தமிழக அரசியல் வட்டாரங்கள் சமீப நாட்களாக மீண்டும் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. 2026 சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு கூட இல்லாத நிலையில் அரசியல் பரபரப்பு தொடங்கியுள்ளது. எதிரெதிர் துருவங்களாக இருந்த பாஜக மற்றும் அதிமுக 2026 சட்டமன்றத் தேர்தலில் கூட்டணி வைக்கிறோம் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பை நேற்று வெளியிட்டுள்ளனர். இது அதிமுக வட்டாரங்களிலேயே சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. சில மூத்த தலைவர்களுக்கு இதில் உடன்பாடு இல்லை என்றாலும் எடப்பாடி பழனிச்சாமிக்காக ஒத்துக் கொண்டுள்ளனர் என்று கூறப்படுகிறது. மேலும் அதிமுகவின் அழுத்தத்தால் தான் அண்ணாமலை தமிழக பாஜக தலைவர் பொறுப்பில் இருந்து விலகி உள்ளார் என்றும் கூறப்படுகிறது.
மேலும் படிக்க | அமைச்சர் பொன்முடி திமுக கட்சி பொறுப்பில் இருந்து நீக்கம் - முழு விவரம்
தமிழக பாஜக தலைவரான நயினார் நாகேந்திரன்
கடந்த ஒரு மாத காலமாகவே அண்ணாமலை தமிழக பாஜக தலைவர் பொறுப்பிலிருந்து நீக்கப்பட உள்ளார் என்ற தகவல்கள் வெளியாகி வருகிறது. பாஜகவுடன் அதிமுக கூட்டணி வைக்க வேண்டும் என்றால் அண்ணாமலையை அந்தப் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து நீண்ட நாட்கள் பேச்சுவார்த்தை நடந்து வந்த நிலையில் அண்ணாமலை தலைவர் பதவியில் இருந்து நீக்கப்பட்டு புதிய தலைவராக நயினார் நாகேந்திரன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சென்னை வந்திருந்த நிலையில் அதிமுக பாஜக கூட்டணி பற்றிய அறிவிப்பு வெளியானது.
கடந்த 2021 ஆம் ஆண்டு முதல் தமிழக பாஜக தலைவராக இருந்த அண்ணாமலை தற்போது ஒரு முக்கிய அரசியல் தலைவராக மாறியுள்ளார். பல்வேறு போராட்டங்கள், அறிக்கைகள் என தொடர்ந்து தமிழகத்தில் பாஜகவை வளர்ச்சி பாதைக்கு கொண்டு சென்று உள்ளார். புதிய தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள நயினார் நாகேந்திரனை அண்ணாமலை தான் முன்மொழிந்தார் என்றும் கூறப்படுகிறது. இந்நிலையில் தமிழக பாஜக தலைவர் பொறுப்பிலிருந்து விலகிய அண்ணாமலைக்கு தேசிய அளவில் முக்கிய பொறுப்பை வழங்க பாஜக முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. இதுகுறித்து செய்தியாளர் சந்திப்பில் அமித்ஷாவும் தெரிவித்திருந்தார். "அண்ணாமலைக்கு தேசிய அளவில் பொறுப்பு வழங்கப்படும், அவரது திறமையை தேசிய அளவில் நாங்கள் பயன்படுத்துவோம்" என்று தெரிவித்திருந்தார்.
அண்ணாமலைக்கு தேசிய அளவில் பதவி
முன்னால் ஐபிஎஸ் அதிகாரியான அண்ணாமலைக்கு பாஜகவில் தேசிய அளவில் பொறுப்பு வழங்கப்பட உள்ளதாக பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர். பாஜகவின் தேசிய தலைவராக உள்ள ஜேபி நாட்டாவின் பதவிக்காலம் முடிய உள்ள நிலையில் அண்ணாமலைக்கு அந்த பதவியை கொடுக்கலாம் என்று கூறப்படுகிறது. இருப்பிடம் அண்ணாமலை கட்சியில் சேர்ந்து சில வருடமே ஆகியுள்ளதாலும், இளம் வயதிலும் இருப்பதால் இவ்வளவு பெரிய பொறுப்பு வழங்கப்படாது என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் தமிழகத்தை தாண்டி பிற மாநிலங்களில் அண்ணாமலைக்கு அவ்வளவு செல்வாக்கு இல்லை. தேசிய தலைவர் பதவிக்கு பதில் தேசிய பொதுச்செயலாளர் பதவி வழங்கப்படலாம் என்று சொல்லப்படுகிறது. மேலும் தேஜஸ்வி சூர்யா இருக்கும் தேசிய இளைஞர் அணி தலைவராக அண்ணாமலை நியமிக்க படலாம் என்றும் கூறப்படுகிறது.
அண்ணாமலைக்கு மாநிலங்களவை எம்பி பதவி கொடுத்து அமைச்சராக அழகு பார்க்கலாம் என்று ஒரு தரப்பிலிருந்து தகவல்கள் வெளியாகி வருகிறது. தற்போது வரை அண்ணாமலை இது எதற்கும் சரி என்று சொல்லவில்லை என்றும் சிறிது நாட்களுக்குப் பிறகு இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகலாம் என்றும் பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த மாத இறுதிக்குள் அண்ணாமலை புதிய பதவி குறித்த அறிவிப்பு வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் படிக்க | MGR, ஜெயலலிதா விசுவாசி... நெல்லையின் செல்லப்பிள்ளை - யார் இந்த நயினார் நாகேந்திரன்?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









