Chennai - Hyderabad Bullet High Speed Train Service: நாட்டின் அதிவேக ரயில் சேவையை வழங்கும் புல்லட் ரயில் இன்னும் சில ஆண்டுகளில் மக்களின் பயன்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. முதற்கட்டமாக மும்பை - அகமதாபாத் வழித்தடத்தில் புல்லட் ரயில் சேவைக்கான பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன.
Chennai - Hyderabad Bullet High Speed: தென்னிந்திய நகரங்களை இணைக்கும் புல்லட் ரயில்
அந்த வகையில், அகமதாபாத் - மும்பை வழித்தடத்தை தாண்டி தென்னிந்தியாவின் 4 மாநிலங்களை இணைக்கும் வகையிலான புல்லட் ரயில் சேவை குறித்தும் திட்டமும் முன்மொழியப்பட்டுள்ளது. தெலங்கானா, ஆந்திரா, கர்நாடகா, தமிழ்நாடு என நான்கு மாநிலங்களையும் இணைக்கும் புல்லட் ரயில் சேவை கொண்டுவரப்பட இருக்கிறது. இந்த புல்லட் ரயில் சேவைக்கான கணக்கெடுப்பு பணிகள் ஏற்கனவே நடந்து வருவதாகவும், ஹைதராபாத், சென்னை, அமராவதி,பெங்களூரு உள்ளிட்ட முக்கிய தென்னிந்திய நகரங்களை இணைப்பதற்கான அவற்றின் திறனை வலியுறுத்தும் விதமாகவும் ஆந்திரப் பிரதேச முதல்வர் சந்திரபாபு நாயுடு சமீபத்தில் பேசியிருந்தார்.
Chennai - Hyderabad Bullet High Speed: இன்னும் ஒரு மாதம்...
முன்மொழியப்பட்டுள்ள சுமார் 778 கி.மீ., தூரம் கொண்ட ஹைதராபாத் - சென்னை இடையிலான புல்லட் ரயில் பாதை குறித்த முக்கிய அப்டேட் வெளியாகி உள்ளது. விரிவான திட்ட அறிக்கையில் (DPR) சேர்ப்பதற்கான இறுதி சீரமைப்பை தெற்கு மத்திய ரயில்வே தமிழக அரசிடம் தற்போது சமர்ப்பித்துள்ளது. மேலும், கணக்கெடுப்பு நடவடிக்கையை துரிதப்படுத்த உடனடியாக ஒப்புதல் அளிக்கும்படியும் கோரியுள்ளது. இதுகுறித்து சென்னை ஒருங்கிணைந்த பெருநகர போக்குவரத்து ஆணையத்தின் (CUMTA) உறுப்பினர் செயலாளர் ஐ. ஜெயக்குமார் கூறுகையில், மாநில அரசு அனுமதி அளித்தவுடன், ஒரு மாதத்திற்குள் DPR இறுதி செய்யப்படும் என தகவல் தெரிவித்துள்ளார்.
Chennai - Hyderabad Bullet High Speed: கணிசமாக குறையும் பயண நேரம்
ஹைதராபாத் - சென்னை செல்ல தற்போது 12 மணிநேரமாகும். ஆனால், புல்லட் ரயிலால் பயண நேரம் சுமார் 2 மணிநேரம் 20 நிமிடங்கள் ஆக குறையும். இதனால் சுமார் 9 மணிநேரம் 30 நிமிடங்கள் வரை சேமிக்கலாம். தமிழ்நாட்டின் வேண்டுகோளுக்கு இணங்க, கூடூர் வழியாக புல்லட் ரயில் இணைக்கபடும் என முந்தைய திட்டம் முன்மொழியப்பட்டது. தற்போது கூடுருக்கு பதிலாக திருப்பதியில் ஒரு ரயில் நிலையத்தைச் சேர்க்கும் வகையில் இறுதி சீரமைப்பு திருத்தப்பட்டுள்ளது.
Chennai - Hyderabad Bullet High Speed: தெற்கு ரயில்வே கோரியவை என்ன?
தமிழ்நாட்டில் இரண்டு நிலையங்களில் இந்த புல்லட் ரயில் நின்று செல்ல திட்டமிடப்பட்டுள்ளது. சென்னை சென்ட்ரல் மற்றும் மீஞ்சூர் அருகே சென்னை ரிங் ரோட்டில் ஒரு புதிய ரயில் நிலையம் அமைய இருக்கிறது. போக்குவரத்து சார்ந்த வளர்ச்சியை செயல்படுத்தவும், புதிய வணிக மையங்கள் மற்றும் இயக்க மையங்களை உருவாக்கவும், ஒவ்வொரு நிலையத்தையும் சுற்றி சுமார் 50 ஏக்கர் நிலத்தை ரயில்வே கோரியுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை ஒருங்கிணைந்த பெருநகர போக்குவரத்து ஆணையத்திற்கு, தெற்கு மத்திய ரயில்வே சமீபத்தில் எழுதிய கடிதத்தில், ரயில் நிலைய இடங்களை விரைவில் இறுதி செய்தல், நிலம் கையகப்படுத்துதலுக்கு கொள்கை ரீதியான ஒப்புதல் அளித்தல் மற்றும் தமிழ்நாட்டின் நீண்டகால உள்கட்டமைப்பு திட்டத்தில் புல்லட் ரயில் சேவை வழித்தடத்தை ஒருங்கிணைத்தல் ஆகியவற்றைக் கோரியிருக்கிறது. இறுதி இருப்பிட கணக்கெடுப்பு (FLS) தாமதங்களை தவிர்க்கும் விதமாக, ரயில்வே அதிகாரிகள் கூட்டு கள ஆய்வுகளையும் கோரியுள்ளனர்.
Chennai - Hyderabad Bullet High Speed: சென்னைக்கு முக்கியமான திட்டம்
சென்னை நகரைப் பொறுத்தவரை, புல்லட் ரயில் சேவை திட்டம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. ஏனெனில் தமிழ்நாட்டிற்குள் உள்ள 61 கி.மீ நீளத்திற்கு பாதை அமைகிறது. மேலும், இரண்டு முக்கிய ரயில் நிலையங்களும் சேர்க்கப்பட உள்ளன. இந்தப் பகுதிக்கான மொத்த நிலத் தேவை 223.44 ஹெக்டேர் ஆக மதிப்பிடப்பட்டுள்ளது. அதிலும் வனப்பகுதிக்குள் ஏதும் நிலத் தேவை இல்லாததால் சுற்றுச்சூழல் சார்ந்த பிரச்னைகள் ஏதுமில்லை.
மேலும், புல்லட் ரயில் 65 சாலைகள் மற்றும் 21 உயர் அழுத்த மின் இணைப்புகளுக்கு இடையே பயணிக்கிறது. இதற்கு அதிகாரிகளுடன் நெருக்கமான ஒருங்கிணைப்பு தேவைப்படுகிறது. சவால் முன்மொழியப்பட்ட 11.6 கி.மீ சுரங்கப்பாதை பொறியியல் ரீதியாக முக்கியத்துவம் பெற்றதாகும். இது விரிவான புவிசார் தொழில்நுட்ப விசாரணைகளுக்கு உட்படும். போந்தவாக்கம், தச்சூர், விச்சூர், மாத்தூர் மற்றும் தண்டையார்பேட்டை உட்பட பல வட சென்னை குடியிருப்புகளுக்கு அருகிலும் இந்த பாதை செல்கிறது. இங்கு கட்டுமானத் திட்டமிடல் மற்றும் மக்கள் பாதிப்பை குறைப்பது ஆகியவை முக்கிய சிக்கலுக்குரியதாக இருக்கலாம்.
மேலும் படிக்க | மெட்ரோ ரயில் நிலையங்கள் மூலம் அதிக வருவாய்... CMRL போட்டுள்ள ஸ்பெஷல் திட்டம் என்ன?
மேலும் படிக்க | பூந்தமல்லி பைபாஸ் - போரூர் மெட்ரோ... டிசம்பரில் வராது? - தாமதத்திற்கு பின்னணி என்ன?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









