)
Tamil Nadu Weather Update: தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை ஆரம்பித்துள்ள நிலையில், கடந்த சில நாட்களாக வெளுத்து வாங்கிய மழை தற்போது குறைந்து வெயில் அடித்தும் வருகிறது. இந்த நிலையில், டெல்டா வெதர்மேன் ஹேமச்சந்தர், "நவம்பர் மாத இறுதியில் புயல் உருவாகும் வாய்ப்பு அதிகம் உள்ளது. அந்த புயலின் தாக்கத்தால் வடதமிழக மாவட்டங்களில் அதி கனமழை ஏற்பட்டு பாதிப்பு உருவாகலாம்" என எச்சரித்துள்ளார்.
பருவமழை மீண்டும் தீவிரமடையும்
இது தொடர்பாக ஹேமச்சந்தர் கூறியதாவது "நவம்பர் மாதத்தின் முதல் பாதியில் வெயில் சுட்டெரிக்கும். ஆனால் 12ஆம் தேதிக்கு பிறகு கிழக்கு திசை காற்று தமிழகத்துக்குள் நுழைவதால், 15 ஆம் தேதியிலிருந்து மீண்டும் பருவமழை தீவிரமடையும். இதனால் தமிழகத்தின் பல பகுதிகளில் பரவலாக மழை பெய்யும். நவம்பர் மாத இறுதியில் 23ஆம் தேதி முதல் 30ஆம் தேதிக்குள் ஒரு புயலாக உருவாகும் வாய்ப்பு உள்ளது. அந்த புயல் வட மாவட்டங்களில் அதி கனமழையை உருவாக்கும் எனவும், இயல்பை விட அதிகமான மழை கிடைக்கும் எனவும்" அவர் கூறினார்.
மழை பாதிப்பு ஏற்படும் வாய்ப்பு
புயல் உருவானால் சென்னையைச் சுற்றியுள்ள செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை உள்ளிட்ட வட மாவட்டங்களில் கடும் மழை தாக்கம் காணப்படக்கூடும். இதேபோல் தஞ்சாவூர், திருவாரூர், நாகபட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, திருச்சி உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களிலும் மழை மீண்டும் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது.
இன்றைய வானிலை நிலவரம்
இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்ததாவது, "இன்று (நவம்பர் 5) சென்னையில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது. அதிகபட்ச வெப்பநிலை 32 முதல் 33 டிகிரிக்கும், குறைந்தபட்சம் 26 முதல் 27 டிகிரிக்கும் இடையே இருக்கும்.
இதேபோன்று வடதமிழகத்தின் சில பகுதிகளிலும், தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும். தஞ்சாவூர், திருவாரூர், நாகபட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, அரியலூர் மற்றும் திருச்சி பகுதிகளில் கனமழை பெய்யும் வாய்ப்பு உள்ளது" என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
மொத்தத்தில், நவம்பர் மாதத்தின் இரண்டாம் பாதியிலிருந்து பருவமழை மீண்டும் வேகமெடுத்து, மாத இறுதியில் புயல் உருவாக வாய்ப்புள்ளதால், மக்கள் முன்கூட்டியே எச்சரிக்கையுடன் இருப்பது அவசியம் என வானிலை நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ