கோவை கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட பகுதியில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்து வந்த டாஸ்மாக் பாறை அடித்து உடைத்து நாம் தமிழர் கட்சியினர்..!
)
மதுரையைச் சேர்ந்த 21 வயதுடைய ஒரு மாணவி, கோவையில் உள்ள கலைக் கல்லூரியில் முதுகலை முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இவர் அங்குள்ள தனியார் விடுதியில் தங்கி கல்லூரிக்குச் சென்று வந்துள்ளார்.
இந்த மாணவி நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால், ஒண்டிப்புதூரைச் சேர்ந்த தனது ஆண் நண்பருடன் காரில் வெளியே சென்றுள்ளார்.
அவர்கள் விமான நிலையத்தின் பின்புறம் உள்ள பிருந்தாவன் நகர் பகுதியில் காரை நிறுத்தி இருந்தனர். இரவு 11 மணியளவில் காரை நிறுத்திவிட்டு இருவரும் பேசிக் கொண்டிருந்தபோது, அங்கு மூன்று மர்ம நபர்கள் வந்துள்ளனர். ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் கார் நிறுத்தப்பட்டிருந்ததால், அவர்கள் அதன் அருகே சென்றுள்ளனர். உள்ளே கல்லூரி மாணவியும், அவரது நண்பரும் இருந்ததைக் கண்டதும், மர்ம நபர்கள் அவர்களை வெளியே வரக் கோரி மிரட்டி உள்ளனர்.
அந்தக் கும்பலின் நடவடிக்கையைக் கண்டு அஞ்சிய மாணவியும், அவரது நண்பரும் தப்பிச் செல்ல முயன்றுள்ளனர். தொடர்ந்து மிரட்டிய மர்ம நபர்கள், காரைத் தடுத்து நிறுத்தி கண்ணாடியை உடைத்துள்ளனர். அச்சத்துடன் ஆண் நண்பர் வெளியே வந்ததும், அவரது தலையில் கொடுவாள் மூலம் தாக்கி உள்ளனர். தலையில் பலத்த அடிபட்ட அவர் அங்கேயே மயங்கி விழுந்துள்ளார். அதைக் கண்ட மாணவி உயிர் பயத்தில் நடுங்கி உள்ளார்.
உடனே, மூன்று பேர் கொண்ட அந்தக் கும்பல், கத்தி முனையில் மாணவியை மிரட்டி வலுக்கட்டாயமாகப் புதர் பகுதிக்குள் தூக்கிச் சென்று கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படுகிறது.
மயக்கம் தெளிந்த ஆண் நண்பர் உடனடியாக, அவசர உதவி எண் 100-க்கு போன் செய்து அங்கு நடந்த கொடூரம் குறித்துத் தகவல் தெரிவித்துள்ளார். விமான நிலையப் பகுதி போலீசார் உஷார்படுத்தப்பட்ட நிலையில், ரோந்துப் பணியில் இருந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். காயத்துடன் இருந்த மாணவியின் ஆண் நண்பரைக் மீட்ட போலீசார், கோவையில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தொடர்ந்து, போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். புதர் மண்டிய பகுதியில் சல்லடை போட்டுத் தேடியதில், ஒரு கிலோமீட்டர் தொலைவில் மாணவி அலங்கோல நிலையில் கிடந்ததைக் கண்டு போலீசாரே அதிர்ச்சி அடைந்தனர். ஆடையின்றி தவித்த அந்தப் பெண், அங்கிருந்து வெளியேற முடியாமல் அதிகாலை 4 மணி வரை உயிருடன் போராடிக் கொண்டு இருந்துள்ளார்.
பின்னர், பாதுகாப்பாக அவரைக் மீட்ட போலீசார், அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்து முதலுதவி சிகிச்சை அளித்தனர். அதன் பின், கோவை அரசு மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக அவர் அனுமதிக்கப்பட்டார்.
கோவையை உலுக்கிய இந்தச் சம்பவம் தொடர்பாக பீளமேடு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் தொடங்கினர். அத்துடன், குற்றவாளிகளைப் பிடிக்க 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை தீவிரப்படுத்தப்பட்டு உள்ளதாகக் கோவை மாநகர காவல் ஆணையர் சரவண சுந்தர் தகவல் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், பிருந்தாவன் நகர் காட்டுப் பகுதியில் தடயவியல் துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு, அங்கிருந்த தடயங்களைச் சேகரித்தனர். சம்பவம் நிகழ்ந்த பகுதிக்கு அருகில் உள்ள சி.சி.டி.வி. கேமரா காட்சிகளை ஆய்வு செய்து, குற்றவாளிகளைப் பிடிக்கத் தேடுதல் வேட்டையில் இறங்கினர். மேலும், ஆண் நண்பரின் கார் பீளமேடு காவல் நிலையத்திற்குக் கொண்டு வரப்பட்டு அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பிருந்தாவன் நகர் பகுதியில் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு டாஸ்மாக் கடை இருந்துள்ளது. அங்கு ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் மது அருந்தப் பலரும் வந்து சென்றுள்ளனர். இதனால், சமூக விரோதிகள் நடமாடும் பகுதியாகப் பிருந்தாவன் நகர் மாறி உள்ளதாகப் பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். தற்போது, நள்ளிரவில் அங்கு வந்த 3 பேர் கொண்ட கும்பல் இந்தக் குற்றச் செயலில் ஈடுபட்டுள்ளது.
பிருந்தாவன் நகரில் காரில் பேசிக்கொண்டிருந்த ஆண் நண்பரைத் தாக்கிவிட்டு, அவருடன் இருந்த கல்லூரி மாணவியைத் தூக்கிச் சென்று 3 பேர் கொண்ட கும்பல் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் கோவையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதில் தொடர்புடைய குற்றவாளிகளைப் போலீசார் விரைந்து கைது செய்து, அவர்களுக்குக் கடும் தண்டனை வாங்கிக் கொடுக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், அந்தக் காட்டுப் பகுதியில் கள்ளச் சந்தையில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்து வந்த டாஸ்மாக் பாரை நாம் தமிழர் கட்சியினர் அடித்துச் சூறையாடியுள்ள சம்பவம் தற்போது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ