Chennai Latest News Updates: சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில் சர்வதேச மகளிர் தினத்தையொட்டி பெருநகர சென்னை மாநகராட்சி சார்பாக 'பாதுகாப்பான சென்னை... வண்ண கோலங்களால் எண்ணங்களை மாற்றுவோம்' என்ற கருப்பொருளை வைத்து ஆண்களுக்கான கோலப்போட்டிகள் நடைபெற்றது.
Chennai Latest News Updates: சென்னை மேயர் பேட்டி
இந்நிலையில், இன்றைய கோலப்போட்டியின் இறுதியில் பெருநகர் சென்னை மாநகராட்சி மேயர் பிரியா கலந்து கொண்டு கோலங்களை பார்வையிட்டு பங்கேற்பாளர்களுக்கு பரிசுகளை வழங்கினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் பிரியா பேசியதாவது,"2022 ஆம் ஆண்டு முதல் சென்னை மாநகராட்சி பகுதிகளில் Gender and policy lab தொடங்கப்பட்டது. இந்தியாவிலே முதல் முறையாக சென்னை மாநகராட்சியில் தான் Gender and Policy lab தொடங்கப்பட்டது.
கடந்த ஆண்டு பொது இடங்களில் பெண்கள் பாதுகாப்பாக இருக்கிறார்களா என்பதை உணர்கிறார்களா என்ற கருத்துக்கணிப்பை முன்னெடுத்திருந்தோம். அதில் எந்தெந்த பகுதிகளில் பெண்கள் பாதுகாப்பாக உணர்கிறார்கள், எந்த பகுதியில் பெண்கள் பாதுகாப்பற்ற தன்மையை உணர்கிறார்கள் என சில பெண்களின் கருத்துக்களை கேட்டறிந்தோம்.
குறிப்பாக சுரங்கப்பாதை மற்றும் பேருந்து நிலையங்களில் இரவு நேரங்களில் செல்லும்போது கூடுதல் வெளிச்சம் வேண்டும் என கோரிக்கை முன் வைத்தார்கள். சில பகுதிகளை குறிப்பிட்டு சொல்லி இருந்தார்கள். அந்தப் பகுதிகளில் உள்கட்டமைப்பு மேம்படுத்தப்பட்டது.
Chennai Latest News Updates: மாணவர்கள், மக்கள் இடையே விழிப்புணர்வு
பாலியல் சமத்துவம் அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்லும் வகையில் 2023ஆம் ஆண்டு மாநகராட்சி பள்ளியில் கொண்டு வந்தோம். 6, 7, 8 ஆம் வகுப்பு படிக்கக்கூடிய மாணவர்களுக்கு பெண் குழந்தைகளுக்கு எவ்வளவு உரிமை உள்ளது? ஆண் குழந்தைகள் பெண் குழந்தைகளை எப்படி மதிக்க வேண்டும், சமத்துவம், முக்கியம் குறித்து வாரத்தில் ஒரு வகுப்பில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் நடைபெற்று வருகிறது. மேலும் பூங்காக்கள், கடற்கரை பகுதிகளில் பொது மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம்.
8 மாதத்திற்கு முன்பாக 'தப்புன்னு தெரிஞ்சா, பட்டுனு கேட்போம்' என்ற விழிப்புணர்வு ஏற்படுத்தியிருக்கிறோம். பொது இடத்தில் தவறு நடக்கும் போது பெண்ணுக்கு துயரம் நடக்கும் போது அந்த பகுதியில் இருக்கக்கூடிய பொதுமக்கள் குரல் கொடுத்து அந்த பெண்ணிற்கு குரல் கொடுக்க வேண்டும் என முன்னெடுப்பை எடுத்து வருகிறோம்.
Chennai Latest News Updates: சென்னை தான் பாதுகாப்பான நகரம்
இந்தியாவிலே சென்னை மாநகராட்சி பெண்களுக்கு பாதுகாப்பான நகரமாக இருக்கிறது என கணக்காய்வு தெரிவித்துள்ளது. மேலும் சென்னை இரண்டாம் இடத்தில் உள்ளது விரைவில் முதல் இடத்தை பிடிக்கும் என தெரிவித்துக் கொள்கிறேன். உலக மகளிர் தினத்தை முன்னிட்டு பல்வேறு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பெண்கள் இந்த வேலையை தான் செய்ய வேண்டும், ஆண்கள் இந்த வேலை தான் செய்ய வேண்டும் என உள்ளது. அனைவரும் சமம் என்ற அடிப்படையில் கோலப்போட்டிகள் இன்று நடைபெற்றது. ஆண்கள் மட்டுமே பங்கேற்று இருந்தனர், அதில் பரிசுகளும் வழங்கப்பட்டிருக்கிறது. ஆண், பெண் இருவரும் சமம் என்ற அடிப்படையில் இந்த போட்டிகள் நடைபெற்றது" என்றார்.
Chennai Latest News Updates: விஜய் பேச்சுக்கு மேயர் பிரியா பதில்
இந்தியாவிலேயே பெண்களுக்கு பாதுகாப்பான இடம் சென்னை என கூறுகிறீர்கள், ஆனால் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் உள்ளதாக பேசி உள்ளார் என்பது குறித்தான கேள்விக்கு,"தலைவர்கள் இப்போதுதான் வருகிறார்கள். அரசியல் களத்தை இன்னும் பார்க்க வேண்டியது இருக்கிறது, இருந்தாலும் எங்கள் முதலமைச்சர் பெண்களுக்கு பல்வேறு திட்டங்களை கொண்டு வந்து பல்வேறு பெண்கள் பயனடைந்து உள்ளார்கள். பெண்ணுக்கு கல்வி மட்டும் தான் கை கொடுக்கும், அப்படிப்பட்ட கல்வியை புதுமைப்பெண் திட்டத்தின் மூலமாக முதலமைச்சர் வழங்கி வருகிறார். தவெக தலைவர் கருத்திற்கு முக்கியத்துவம் அளிக்க தேவையில்லை" எனவும் தெரிவித்தார்.
Chennai Latest News Updates: சென்னை பட்ஜெட் 2025 குறித்து...
மாநகராட்சி பட்ஜெட்டில் முக்கிய அறிவிப்புகள் வெளியாகுமா என்ற கேள்விக்கு,"பட்ஜெட்டில் கல்வி, மருத்துவத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்துள்ளோம். சென்னை மாநகராட்சியில் உள்ள பள்ளிகள் தனியார் பள்ளிக்கு நிகராக கட்டமைப்பு, திறன் மேம்பாடு வகுப்புகளை பார்த்து பார்த்து செய்து வருகிறோம். இந்த நிதிநிலை அறிக்கையில் மாணவர்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கக்கூடிய அளவில் அறிவிப்புகள் இருக்கும்" என்றார்.
Chennai Latest News Updates: பசுமை பந்தல்
பசுமை பந்தல் எத்தனை இடத்தில் அமைக்கப்பட்டுள்ளது என்பது குறித்தான கேள்விக்கு, "கடந்தாண்டு மாநகராட்சி சார்பாக பசுமை பந்தல் அமைக்கப்பட்டது. போக்குவரத்து சிக்னல்களில் நிற்கும் போது வெளியிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் மயக்கம் அடையக் கூடிய நிலை ஏற்பட்டுள்ளதால் கடந்த ஆண்டு பசுமை பந்தல் அமைக்கப்பட்டது. மக்களிடம் நல்ல வரவேற்பு வந்துள்ளது.
கடந்த ஆண்டு மே மாதம் தான் பசுமை பந்தல் அமைக்கப்பட்டது. ஆனால் வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளதால் இந்தாண்டு மார்ச் மாதமே மாநகராட்சி சார்பாக பணிகள் பசுமை பந்தல் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. 14 இடங்கள் தேர்வு செய்யப்பட்டு அந்த பகுதிகளில் பசுமை பந்தல் அமைக்கப்படும். வரக்கூடிய நாட்களில் பொதுமக்கள் கோரிக்கை ஏற்ப மற்ற இடங்களில் அதிகரிக்கப்படும்" என்றார்.
Chennai Latest News Updates: ஆண்களுக்கான கோலப்போட்டிகள்
முன்னதாக, பெண்களின் உரிமை சமத்துவம் மற்றும் அதிகாரமளித்தலை முன் வைக்கும் விதமாக ஆண்கள் பலர் கலந்துக்கொண்டு விழிப்புணர்வு கோலங்களை தீட்டினர். இந்த போட்டிகளில் பங்கேற்க 19 வயதிற்கு மேற்பட்ட ஆண்கள் பங்கேற்கலாம் என பெருநகர சென்னை மாநகராட்சி ஏற்கனவே அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் இன்றயை தினம் பெசன்ட் நகர் கடற்கரை பகுதிகளில் ஏராளான ஆண்கள் கலந்துக்கொண்டு கோலங்களை தீட்டினர்.
ஏற்கனவே பெருநகர சென்னை மாநகராட்சி சார்பாக உலக மகளிர் தினத்தை ஓட்டி பெண்களுக்கு பொது இடங்களில் இடையூறு ஏற்பட்டால் அதனை எப்படி கையாள வேண்டும் என்பது குறித்தான தற்காப்பு நுட்பங்கள் குறித்தான விழிப்புணர்வு வகுப்புகள் இராயபுரம் ராபிட்சன் பூங்கா, பெரம்பூர் முரசொலி மாறன் பூங்கா, கோட்டூர்புரம் இன்ஃபினிட்டி பூங்கா ஆகிய மூன்று பூங்காக்களில் நடைபெற்றது. பின்னர், பெண்களின் பாதுகாப்பை உணர்த்தும் விதத்தில் பெசன்ட் நகர் கடற்கரை சாலையில் 'எல்லோருக்குமான சென்னை' என்ற தலைப்பில் கலை நிகழ்ச்சிகள் நேற்று மாலை நடைபெற்றது.
மேலும் படிக்க | கூடும் நாடாளுமன்றம்: திமுக எழுப்ப இருக்கும் முக்கிய பிரச்னைகள்... என்னென்ன தெரியுமா?
மேலும் படிக்க | முதியோர், மாற்றுத் திறனாளிகள், விதவை அடையாள அட்டை - தமிழ்நாடு அரசு முக்கிய அறிவிப்பு
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









