)
பெங்களூரில் அதிகவட்டி தருவதாக கூறி ஆயிரக்கணக்கானவர்களிடமிருந்து முதலீடு பெற்று தலைமறைவாக இருந்த நபரை கரூரில் தாந்தோன்றிமலை பகுதியில் சி.பி ஐ அதிகாரிகள் கைதுசெய்து விசாரணை நடத்தப்பட்டுள்ளது.
கரூர் மாவட்டத்தில் கோவை மாவட்டம் பீளமேட்டை பகுதியை சேர்ந்தவர் சிவக்குமார் (வயது 49). இவர் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் வசிக்கும் நண்பர்கள் 5 பேருடன் சேர்ந்து கடந்த 2016 ஆம் ஆண்டு பெங்களூருவை தலைமையிடமாக கொண்டு நிதி நிறுவனம் ஒன்றை ஆரம்பித்தார்.
அந்த நிதி நிறுவனத்துக்கு சுமார் 5000க்கும் மேற்பட்ட முதலீட்டாளர்களிடமிருந்து முதலீடுகளை பெற்றுள்ளனர். இதில் ஒடிசா மாநிலத்திலிருந்து 500க்கும் மேற்பட்டவர்கள் இதில் முதலீடு செய்துள்ளனர்.
அதிக வட்டி தருவதாக முதலீடு பெற்று, உரிய காலம் முடிந்தும் திருப்பி தராததால் பாதிக்கப்பட்டவர்கள் ஒடிசா மாநிலத்தில் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இதனை விசாரித்த நீதிபதிகள் இந்த வழக்கை சிபிஐக்கு மாற்றியும், நிதி நிறுவன பங்குதாரர்களை கைது செய்ய வேண்டும் என உத்தரவிட்டிருந்தது. அதன் அடிப்படையில் கடந்த 8 மாதங்களுக்கு முன்பு 5 பேரை சி.பி.ஐ கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் தலைமறைவாக இருந்த சிவக்குமாரை சி.பி.ஐ போலீசார் தேடி வந்தனர்.
இந்நிலையில் சிவக்குமார் தாந்தோன்றிமலை காவல் நிலையத்திற்கு உட்பட்ட கணபதிபாளையத்தில் தங்கி இருப்பதாக சி.பி.ஐக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதனை தொடர்ந்து புவனேஷ்வரிலிருந்து சி.பி.ஐ அதிகாரி தலைமையில் வந்த சி.பி.ஐ டீம் தாந்தோன்றிமலை காவல் நிலைய போலீசாரின் உதவியுடன் கணபதிபாளையம் சென்று அங்கு பதுங்கி இருந்த சிவக்குமாரை கைது செய்தனர்.
இதனையடுத்து தாந்தோன்றிமலை காவல் நிலையத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.