)
Chennai Corporation On Ditwah Cyclone: வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் தற்போது தீவிரம் அடைந்துள்ளது. தற்போது உருவாகிய டிட்வா புயல் காரணமாக, தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் மழை கொட்டி வருகிறது. குறிப்பாக, டெல்டா மாவட்டங்கள், தென் மாவட்டங்கள், வட மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால், சில மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையை பொறுத்தவரை காலை முதலே நல்ல மழை பெய்து வருகிறது. டிட்வா தமிழகத்தை நோக்கி நெருங்கி வரும் நிலையில், சென்னையை புயல் தாக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இருப்பினும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழக அரசு எடுத்து வருகிறது. மேலும், சென்னை மாநகராட்சி அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது.
மேலும், மக்களுக்கு முக்கிய அறிவுறுத்தல்களை சென்னை மாநகராட்சி வழங்கியுள்ளது. சென்னை மாநகராட்சி வெளியிட்ட அறிவிப்பில், பொதுமக்கள் தேவையின்றி வெளியில் செல்லாமல், வீட்டில் பாதுகாப்பாக இருக்க வேண்டும். குறிப்பாக, கடற்கரை, பூங்காக்களுக்கு செல்ல வேண்டாம். மரங்களின் கீழ் நிற்க வேண்டாம். மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம்.
கைப்பேசிகள், அவசரகால விளக்குகளை சார்ஜ் செய்து கொள்ளுஙகள். பால், குடிநீர், மெழுகுவர்த்தி, மருந்துகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை முன்கூட்டியே வாங்கி வைத்துக் கொள்ளுங்கள். தாழ்வான இடங்களில் வாழும் முதியோர்கள், கர்ப்பிணிகள் பாதுகாப்பான இடத்திற்கு முன்கூட்டியே செல்ல வேண்டும். தேவைப்பட்டால் 1913 என்ற உதவி எண்ணை அழைக்கலாம் எனவும் சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
இலங்கை கடல் பகுதியில் டிட்வா புயல் உருவானது. இந்த புயல் தற்போது வடதமிழகத்தை நோக்கி நகர்ந்து வருகிறது. இந்த புயல் இப்போது எங்கே இருக்கிறது என்பது குறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் முக்கிய தகவலை வெளியிட்டுள்ளது. அதன்படி, இலங்கையின் கடலோரப் பகுதியிலும், அதனை ஒட்டிய தென்மேற்கு வங்காள விரிகுடாவிலும் உருவான சூறாவளி புயல் டிட்வா கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு 8 கிமீ வேகத்தில் வடக்கு-வடமேற்கு நோக்கி நகர்ந்தது.
இன்று, நவம்பர் 29ஆம் தேதி காலை 05:30 மணிக்கு தென்மேற்கு வங்காள விரிகுடா மற்றும் அதனை ஒட்டிய வடக்கு இலங்கையின் மீது மையம் கொண்டு, யாழ்ப்பாணத்துக்கு கிழக்கு-தென்கிழக்கில் சுமார் 80 கிமீ, திருகோணமலைக்கு (இலங்கை) வட-வடமேற்கில் 110 கிமீ, காரைக்காலுக்கு தென்-தென்கிழக்கில் (இந்தியா) 190 கிமீ, புதுச்சேரிக்கு தென்-தென்கிழக்கில் (இந்தியா) 300 கிமீ மற்றும் சென்னைக்கு தெற்கே 400 கிமீ தொலைவில் நிலைகொண்டுள்ளது.
இது தொடர்ந்து வடக்கு-வடமேற்கு நோக்கி நகர்ந்து நவம்பர் 30 ஆம் தேதி அதிகாலையில் வட தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் அதனை ஒட்டிய தெற்கு ஆந்திரப் பிரதேச கடற்கரைகளுக்கு அருகில் கரையை கடக்கக் கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை வானிலை மையம் வெளியிட்ட அறிவிப்பின்படி, இன்று மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டங்கள், புதுச்சேரியில் கன முதல் மிக கனமழையும், ஒருசில இடங்களில் அதி கனமழையூம் பெய்யக் கூடும் என வானிலை மையம் கூறியுள்ளது. மேலும், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், அரியலூர், பெரும்பலூர், திருச்சி, சேலம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, காஞ்சிபுரம், சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்யக் கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, நாமக்கல், கரூர ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ