A Raja Attack On Amit Shah: சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக துணை பொதுச்செயலாரும், நீலகிரி மக்களவை உறுப்பினருமான ஆ. ராசா இன்று (ஜூன் 9) செய்தியாளர்களை சந்தித்தார்.
A Raja: அப்பட்டமான பொய்... அருவருப்பான வஞ்சகம்...
அப்போது பேசிய ஆ.ராசா, "நேற்று ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா அவருடைய தகுதியினை மறந்து அவர் பேசி உள்ளார். அவரது பேச்சின் மொத்த தொகுப்பையும் சுருக்கி கூறினால் அப்பட்டமான பொய்கள், அருவருப்பான வஞ்சகம் மற்றும் பிளவு நோக்கம் கொண்ட சூதுரை இவை மூன்றும் தவிர அவருடைய பேச்சில் என்னால் எதையும் கண்டுபிடிக்க முடியவில்லை" என குற்றஞ்சாட்டினார்.
தொடர்ந்து பேசிய அவர், "நாட்டின் உள்துறை அமைச்சர் ஒரு மாநிலத்திற்கு வரும்பொழுது அவருடைய தகுதி, அவருக்கு இருக்கும் பொறுப்பு, கடமையை உணர்ச்சி என எதுகுறித்தும் கவலையின்றி அவதூறுகளை அள்ளி வீசுவதும், மாற்று கட்சி ஆட்சிப்புரியம் மாநிலத்தில் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் கூறுவது, மதவாத பிளவினை வேண்டுமென்று உருவாக்கி சட்ட ஒழுங்கு பிரச்சனையை மற்றும் கலவரங்களை தூண்டி அதன்மூலம் அரசியல் ஆதாயம் கிடைக்குமா, அதனை அறுவடை செய்யலாமா என்ற அருவருப்பான உணர்ச்சியும் அவருடைய பேச்சில் வெளிப்பட்டுள்ளது" என கடுமையாக சாடினார்.
A Raja: அமித்ஷாவின் பதவிக்கு அழகல்ல...
மேலும் தொடர்ந்து பேசிய ஆ. ராசா, "இது கூட்டாட்சி தத்துவத்திற்கு நல்லதல்ல. மாநில - ஒன்றிய அரசுகளுக்கு இடையேயான சுமுகமான போக்கிற்கு உந்தகம் விளைவிக்கும் போக்கில் அவர் பேசியுள்ளார். அவர் பேச்சை எங்களால் ஒவ்வொரு வரியாக ஆதரத்துடன் நிரூபிக்க முடியும். ஆனால் தமிழ்நாட்டை ஒரு அமைதி பூங்காவாக இருப்பதை விரும்பாமல் அரசியலுக்காக மிகவும் கீழ்த்தரமான செயல்பாடுகளில் ஈடுபட்டுள்ள அமித்ஷாவின் பேச்சையும் போக்கையும் தமிழக மக்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.
முதலமைச்சர் ஸ்டாலின், தமிழ்நாடு அரசு திட்டங்களுக்கு ஒன்றிய அரசின் நிதி பல நேரங்களில் கிடைக்காவிட்டாலும் அந்த நிதியினை மாநில நிதியில் இருந்து இழப்பீடு செய்து வளர்ச்சி திட்ட பணிகளை மிக விரைவாகவும் நல்ல வழியிலும் நடைமுறைப்படுத்துவதை செரிக்க முடியாத ஒன்றிய அரசும் பாஜகவும் அமித்ஷாவை இங்கு வரவழைத்து கேலிக்கூத்தான அரசியல் நாகரிகத்திற்கு புறம்பான காரியத்தை அரங்கேற்றி உள்ளனர். அமித்ஷா என்ற தனிநபர் மட்டுமல்லாமல் அவர் வைத்துள்ள பதவிக்கும் இது அழகல்ல இத்தகைய அருவருப்பான போக்குகளை அவர்கள் தற்போது நிறுத்திக் கொள்வது நல்லது.
A Raja: 'எங்களை பார்த்துதான் அமித்ஷாவுக்கு ஷாக்...'
மன்மோகன் சிங் ஆட்சி காலத்தில் நேரடி நிதி வருவாய் மற்றும் இப்போது இருக்கும் நேரடி நிதி வருவாய் ஒப்பிட்டுப் பார்த்தால் முந்தைய ஆட்சியை விட நான்கு மடங்கு உயர்ந்துள்ளது. அமித்ஷாவை பார்த்து திமுகவினருக்கு ஏன் ஷாக் அடிக்க வேண்டும்?, எங்களை பார்த்து ஷாக் அடித்த காரணத்தினால்தான் அமித்ஷாவை இங்கு வரவழைத்துள்ளனர். பாஜகவின் எந்தவிதமான மத அரசியலும் தமிழகத்தில் எடுபடவில்லை, உங்களைப் பார்த்தால் எனக்கு சிரிப்பாக உள்ளது. ஒரு நாட்டின் பிரதமர் அடிக்கடி ஒரு மாநிலத்தின் நகராட்சிகளுக்கும் முனிசிபாலிட்டிகளுக்கும் செல்ல வேண்டிய காரணம் என்ன?, அவர் தமிழகத்தை கண்டு பயந்த காரணத்தினால் தான் அடிக்கடி இங்கு வந்தார்" என்றார்.
A Raja: ஒரு திட்டம் மட்டுமே பாக்கி...
தேர்தல் வாக்குறுதியில் திமுக 10% தான் நிறைவேற்றி உள்ளது என அமித்ஷாவின் பேச்சுக்கு, "நாங்கள் 98.5 சதவீதம் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றிவிட்டோம். அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதியம் திட்டம் மட்டுமே பாக்கி உள்ளது. அதற்கும் ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. நாங்கள் கூறாததையும் இதுவரை செய்துள்ளோம். அமித்ஷா அவர்களை அழைக்கிறேன். நாங்கள் செய்த அனைத்து திட்டங்களையும் ஆதாரத்துடன் காண்பிக்கிறோம். ஆனால் ஹிந்தியில் மட்டும் பேசக்கூடாது" என்றார்.
A Raja: மோடி, அமித்ஷா After all மனிதர்கள்
மோடி அரசின் திட்டங்களை மடைமாற்றி மாநில அரசு பயன்படுத்திக் கொள்வதாக எழுப்பப்பட்ட கேள்விக்கு, "பாரதிய ஜனதா கட்சி எந்த விதமான ஆதாரங்களும் இல்லாமல் குற்றச்சாட்டுகள் வைத்து வருகின்றது. பாஜக கொடுக்க வேண்டிய எய்ம்ஸ் மருத்துவமனையே இல்லாமல் மதுரையில் இருக்கிறோம். நாங்கள் அமித்ஷா, மோடியை பார்த்து பயப்படவில்லை. அவர்கள் After All மனிதர்கள். அவர்களுடைய அரசியல் தத்துவம் அனைத்து இடங்களிலும் படையெடுத்து ஜெயிக்கிறது. ஏன் இங்கு ஜெயிக்கவில்லை என்று கேட்டால், அவர்களுடைய சித்தாந்தத்திற்கு மாற்று சித்தாந்தம் எங்களிடம் உள்ளது. அதனால் தான் இங்கு ஜெயிக்க முடியாது.
A Raja: 'தொகுதி மறுசீரமைப்பு எனும் சூது'
நாடாளுமன்றத்தில் நாங்கள் தொகுதி மறுசீரமைப்பு குறித்து கேட்ட போதும் பதில் அளிக்கவில்லை நேற்றைய தினமும் அது தொடர்பாக பேசவில்லை. தொகுதி மறு சீரமைப்பு அமைப்பதின் முக்கிய காரணம் என்னவென்றால் தென் மாநிலங்கள் இல்லாமல் எந்த விதமான மசோதாக்களையும் அவர்களால் இயற்ற முடியுமென்றே இந்த திட்டம் அமைக்கப்பட்டுள்ளது. அந்த சூதினை முறியடித்தவர் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் என்ற மாமனிதர் ஒருவர் மட்டுமே. அதனை டெல்லி வரை அனைவரும் ஒப்புக் கொண்டுள்ளனர்.
A Raja: மதுரை முருகர் மாநாடு எதற்கு?
வரும் ஜூன் 22ஆம் தேதி பாஜக சார்பில் நடத்தப்படும் முருகர் மாநாடு முற்றிலும் அரசியல் நோக்கத்தினை கையாள்வதற்கு அமைக்கப்பட்டது. தமிழக ஹிந்து சமய அறநிலைத்துறை சார்பில் முருகர் மாநாடு நடைபெற்றது. அதில் இந்துத்துவா சார்ந்த பலரும் கலந்துகொண்டனர். பாஜக முருகர் மாநாடு நடத்துவது இந்து மத ஒற்றுமைக்கு இல்லை. அவர்கள் இங்கு நடத்தும் முருகர் மாநாட்டுக்கு காரணம் என்னவென்றால் பிளவுபடுத்த வேண்டும் என்பதே... இஸ்லாமிய, கிறிஸ்துவ மக்களுக்கு எதிராக கருத்துகள் திணிக்க வேண்டும் என்பதற்கு மட்டுமே.
A Raja: இல்லாத சரஸ்வதி நாகரீகத்திற்கு ஏன் இவ்வளவு பணம்?
தமிழுக்கு ஏதும் செய்யவில்லை என திமுகவினர் மீது குற்றச்சாட்டுகள் வைக்கும் அமித்ஷா ஏன் கீழடி ஆய்வு ஏன் மீண்டும் மீண்டும் மறுக்கப்படுகிறது. கீழடி ஆய்வு இந்தியாவின் தொல்லியல் துறைக்கு அனுப்பப்பட்டுள்ளது.மேலும் தமிழகத்தில் இரும்பு 5,500 வருடங்களுக்கு முன்பாகவே கண்டுபிடிக்கப்பட்டது என ஏன் அங்கீகரிக்கவில்லை. அமர்நாத்தை மீண்டும் மீண்டும் குறி வைப்பதின் காரணம் என்ன...?
வடமாநிலங்களில் அந்தந்த மாநிலத்தின் ஆட்சி மொழிகள் தற்போது புழக்கத்திலேயே இல்லை. ஹிந்தி திணிக்கப்பட்டதாகும், அடுத்து சமஸ்கிருதத்திற்கு செல்வார்கள், சரஸ்வதி நாகரித்திற்கு செல்வார்கள, இல்லாத சரஸ்வதி நாகரீகத்திற்கு எதற்கு இவ்வளவு பணம்?. எத்தனை முறை மோடி வந்தாரோ அத்தனை முறை வாக்கு வித்தியாசம் அதிகமாக எங்களிடம் வந்தது. அமித்ஷா மீண்டும் இங்கு வரவேண்டும், அவர் வந்தால் எங்களுடைய இலக்கான 200 தொகுதிகள் என தாண்டி அதற்கும் மேல் வெற்றி பெறுவோம்.
A Raja: மக்கள் உங்களை பார்த்துக்கொள்வார்
அரசாங்கத்தையும் அரசியலும் குழப்பிக் கொண்டு தங்களுடைய ஆதாயத்திற்கு ஆர்எஸ்எஸ் செயல்பட்டு வருகிறது. அதற்கு அமித்ஷாவும் மோடியும் பகடை காய்களாக உள்ளனர். பாஜக அதிமுக எப்படிப்பட்ட கூட்டணி அமைந்தாலும் அது எதிர்கொள்வதற்கு தகுதி மற்றும் ஆற்றல் எங்களுடைய முதலமைச்சரிடம் உள்ளது. தன்னால் ஏதும் செய்ய முடியாது என அமித்ஷா தமிழகத்தில் மட்டுமே தனது தோல்வியினை ஒப்புக்கொண்டார். மேலும் தமிழக மக்கள் பார்த்துக் கொள்வார்கள் என கூறியுள்ளார். அதையும் தான் நாங்களும் சொல்கிறோம் தமிழக மக்கள் உங்களைப் பார்த்துக் கொள்வார்கள்" என்றார்.
மேலும் படிக்க | மெர்சல் பட பாணியில் மருத்துவம்! ரூ. 10 கட்டணமாக வசூலித்த மருத்துவர் உயிரிழந்தார்!
மேலும் படிக்க | NDA கூட்டணியில் விஜய்? மத்திய இணை அமைச்சர் எல் முருகன் பதில்!
மேலும் படிக்க | 'என்னால் திமுகவை தோற்கடிக்க முடியாது, ஆனால்...' தேர்தலை குறிவைத்து அமித்ஷா பேச்சு!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









