)
Edappadi Palanisamy Latest News Updates: அதிமுக பொதுச்செயலாளரும், சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி விருதுநகர் மாவட்டத்தில் இரண்டாவது நாளாக 'மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம்' பிரச்சாரம் மேற்கொண்டார்.
அப்போது, சாத்தூர் சட்டப்பேரவை தொகுதியில் அதிமுக தொண்டர்கள் மத்தியில் பேசிய இபிஎஸ், "திமுக ஆட்சிக்கு வந்து 50 மாதங்கள் ஆகியும் இதுவரை உருப்படியான எந்த திட்டமும் அறிவிக்கப்படவில்லை. திமுக ஆட்சிக்கு வந்த பிறகுதான் தமிழகம் வளர்ந்தது போல் திமுக தலைமையில் இருக்கக்கூடிய கூட்டணிகள் பொய்யான தோற்றத்தை உருவாக்கிக் கொண்டிருக்கிறார்கள்.
முறைகேடான வாக்காளர் திருத்தம் பற்றி இபிஎஸ் வாய் திறக்காதது ஏன் என 86 வயதில் அமைச்சர் துரைமுருகன் பொய்யான அறிக்கையை வெளியிட்டு இருக்கிறார். தற்போது திமுகதான் ஆட்சியில் இருக்கிறது. திமுகதான் அதிகாரத்தை கையில் வைத்திருக்கிறது. திமுக அரசிற்கு கீழ் தான் அதிகாரிகள் உள்ளார்கள். வாக்காளர் நீக்குதல், சேர்த்தல் பணி மாவட்ட ஆட்சியரின் அதிகாரத்திற்குட்பட்டது. நாங்களா ஆட்சி அதிகாரத்தில் இருக்கிறோம்? நாங்கள் எப்படி போலி வாக்காளரை சேர்க்க முடியும்?
பாஜகவுடன் அதிமுக எப்போது கூட்டணி வைத்ததோ அப்போதில் இருந்தே திமுகவிற்கு பயம் வந்துவிட்டது. அடுத்த ஆண்டு நடைபெறும் சட்டமன்றத் தேர்தலில் அதிமுக - பாஜக கூட்டணி அமைந்துள்ளதால் வெற்றி பெற முடியாது என்ற பயத்தில் மடைமாற்றம் செய்ய தவறான அறிக்கையை வெளியிட்டு இருக்கிறார்கள்.
திமுக தான் போலி வாக்காளர்களை சேர்க்க துடித்துக் கொண்டிருக்கிறது. வயதில் மூத்தவர் துரைமுருகன், அவரை நான் மதிக்கிறேன். அதேநேரம் தவறான அறிக்கையை வெளியிட்டால் கண்டிப்போம். சென்னை ஆர்கே நகர் தொகுதியில் 27,779 போலி வாக்காளர்களை நீதிமன்ற உத்தரவின்படி நீக்கப்பட்டுள்ளார்கள். எப்படி இந்த ஆட்சியில் போலி வாக்காளர்கள் சேர்க்கிறார்கள் என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
ஆதரவுப்பூர்வமாக நீதிமன்றம் மூலமாக போலி வாக்காளர்கள் நீக்கப்பட்டு வருகிறார்கள். திமுக மக்களின் செல்வாக்கையும் கட்சியினரின் செல்வாக்கையும் இழந்துவிட்டது. 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி படுதோல்வியடையும். அந்த பயத்தில் தவறான செய்தியை வெளியிட்டு வருகிறார்கள். ஆட்சி அதிகாரத்தில் உள்ள திமுக தான் போலி வாக்காளர்களை சேர்ப்பதில் மும்பரமாக உள்ளார்கள்.
ஜெயலலிதா இருந்தபோது சென்னை மாநகராட்சி தேர்தலின் போது ஆளுங்கட்சியாக திமுக இருந்தபோது ஒன்றரை மணி நேரத்தில் 1500 வாக்குகளை பதிவு செய்த போது நீதிமன்றம் விசாரணை நடத்தி முறைகேடாக வாக்குப்பதிவு செய்யப்பட்டதாக மாநகராட்சி தேர்தல் ரத்து செய்யப்பட்டது. இதுதான் திமுகவின் வரலாறு.
திமுக ஆட்சியில் எதற்கெடுத்தாலும் பணம்தான். கலெக்சன், கமிஷன், கரப்சனக்கு நோபல் பரிசு கொடுக்க வேண்டும் என்றால் அது ஸ்டாலின் அரசிற்கு தான் வழங்க வேண்டும். 4 ஆண்டுகளில் திமுக கொள்ளையடித்ததுதான் மிச்சம். டாஸ்மாக்கில் 4 ஆண்டுகளில் சுமார் 22 ஆயிரம் கோடி ரூபாய் கொள்ளையடித்துள்ளார்கள். 10 ரூபாய் மந்திரி என்ற பெயரை பெற்றவர் செந்தில் பாலாஜி, 10 ரூபாய் மந்திரி யார் என சட்டமன்றத்தில் கேட்டால் செந்தில் பாலாஜி பெயரை தான் சொல்வார்கள்.
இரவில் கண்மூடி காலையில் கண்விழித்து பார்க்கும் போது எங்கள் கட்சிக்காரர்களால் என்ன நடக்குமோ பதறிப்போய் கண்விழிக்கிறேன் என சொல்லும் முதல்வர் இப்படி இருந்தால் நாட்டை எப்படி காப்பாற்ற முடியும். இப்படிப்பட்ட ஆட்சியாளர் தமிழகத்தை ஆள வேண்டுமா?.
அவரது கட்சிக்காரர்களையே கட்டுப்படுத்த முடியவில்லை என்றால் நாட்டின் சட்ட ஒழுங்கு பிரச்சனையை கட்டுப்படுத்த முடியும். திறமையற்ற, பொம்மை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின். திமுக ஆட்சியில் அமர்ந்ததில் இருந்து மக்கள் போராடிக் கொண்டிருப்பதை பார்க்கிறோம். ஆசிரியர்கள், விவசாயிகள், போக்குவரத்து தொழிலாளர்கள் என அனைத்து தரப்பு மக்களும் போராடும் போராட்ட களமாக மாறி உள்ளது.
இதைப் பற்றி எல்லாம் கவலைப்படாமல் அவரது வீட்டில் உள்ளவர்களுக்கு பதவி வேண்டும் அதிகாரம் என்பதை மட்டுமே கவனம் செலுத்துகிறார். தான் சூப்பர் முதலமைச்சர் என கூறிக்கொள்ளும் மு.க. ஸ்டாலின் கடன் வாங்குவதில் மட்டுமே சூப்பர் முதலமைச்சராக திகழ்கிறார். கடன் பெற்றதற்கு திமுக அரசாங்கம் தமிழகத்தை அடமானம் வைக்கப் போகிறது. பொருளாதார வளர்ச்சி புள்ளி விவரத்தால் நமக்கு ஏதும் நன்மை கிடைக்க போகிறதா?.
அதிமுக ஆட்சியின் போது பட்டாசு தொழிலாளர்கள் நாள் ஒன்றுக்கு 700 ரூபாய் வருவாய் ஈட்டிய நிலையில் திமுக ஆட்சியில் 150 முதல் 200 ரூபாய் மட்டுமே கிடைப்பதாக கூறுகிறார்கள். நாட்டு மக்கள் எப்படி கஷ்டப்படுகிறார்கள், துன்பப்படுகிறார்கள், வேதனைப்படுகிறார்கள் என்பதை முதல்வர் பார்த்து தெரிந்து பேசுங்கள்.
அதிமுக ஆட்சிக்கு வந்தவுடன் ஏழை மக்கள் தாழ்த்தப்பட்ட மக்கள் அனைவருக்கும் காங்கிரட் வீடு கட்டித் தரப்படும். வீட்டுமனை இல்லா ஏழை எளிய மக்களுக்கு அரசாங்கமே வீட்டு மனை வாங்கி கொடுத்து அதில் கான்கிரீட் வீடு கட்டி கொடுக்கப்படும். அதிமுக ஆட்சிக்கு வந்தவுடன் ஏழை என்ற சொல் இல்லை என்ற நிலையை அதிமுக அரசு உருவாகும்.
அதிமுக அரசியல் துவங்கப்பட்ட அம்மா கிளினிக் திட்டத்தை மூடி ஏழை மக்களுக்கு துரோகம் செய்துள்ளது, திமுக அரசு. அதிமுக ஆட்சி மீண்டும் வளர்ந்த பின்னர் 4000 ஆயிரம் அம்மா மினி கிளினிக் துவங்குவோம். நலம் காக்கும் ஸ்டாலின் என திட்டத்தை துவங்கும் முக ஸ்டாலின் முதலில் உங்கள் உடல் நலத்தை பார்த்துக்கொள்ளுங்கள்.
பெயர் வைப்பதில் பிரபலமான முதலமைச்சர் முக ஸ்டாலின். பெயர் வைப்பதற்கு நோபல் பரிசு கொடுக்க வேண்டும் என்றால் தமிழக முதல்வர் மு க ஸ்டாலினுக்கு கொடுத்தால்தான் பொருத்தமாக இருக்கும். தினம் ஒரு திட்டத்தின் பெயரை அறிவித்து போட்டோசூட் எடுத்து வருகிறார், முதல்வர். அதிமுக கொண்டு வந்த திட்டங்களுக்கு பெயர் வைப்பதுதான் திமுகவின் வேலை" என்றார்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ