அமைந்திருக்கிறது. ஓசூரில் இருந்து ஒரு மணி நேரத்திற்குள்ளாகவே பெங்களூருக்குச் சென்று விட முடியும் என்பதால் பெங்களூருவில் இருக்கும் விலைவாசி, ரியல் எஸ்டேட் உயர்வு உள்ளிட்டவற்றின் காரணமாக ஏராளமான மக்கள் ஓசூரில் தங்கி, அங்கிருந்து பெங்களூருக்கு அன்றாடம் பயணம் செய்கின்றனர். பல்வேறு முன்னணி நிறுவனங்களும் உற்பத்தி ஆலைகளை ஓசூரிலும், அலுவலகங்களை பெங்களூருவிலும் அமைத்திருப்பதால் இரு நகரங்களுக்கும் இடையிலான போக்குவரத்து முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்துள்ளது.
அதுமட்டுமின்றி ஓசூரில் தமிழக அரசு புதிய விமான நிலையத்தை அமைக்கும் பணிகளில் தீவிரம் காட்டி வருகிறது. இதனால் பெங்களூருவில் இருந்து ஓசூருக்கு மெட்ரோ ரயில் சேவையை விரிவுப்படுத்தினால் அது ஓசூரின் தொழில் வளர்ச்சிக்கு பெரிய அளவில் கைக்கொடுக்கும். இதனால் தமிழக அரசு பெங்களூரு - அத்திப்பள்ளி இடையே மெட்ரோ ரயில் சேவையை கொண்டு வருவதில் முனைப்பு காட்டி வருகிறது.
தற்போது பெங்களூரை எடுத்து கொண்டால் சல்லக்கட்டா முதல் ஓயிட்பீல்டு வரையும், மாதவராவில் இருந்து சில்க் ரோடு வரையும் மெட்ரோ ரயில் சேவை உள்ளது. சமீபத்தில், பெங்களூரு ஆர்வி ரோடு முதல் பொம்மச்சந்திரா வரை மஞ்சள் வழித்தடத்தில் மெட்ரோ ரயில் சேவை தொடங்கப்பட்டது. இத்தகைய சூழலில்தான் பெங்களூருக்கும் - ஓசூருக்கும் இடையே மெட்ரோ ரயில் இணைப்பு கொண்டு வரப்படும் என கர்நாடக மாநில அரசு அறிவிப்பு வெளியிட்டது. இந்த அறிவிப்பு தென்னிந்தியாவில் இரண்டு மாநிலங்களை இணைக்கும் முதல் மெட்ரோ ரயில் சேவையை ஏற்படுத்தும் வகையில் அமைந்திருந்தது. இந்த திட்டத்திற்கு கர்நாடகா தரப்பில் இருந்து பல்வேறு எதிர்ப்புகள் கிளம்பின. ஏனெனில் இந்த திட்டம் பெங்களூருவைவிட ஓசூருக்குதான் அதிக அளவில் நன்மைகளை ஏற்படுத்தும் என்ற கருத்து தெரிவிக்கப்பட்டது.
இத்தகையச் சூழலில்தான் பெங்களூரு மெட்ரோ ரயில் நிர்வாகம், பெங்களூரு - ஓசூர் இடையிலான மெட்ரோ ரயில் இணைப்பு திட்டம் குறித்த ஒரு அதிர்ச்சியான தகவலை வெளியிட்டுள்ளது. அதில், பெங்களூரு பொம்மசந்திராவில் இருந்து அத்திபள்ளி வரையிலான மெட்ரோ ரயில் திட்டத்திற்கான சாத்தியக்கூறு அறிக்கை தயாரிக்கப்பட்டதாகவும், தொழில்நுட்ப ரீதியில் பெங்களூரு – ஓசூர் இடையிலான மெட்ரோ ரயில் சேவை திட்டத்தை செயல்படுத்துவது சாத்தியமில்லை எனவும் தெரிவித்திருப்பது பொதுமக்கள் இடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
மெட்ரோ ரயில் இயங்க மின்சாரம் தேவையாக உள்ளது. ஆனால் இருமாநிலங்களுக்கு இடையே வெவ்வேறு மின்சார அளவுகள் பயன்படுத்தப்பட்டு வருவதால் இந்த திட்டம் சாத்தியமில்லை என்று பெங்களூரு மெட்ரோ ரயில் நிறுவனம் தெரிவித்துள்ளது. இரு மாநிலங்களுக்கும் இடையிலான ட்ராக்சன் சிஸ்டம்கள் மாறுபட்டு இருப்பதால் அதற்கான எலக்ட்ரிக்கல் அமைப்புகளை ஒருங்கிணைக்க முடியாது எனவும் வல்லுனர்கள் கூறியுள்ளனர்.
முன்னதாக சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் ஓசூர் - பொம்மசந்திரா இடையிலான மெட்ரோ ரயில் சேவைக்கு விரிவான திட்ட அறிக்கையை தயாரித்த போது 25 கிலோ வாட் ஏசி (25 KW AC) ஓவர்ஹெட் ட்ராக்சன் சிஸ்டம் அமைத்தால் ரயில் இணைப்பு சாத்தியம் என கூறியிருந்தது. ஆனால் பெங்களூரு மெட்ரோ ரயில் கழக நிர்வாகம் 750 கிலோ வாட் (750 KW DC) third rail system என்ற அமைப்பை தாங்கள் பயன்படுத்துவதாகவும், இந்த இரண்டு மின் இணைப்புகளையும் ஒன்றிணைத்து ரயிலை இயக்குவது என்பது சாத்தியமில்லை என்றும் கூறியுள்ளது. எனவே மாநில அரசாங்கமே இதில் இறுதி முடிவு எடுக்கும் என்றும் பெங்களூரு மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த திடீர் திருப்பத்தால் பெங்களூரு – ஓசூர் இடையிலான மெட்ரோ ரயில் சேவை திட்டம் கேள்விக்குறியாகியுள்ள நிலையில், என்ன நடக்கப்போகிறது என்பதைப் பொறுத்திருந்து காணலாம்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ