பற்றாக்குறை இல்லாத பட்ஜெட் தாக்கல் செய்ய வேண்டுமா ? - அறநிலையத்துறைக்கு நீதிபதிகள் சொன்ன ‘அட்வைஸ்’!

Chennai Highcourt : கோவில் நிலங்களை முழுமையாக மீட்பதில் இந்து சமய அறநிலையத்துறைக்கு தொடர்ந்து சிக்கல் நீடித்து வந்தது. அதற்கு சென்னை உயர்நீதிமன்றம் பல்வேறு அதிரடி உத்தரவுகளை பிறப்பித்துள்ளது.   

Written by - நவீன் டேரியஸ் | Last Updated : Jul 1, 2022, 09:27 PM IST
  • ‘கோவில் நிலங்களை மீட்பதில் சுணக்கம் வேண்டாம்’
  • அறநிலையத்துறைக்கு செ. உயர்நீதிமன்றம் உத்தரவு
  • ‘இதைச் செய்தால் பற்றாக்குறை இல்லாத பட்ஜெட்டைத் தாக்கல் செய்யலாம்’
பற்றாக்குறை இல்லாத பட்ஜெட் தாக்கல் செய்ய வேண்டுமா ? - அறநிலையத்துறைக்கு நீதிபதிகள் சொன்ன ‘அட்வைஸ்’! title=

கோவில் சிலைகள் மற்றும் நகைகள் பாதுகாப்புத் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கு விசாரணையை எடுத்துக்கொண்டது. அதில், 75க்கும் மேற்பட்ட வழிகாட்டுதல்களை வழங்கி உத்தரவிட்டுள்ளது. அவற்றில் 38 உத்தரவுகளை அமல்படுத்தி விட்டதாகவும், 5 உத்தரவுகள் மாநில அரசு தொடர்பில்லாதது என்றும், 32 உத்தரவுகளில் மறு ஆய்வு செய்ய வேண்டுமெனவும் தமிழக அரசு தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கு நீதிபதிகள் மகாதேவன், ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. நீதிமன்றத்தில் நடந்த வாதங்கள் பின்வருமாறு ;-

இந்து சமய அறநிலையத் துறை தரப்பில் வழக்கறிஞர் அருண் நடராஜன் ஆஜராகி அளித்த வாதங்கள் :-

உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் பழமையான கோவில்கள் புனரமைக்கப்பட்டு வருகிறது. அதற்கான பணியில் கோவில்களின் செயல் அலுவலர்கள், பொதுப்பணித் துறையினர் நேரடியாக  ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இரு துறை அதிகாரிகளும், கோவில்களின் புனரமைப்பிற்கான மாவட்ட மற்றும் மாநில குழுக்களின் ஆலோசனைப்படி செயல்பட்டு வருகின்றனர். 

மேலும் படிக்க | திருச்செந்தூர் விசாகத் திருவிழா... இரண்டு ஆண்டுகளுக்குப்பின் கோலாகலம்

ஒரு கால பூஜை நடைபெறும் கோவில்களுக்கான நிதி, ஒரு லட்ச ரூபாயில் இருந்து, 2 லட்ச ரூபாயாக உயர்த்தப்பட்டு உள்ளது. கோவில்களின் கணக்குகளை தணிக்கை செய்ய தமிழக தணிக்கை துறை தலைவர் தலைமையில் 5 நபர்கள் கொண்ட குழுவை அமைத்து அரசாணையும் வெளியிடப்பட்டுள்ளது. அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களுக்கு சொந்தமான 5,82,039 ஏக்கர் நிலங்களில் 3,79,000 ஏக்கர் நிலங்கள் கண்டறியப்பட்டு, அவற்றின் விவரங்கள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. மீதமுள்ள நிலங்கள் கண்டறியப்பட்டு வருகிறது. நாளொன்றுக்கு 2000 ஏக்கர் வீத நிலங்கள் மீட்கப்பட்டும் வருகிறது. 

இதுமட்டுமல்லாமல், கோவில்களில் ஸ்ட்ராங் ரூம்கள் கட்டும் பணிகளும் நடந்துவருகிறது. குறிப்பாக, கும்பகோணம் அருகே பந்தநல்லூர் பசுபதீசுவரர் கோவிலில் ஏற்கனவே கட்டப்பட்டுவிட்டது. எனவே நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில் பெரும்பாலானவை நிறைவேற்றப்பட்டு வருகிறது. சிலவற்றை மறு ஆய்வு செய்து வருகிறோம். எனவே, மனுவை பரிசீலித்து முடிவெடுக்க வேண்டுகிறோம்.

நீதிபதிகள் மகாதேவன், ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய அமர்வு அளித்த உத்தரவுகள் :-

கோவில் புனரமைப்பு குழுக்கள் எடுக்கும் முடிவுகளை மற்ற துறைகள்  ஏற்க வேண்டும். அறநிலையத்துறை பணிகளில் குழுக்கள் யாரும் தலையிடாது. புனரமைப்பு பணிகளில் பொதுப்பணித்துறை அதிகாரிகள் அல்லது செயல் அலுவலர்கள் நேரடியாக ஈடுபடவில்லை என்பதை உறுதிசெய்ய வேண்டும். கணக்கு தணிக்கைக்கு ஒரே ஒருவர் தலைமையில் மற்ற 5 அலுவலர்கள் கொண்ட குழு போதாது. எனவே, குறைந்தபட்சம் 15 தணிக்கையாளர்கள் உள்ள குழுவை அமைக்க வேண்டுமென அரசிடம் தெரிவியுங்கள். 

அறநிலையத்துறை கோவில்களின் பணிகளுக்காக இணையதளங்கள் வாயிலாக தனியார் அறக்கட்டளைகள் நிதி வசூலிப்பதை அனுமதிக்கக் கூடாது. அப்படிப்பட்ட இணையதளங்களை உடனடியாக முடக்க வேண்டும். அதுதொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கையை அறிக்கையாக தாக்கல் செய்யுங்கள்.

(அப்போது இந்து சமய அறநிலையத்துறை தரப்பில் இதுபோன்ற புகாரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.)

இனி, கோவில் நிலங்கள் மீட்பதில் சுணக்கம் ஏற்படக்கூடாது. ஆக்கிரமிப்பாளர்கள் இருந்தால் உடனடியாக வெளியேற்றுங்கள். கட்டிடங்களை பூட்டி சீல் வையுங்கள். தர மறுத்தால் அவர்களின் தனிப்பட்ட சொத்துக்களை முடக்கவும் அறநிலையத்துறைக்கு அதிகாரம் உள்ளது. அங்கீகரிக்கப்படாத குத்தகைகள் இருந்தால் அவற்றை உடனடியாக ரத்து செய்ய வேண்டும். அதற்கு, உடந்தையாக உள்ள அதிகாரிகளுக்கு எதிராக புகார்கள் வருவதால் அவற்றை ஆராய்ந்து உரிய நடவடிக்கை எடுங்கள். 

மேலும் படிக்க | கோயிலுக்குள் பட்டியலின தம்பதிக்கு அனுமதி மறுக்கப்பட்டதால் சர்ச்சை..!

குறிப்பாக அறநிலையத்துறை கோவில்களுக்கு சொந்தமான சொத்துகள் மூலம் வருகின்ற வருவாயை முறையாக வசூலித்தாலே போதும். அதன்மூலம், தமிழக அரசால் பற்றாக்குறை இல்லாத பட்ஜெட்டைத் தாக்கல் செய்ய முடியும்.

இதையடுத்து இந்த வழக்கு விசாரணை மூன்று வாரங்ளுக்கு தள்ளிவைக்கப்பட்டது. 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News