)
Drishti IAS Coaching : மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் (CCPA) யுபிஎஸ்சி சிவில் சர்வீசஸ் தேர்வு (CSE) 2022 முடிவுகள் தொடர்பாக தவறாக வழிநடத்தும் விளம்பரங்களை வெளியிட்டதற்காக திருஷ்டி ஐஏஎஸ் (VDK Eduventures Pvt. Ltd.) நிறுவனத்திற்கு 5 லட்சம் ரூபாய் அபராதம் விதித்துள்ளது. திருஷ்டி ஐஏஎஸ் தனது விளம்பரத்தில் "யுபிஎஸ்சி சிஎஸ்இ 2022-ல் 216+ தேர்ச்சி" என்று விளம்பரம் வெளியிட்டதுடன், அந்த விளம்பரத்தில் தேர்ச்சி பெற்ற தேர்வர்களின் பெயர்கள் மற்றும் புகைப்படங்களையும் வெளியிட்டது. இது தொடர்பாக மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் (CCPA) விசாரணை நடத்தியது.
அதில், திருஷ்டி ஐஏஎஸ் பயிற்சி நிறுவனத்தின் விளம்பரம் தவறாக வழிநடத்துவதாகவும், இந்த தேர்வர்கள் தேர்ந்தெடுத்த படிப்புகளின் வகை மற்றும் கால அளவு பற்றிய முக்கியமான தகவல்களை மறைப்பதாகவும் சிசிபிஏ கண்டறிந்தது. விசாரணையில், திருஷ்டி ஐஏஎஸ் நிறுவனத்தால் உரிமை கோரப்பட்ட 216 தேர்வர்களில், 162 தேர்வர்கள் (75%) யுபிஎஸ்சி சிஎஸ்இ-யின் முதல்நிலை மற்றும் முதன்மைத் தேர்வுகளில் தாங்களாகவே தேர்ச்சி பெற்ற பிறகு, அந்த நிறுவனத்தின் இலவச நேர்காணல் வழிகாட்டல் திட்டத்தை (IGP) மட்டுமே எடுத்திருந்தது தெரியவந்தது. 54 மாணவர்கள் மட்டுமே IGP மற்றும் பிற படிப்புகளில் சேர்ந்திருந்தனர்.
முக்கியமான தகவல்களை வேண்டுமென்றே மறைத்தது, யுபிஎஸ்சி தேர்வின் அனைத்து நிலைகளிலும் அவர்களின் வெற்றிக்கு திருஷ்டி ஐஏஎஸ் தான் காரணம் என்று ஐஏஎஸ் ஆர்வலர்களையும் பெற்றோர்களையும் நம்ப வைத்துள்ளது. இது நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம், 2019-இன் பிரிவு 2(28)-இன் கீழ் தவறாக வழிநடத்தும் விளம்பரமாகும்.
திருஷ்டி ஐஏஎஸ்-ஆல் மீண்டும் மீண்டும் செய்யப்பட்ட விதிமீறல்: இதே போன்ற செயலுக்காக திருஷ்டி ஐஏஎஸ் நிறுவனத்தின் மீது விதிக்கப்பட்ட இரண்டாவது அபராதம் இது என்றும் சிசிபிஏ குறிப்பிட்டது. இதற்கு முன்னர், செப்டம்பர் 2024-ல், "யுபிஎஸ்சி சிஎஸ்இ 2021-ல் 150+ தேர்ச்சி" என்ற அதன் தவறான கூற்றிற்காக அந்த நிறுவனத்திற்கு எதிராக ஆணையம் இறுதி உத்தரவு பிறப்பித்தது. யுபிஎஸ்சி சிஎஸ்இ 2021-ல் 150-க்கும் மேற்பட்ட தேர்ச்சிகள் என்ற கூற்றுக்கு எதிராக நிறுவனம் 161 தேர்வர்களின் விவரங்களை சமர்ப்பித்தது. அந்த வழக்கிலும், இந்த 161 தேர்வர்களில் 148 பேர் IGP-யில் சேர்ந்தவர்கள், 7 பேர் முதன்மைத் தேர்வு வழிகாட்டல் திட்டத்தில், 4 பேர் ஜிஎஸ் அடிப்படைத் திட்டத்தில், ஒருவர் விருப்பப் பாடத் திட்டத்தில் சேர்ந்தவர்கள் மற்றும் மீதமுள்ள 1 தேர்வரின் விவரங்கள் குறிப்பிடப்படவில்லை என்று கண்டறியப்பட்டது. இதற்காகவும் சிசிபிஏ 3 லட்சம் ரூபாய் அபராதம் விதித்ததுடன், தவறாக வழிநடத்தும் விளம்பரத்தை நிறுத்துமாறும் உத்தரவிட்டது.
முன்னர் அபராதம் விதிக்கப்பட்டு எச்சரிக்கப்பட்ட போதிலும், திருஷ்டி ஐஏஎஸ் மீண்டும் 2022 தேர்வு முடிவுகளுக்காக "216+ தேச்சிகள்" என்று அதே நடைமுறையில் விளம்பரம் செய்தது. இது நுகர்வோர் பாதுகாப்பு விதிமுறைகளுக்கு மீண்டும் இணங்காமல் இருப்பதையும், புறக்கணிப்பதையும் காட்டுகிறது. இத்தகைய முக்கியமான தகவல்களை மறைப்பது என்பது நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம், 2019-இன் பிரிவு 2(9)-இன் கீழ் விதிமீறலாகும். குறிப்பாக வெளிப்படையான உண்மைகளை வெளியிடாமல், மறைத்து நுகர்வோரை நியாயமற்ற முறையில் பாதிக்கின்றன.
இதுவரை, சிசிபிஏ தவறாக வழிநடத்தும் விளம்பரங்கள் மற்றும் நியாயமற்ற வர்த்தக நடைமுறைகளுக்காக பல்வேறு பயிற்சி நிறுவனங்களுக்கு 54 அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. 90.6 லட்சம் ரூபாய்க்கும் அதிகமான அபராதங்கள் 26 பயிற்சி நிறுவனங்களுக்கு விதிக்கப்பட்டுள்ளன, அத்துடன் இத்தகைய தவறாக வழிநடத்தும் கூற்றுக்களை நிறுத்துமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அபராதம் விதிக்கப்பட்ட அனைத்து நிறுவனங்களும் தேர்வர்கள் எடுத்துக்கொண்ட பயிற்சி தொடர்பான முக்கியமான தகவல்களை மறைத்துவிட்டன. இது நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம், 2019-இன் கீழ் தவறாக வழிநடத்தும் விளம்பரத்திற்குச் சமம் என்று சிசிபிஏ குறிப்பிட்டுள்ளது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ