)
Kerala Ayyappa Devotees Conclave: கேரளா அரசும் திருவாங்கூர் தேவஸ்தானம் நிர்வாகமும் இணைந்து வருகிற செப்டம்பர் 20 ஆம் தேதி உலக ஐயப்பன் சங்கமம் நிகழ்ச்சியை பம்பையில் நடத்த திட்டமிட்டுள்ளனர். இந்த நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு முதலமைச்சர் முக ஸ்டாலினுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. உலக ஐயப்ப சங்கமம் நிகழ்ச்சியில் தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் மற்றும் கேரள முதல்வர் பினராயி விஜயன் ஆகியோர் கலந்து கொள்ளவுள்ளனர். இது பலருக்கு, குறிப்பாக பாஜகவுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், கேரளாவில் நடைபெறும் உலக ஐயப்ப மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் கலந்து கொள்ள உள்ளதையும், விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த வன்னியரசு இந்து கடவுள் ராமன் குறித்து பேசியதற்கும் கடுமையான கண்டனங்களை தெரிவித்தார்.
செய்தியாளர் சந்திப்பில் அவர் பேசியதாவது, 'முதலமைச்சர் மு க ஸ்டாலின் தமிழகத்தில் நடைபெறும் எந்தவித இந்துமத நிகழ்ச்சிகளுக்கும் செல்வதில்லை. ஆனால் கேரள முதல்வர் பினராய் விஜயன் அழைத்துள்ள உலக ஐயப்ப மாநாடு நிகழ்ச்சிக்கு செல்கிறார். இது எந்தவிதமான நம்பிக்கை என அவர்கள் கூற வேண்டும். இந்துமத உணர்வுகளை புண்படுத்தும் விதமாக முதல்வரின் செயல்கள் உள்ளன.
இந்து மதத்தை தீவிரமாக பின்பற்றுபவர் என்கிற அடிப்படையில் விசிக வன்னியரசு ராமர் குறித்து பேசியதை வன்மையாக கண்டிக்கிறேன். சமூக நீதியையும் சமத்துவத்தையும் போற்றுவது கம்பராமாயணமும் ராமரும்தான். அதற்கு ராமாயணத்தில் உதாரணங்கள் உள்ளன. சமதர்மம் எனும் தர்மத்தை உடையவன் ராமன்.
திமுக ஆட்சியில் நடைபெறும் ஆணவக் கொலைகளை தடுப்பதற்கும், ஆணவக் கொலைகளுக்கு எதிரான சிறப்பு சட்டம் இயற்றுவதற்கும், ஆணவக் கொலைகளுக்கு எதிராகவும் போராட்டங்கள் நடத்தாமல், இங்கு நடைபெறும் ஆணவக் கொலைகளுக்கு ராமனும் சனாதன தர்மமும் காரணம் என்கிறார் வன்னியரசு. இதை ஏற்றுக்கொள்ள முடியாது.
சட்டம் ஒழுங்கு மற்றும் அஜாக்கிரதை காரணமாகவே தமிழகத்தில் ஆணவக் கொலைகள் நடந்து வருகிறது. பிற மாநிலங்களில் ஆணவக் கொலைக்கு எதிராக சட்டங்கள் இருக்கும் போது தமிழகத்தில் ஏன் சிறப்பு சட்டம் கொண்டுவர முடியவில்லை. ஆணவக் கொலை தடுக்க ஸ்டாலினிடம் சென்று விசிக போராட்டம் நடத்த வேண்டும்.
இந்த நேரத்தில் நான் ஒரு வேண்டுகோள் வைக்கிறேன். இந்து மதத்தை பின்பற்றுபவர்கள் ராமனை வணங்குபவர்களின் ஒரு ஓட்டு கூட அவர்களுக்கு செல்லக்கூடாது. மேலும் வன்னி அரசுக்கு பாஜக சார்பில் கம்பராமாயணம் புத்தகங்களை வழங்க உள்ளோம்.
தமிழையும் தமிழர்களையும் போற்றுவது பாரதிய ஜனதா கட்சி தான். குடியரசு துணைத் தலைவர் வேட்பாளராக ஒரு தமிழரை அறிவித்துள்ளது பாஜக தான். அதற்கு திமுக உள்ளிட்ட இந்தி கூட்டணி கட்சியினர் அவருக்கு ஆதரவு அளிக்க மறுக்கின்றனர்.
குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் தமிழ் பற்று எனும் முகமூடியை ஸ்டாலின் தான் போட்டுக் கொண்டுள்ளார். தமிழ் முகமூடி அணிந்து கொண்டு சிபி ராதாகிருஷ்ணன் வருகிறார் என முதல்வர் கூறுவதை ஏற்றுக் கொள்ள முடியாது. தமிழர்களின் பாதுகாவலர்கள் என கூறுபவர்கள் அவர்கள் ஏன் ஒரு தமிழரை குடியரசுத் துணைத் தலைவராக ஆதரிக்க மறுக்கின்றனர். மம்தாவின் எதிர்ப்புக்காக தமிழ் வேட்பாளரை தியாகம் செய்தது ஏன் என அவர்கள் தான் கூற வேண்டும்' என தமிழிசை சௌந்தர்ராஜன் தெரிவித்தார்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ