சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே உள்ள மடப்புரத்தில் பத்ரகாளி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் தற்காலிக ஊழியராக பணியாற்றி வந்த காவலாளி அஜித்குமார் (27) என்ற இளைஞரை போலீசார் கடந்த வெள்ளிக்கிழமை (ஜூன் 27) கைது செய்தனர். கோவிலுக்கு வந்த பக்தர் ஒருவர் அவரது காரை பார்க்கிங் செய்யும்படி கூறி அஜித்குமாரிடம் சாவி கொடுத்ததாகவும், அதன்பின் கோவிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு அந்த பக்தர் காரில் சென்று பார்த்தபோது அங்கு இருந்த 10 பவுன் நகை மற்றும் பணம் காணாமல் போனதாகவும் கூறப்படுகிறது.
விசாரணையில் போலீசார் அஜித்குமாரை கடுமையாக தாக்கியதாகவும் இதனால் அவர் உயிரிழந்ததாகவும் கூறப்படுகிறது. நேற்று முன்தினம் அவரது உடலை உடற்கூராய்வு பரிசோதனைக்கு பின்னர் குடும்பத்தினரிடம் காவல்துறையினர் ஒப்படைத்தனர். போலீசாரின் விசாரணையில் இளைஞர் உயிரிழந்தது தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது.
இந்த கொடூர சம்பவத்திற்கு பலரும் தங்களது கண்டனங்களை தொரிவித்து வருகின்றனர். 5 போலீசார் கைது நேற்று கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கு விசாரணையும் சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது. இவ்வழக்கை விசாரித்த நீதிபதியும், கொலைக்காரன் கூட இப்படி அடிக்க மாட்டான் எனக் கூறினார். இச்சூழலில், பாதிக்கப்பட்ட அஜித்குமாரின் குடும்பத்தினரை தொலைப்பேசி மூலம் தொடர்பு கொண்டு தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பேசி உள்ளார். அந்த வீடியோ வைரலாகி வருகிறது. இந்த நிலையில், முதல்வர் மு.க. ஸ்டாலினின் தொலைபேசி உரையாடல் அலட்சியத்தின் உச்சம் என்றும் கொலை செய்தது உங்கள் அரசு "SORRY" என்பது தான் உங்கள் பதிலா? என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பி உள்ளார்.
இது தொடர்பாக எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளாவது, அஜித்குமார் இருந்ததால் தான் அந்த குடும்பம் தைரியமாக இருந்தது. அவர்கள் தைரியத்தை கொலை செய்துவிட்டு, "தைரியமாக இருங்கள்" என்று சொல்வதற்கு என்ன தைரியம் இருக்க வேண்டும் இந்த பொம்மை முதல்வருக்கு? முதல்வரின் பேச்சில் கொஞ்சம் கூட குற்ற உணர்ச்சியே இல்லையே? "என்ன பண்ணணுமோ பண்ணி கொடுக்க சொல்றேன்" என்று சொல்கிறீர்களே... போன அப்பாவி அஜித்குமாரின் உயிரை திருப்பி கொடுக்க முடியுமா?
வேறென்ன செய்துவிடப் போகிறீர்கள்? கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணங்களின் போது, உறவினர்களை அஞ்சலி செலுத்தக் கூட விடாமல், காசைக் கொடுத்து அவர்களின் குரலை ஒடுக்கலாம் என்று முயன்றீர்களே.. அதை போன்ற முயற்சிதானே இதுவும்? அஜித்குமார் இறந்து நான்கு நாட்கள் கழித்து, எதிர்க்கட்சியான அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு ,அதன் அடிப்படையில் நீதிமன்றம் விசாரித்து , கடுமையான விமர்சனங்களை வைத்த பிறகு FIR, கைது எல்லாம் நடக்கிறது.
உங்கள் ஆசை வார்த்தைக்கு தமிழ்நாட்டு மக்கள் இதுவரை ஏமாந்தது போதாதா? அஜித்குமார் குடும்பமும் ஏமாற வேண்டுமா? "நடக்கக் கூடாதது நடந்துடுச்சு" என்று சொல்ல நா கூசாவில்லையா உங்களுக்கு? இது என்ன முதல் முறை உங்கள் ஆட்சியில் நடந்திருக்கிறதா? இது 25வது முறை! இந்த அரசு எப்படிப்பட்ட நடவடிக்கை எடுக்கும் என்பதற்கு இந்த அலட்சிய போட்டோஷூட் போன் காலே சாட்சி என அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் படிங்க: ரிதன்யாவின் கடைசி தருணங்கள்! கதறிய தாய்.. என்ன நடந்தது? -முழு விவரம்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









