)
Tamil Nadu Weatherman On Ditwah Cyclone: வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில், தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக, டெல்டா மாவட்டங்கள், தென் மாவட்டங்கள், வட மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கி வருகிறது. இதற்கிடையில், டிட்வா புயல் தமிழக கடற்கரையை நோக்கி நெருங்கி வருகிறது.
தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய இலங்கை கடலோரப் பகுதிகளில் நிலவிய டிட்வா புயல் வடக்கு வட மேற்கு திசையில் நகர்ந்து, இன்று காலை 8.30 மணியளவில் இலங்கை கடலோரப் பகுதிகள் ற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் இலங்கை திரிகோண மலையிலிருந்து தென்மேற்கே சுமார் 40 கிலோ மீட்டர் தொலைவிலும், இலங்கை மட்டக்கிளப்பிலிருந்து வடமேற்கு 100 கி.மீ தொலைவிலும், காரைக்காவிலிருந்து தெற்கு தென்கிழக்கே 320 கி.மீ தொலைவிலும், புதுச்சேரியிலிருந்து தெற்கு தென்கிழக்கே 430 கி.மீ தொலைவிலும், சென்னையிலிருந்து தெற்கே 530 கி.மீ தொலைவிலும் நிலை கொண்டுள்ளது.
இது மேலும், வடக்கு வட மேற்கு திசையில் நகர்ந்து, இலங்கை கடலோரப் பதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளை கடந்து, நவம்பர் 30ஆம் தேதி அதிகாலை தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழககு வங்கக் கடல் பகுதிகளில், வட தமிழகம், புதுச்சேரி அதனை ஒட்டிய தெற்கு ஆந்திர கடலோரப் பகுதிகளுக்கு அருகே நிலவக் கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் டிட்வா புயல் குறித்து முக்கிய தகவலை தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார். அவர் கூறுகையில், "டிட்வா புயல் தற்போது இலங்கையில் உள்ளது. டிட்வா புயல் தீவிரம் அடையும். ஆரம்பத்தில் இருந்தே இது தானே அல்லது கஜே அல்லது வர்தா போன்ற காற்று வீசும் புயல் அல்ல. டிட்வா புயல் சென்னையை நெருங்கும்போது, புயலாக இருக்காது. அந்தளவுக்கு சென்னையில் தீவிரமடையாது. மேலும் அது ஒரு காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவோ அல்லது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவோ இருக்கும்.
டிட்வா புயல் காரணமாக, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் நவம்பர் 30ஆம் தேதி பெருமளவிலான மழை பெய்யும். நவம்பர் 29ஆம் தேதி மிதமான மழை பெய்யும். டிட்வா புயல் காரணமாக, சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு பகுதிகளில் பெரிய அளவில் காற்று வீசாது. புயல் கரையை கடக்கும்போது மணிக்கு 50/60 கிமீ/மணி வேகத்தில் வீசும். முன்னதாக, வர்தாவில் மணிக்கு 120 கிமீ/மணி, கஜாவில் மணிக்கு 140 கிமீ/மணி மற்றும் தானேயில் மணிக்கு 150 கிமீ/மணி காற்று வீசியது. எனவே, டிட்வா புயலின்போது பெரிய அளவில் காற்று வீசாது.
யாழ்ப்பாணம் அருகே டிட்வா புயல் காரணமாக, நவம்பர் 29ஆம் தேதி நாகை, திருவாரூர், தஞ்சாவூர், காரைக்கால், மயிலாடுதுறை போன்ற இடங்களில் மிக கனமழை பெய்யக் கூடும். அருகிலுள்ள மாவட்டங்களான திருச்சி, பெரம்பலூர், அரியலூர், புதுக்கோட்டை ஆகியவையும் கனமழை பெய்யும். டிட்வா புயல் தீவிரம் அடைந்ததும், கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, வேலூர், சேலம், ராணிப்பேட்டை, நாமக்கல் ஆகிய இடங்களிலும் மழை பெய்யும். மிக்ஜாம் புயலின் போது, சென்னையில் 24 மணி நேரத்தில் 400 மி.மி மழை பெய்தது. ஆனால், டிட்வா புயலால் அப்படி ஏற்பட வாய்ப்பில்லை. அந்த வகையான மழைக்கு வாய்ப்பில்லை. நவம்பர் 29,30ஆம் தேதி சென்னையில் மழை பெய்ய தொடங்கும். டிசம்பர் 1 ஆம் தேதி வரை மழை பெய்யும்" என தெரிவித்துள்ளார்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ