)
MK Stalin Germany, England Tour: ஜெர்மனி, இங்கிலாந்து நாடுகளுக்கு தமிழ்நாட்டை நோக்கி முதலீடுகளை ஈர்க்க, முதலமைச்சர் ஸ்டாலின் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இந்நிலையில், முதலமைச்சர் ஸ்டாலின் இன்று காலை சென்னை விமான நிலையம் வந்தார். அங்கு அமைச்சர்கள், அதிகாரிகள், திமுகவினர் பலரும் வருகை தந்து அவரது சுற்றுப்பயணத்திற்கு தங்களின் வாழ்த்துகளை தெரிவித்தனர்.
தொடர்ந்து, சென்னை விமான நிலையத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், "ஒருவார பயணமாக ஜெர்மனி, இங்கிலாந்து நாடுகளுக்கு பயணம் மேற்கொள்கிறேன். தமிழ்நாட்டிற்கு பெரு முதலீடுகளை ஈர்க்க வெளிநாடுகளுக்குச் செல்கிறேன். புதிய புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடவும் திட்டமிடப்பட்டுள்ளது செப். 8ஆம் தேதி தமிழகம் திரும்புவேன்.
2021ஆம் ஆண்டு முதல் திராவிட மாடல் ஆட்சியில் இதுவரை ரூ.10.62 லட்சம் கோடியில் முதலீடுகள் ஈர்க்கப்பட்டு 922 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளன. இதில் பெரும்பாலான ஒப்பந்தங்கள் முதலீடாக மாறி பணிகள் தொடங்கிவிட்டன. பல நிறுவனங்கள் உற்பத்தியை தொடங்கிவிட்டன. இதற்கு ஒன்றிய அரசு வெளியிடும் புள்ளிவிவரங்களே சாட்சியாக உள்ளன.
மேலும் தொடர்ந்து பேசிய அவர், "நான் வெளிநாடு செல்லும்போதெல்லாம் தமிழ்நாட்டை அமைதியான மாநிலமாக, திறமையான இளைஞர்களை கொண்ட மாநிலமாக, வாய்ப்புகளை உருவாக்கும் மாநிலமாக திகழ்வதை எடுத்துக்கூறி முதலீடுகளை ஈர்த்திருக்கிறேன். இதுவரை ஐக்கிய அரபு அமீரகம், ஜப்பான், சிங்கப்பூர் ஸ்பெயின், அமெரிக்கா என 5 நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டேன். இதில் அமெரிக்க சுற்றுப்பயணத்தில் 19 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள், ஸ்பெயின் 3 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள், ஜப்பான் 7 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள், ஐக்கிய அரபு அமீரகத்தில் 6 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள், சிங்கப்பூரில் 1 புரிந்துணர்வு என 36 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டன. 18,498 கோடி ரூபாய் மதிப்பிலான முதலீடுகள் தமிழ்நாட்டிற்கு வந்துள்ளது.
36 புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் 23 திட்டங்கள் பல்வேறு செயல்பாட்டு நிலைகளில் இருக்கிறது. இதன் தொடர்ச்சியாகவே இப்போது ஜெர்மனி, இங்கிலாந்து செல்கிறேன். அங்கு போடப்படும் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் குறித்து செய்தி வெளியீடு கொடுக்கச் சொல்லியிருக்கிறேன். நான் தமிழகம் திரும்பிய பின்னரும் அதுகுறித்து கூறுவேன். இந்த பயணத்தில் முக்கியமாக செப். 4ஆம் தேதி ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் நடைபெறும் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு கருத்தரங்கு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு அங்கு பகுத்தறிவு பகலவன் பெரியாரின் படத்தை திறந்துவைக்கக் கூடிய அற்புதமான நிகழ்வு நடைபெறுகிறது. நாட்டிலேயே அதி வேகமாக வளர்ச்சி பாதையில் முன்னேறும் தமிழ்நாட்டை நோக்கி புதிய முதலீடுகளை ஈர்க்க நான் பயணிக்கிறேன். உங்களுடைய வாழ்த்துக்கள் எனக்கு வேண்டும். தமிழ்நாட்டு மக்களின் அன்போடு நான் புறப்பட்டு செல்கிறேன் என்பதை உங்களிடத்தில் நான் மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன்." என்றார்.
இதைத்தொடர்ந்து செய்தியாளர்களின் கேள்விகளுக்கு முதல்வர் ஸ்டாலின் பதில் அளித்தார். வெளிநாட்டு பயணங்களால் தமிழ்நாட்டிற்கு உண்மையாகவே பயன் உண்டா என அதிமுகவின் தொடர்ச்சியான விமர்சனம் குறித்த கேள்விக்கு, "வெளிநாட்டு பயணத்தைப் பொறுத்தவரைக்கும் எதிர்க்கட்சி தலைவராக இருக்க கூடிய எடப்பாடி பழனிச்சாமி இது குறித்து விமர்சனம் செய்திருக்கிறார். பழனிச்சாமி பொருத்தவரை தன்னுடைய பயணம் எப்படி இருந்ததோ அப்படித்தான் இந்த பயணமும் இருக்கும் என்று நினைக்கிறார். ஆனால் நான் கையெழுத்து போடக் கூடிய அனைத்து ஒப்பந்தங்கள் நடைமுறைக்கு வந்திருக்கிறது" என பதிலடி கொடுத்தார்.
திமுக கூட்டணியில் புதிய கட்சிகள் இணைய வாய்ப்பிருக்கிறதா என்பது தொடர்பான கேள்விக்கு, "புதிய கட்சிகள் வருகிறதோ இல்லையோ புதிய வாக்காளர்கள் திமுக பக்கம் வந்து கொண்டிருக்கிறார்கள்" என்றார். பீகார் சுற்றுப்பயணம் குறித்தும் அங்கு தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு குறித்தும் கேட்கப்பட்ட கேள்விக்கு, "யார் எப்படிப்பட்ட சதி செய்தாலும் அதை முறியடிக்க கூடிய வல்லமை தமிழ்நாட்டிற்கு உண்டு. பீகாரில் கூட தேர்தல் ஆணையம் நினைப்பது நடக்காது. நான் சென்று வந்த அனுபவத்தில் சொல்கிறேன். பீகாரிலும் மக்களை எழுச்சி பெற தேர்தல் ஆணையம் உதவி செய்து இருக்கிறது என்பதுதான் உண்மை" என்றார். CVoter கருத்துக்கணிப்பு குறித்த கேள்விக்கு, "எந்த கருத்துக்கணிப்பு இருந்தாலும் எல்லா கருத்துக்கணிப்புகளையும் மிஞ்சி அமோக வெற்றி தான் திமுக கூட்டணி பெறப்போகிறது, அதில் எந்த சந்தேகமும் இல்லை" என்றார்.
தொடர்ந்து, நடிகர் விஜய்யின் அரசியல் வருகை பற்றி நீங்கள் எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை என்பது தொடர்பான கேள்விக்கு, "சொல்ல வேண்டிய அவசியம் இல்லை" என பதிலளித்தார். 2026ஆம் ஆண்டில் தமிழக வெற்றி கழகத்திற்கும் திராவிட முன்னேற்றக் கழகத்திற்கும் தான் போட்டி என விஜய் சொல்வது தொடர்பான கேள்விக்கு, "நான் அதிகம் பேசமாட்டேன். இதற்கெல்லாம் பேச வேண்டிய அவசியம் இல்லை. பேச்சைக் குறித்து செயலில் நம்முடைய திறமையை காட்ட வேண்டும்" என்றார்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ