Tamil Nadu Latest News Updates: தமிழ்நாட்டில் கள் இறக்க நீண்ட காலமாக தடை விதிக்கப்பட்டுள்ளது. கள் இறக்கினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்பதால் அதுசார்ந்த விவசாய தொழிலாளர்களும் நீண்ட காலத்திற்கு முன்பே வேறு தொழில்களை நோக்கி நகர வேண்டிய சூழலுக்கு ஆளாக்கப்பட்டனர்.
கள் விற்பனை: ஆதரவும் எதிர்ப்பும்
இந்நிலையில், கள் இறக்க விதிக்கப்பட்டிருக்கும் தடையை நீக்க வேண்டும் என தொடர்ந்து பல்வேறு குரல்கள் தற்போது தமிழ்நாட்டில் எழுந்து வருகின்றனர். தாங்கள் ஆட்சிக்கு வந்தால் கள் இறக்குவதன் மீதுள்ள தடையை நீக்கி, அதன் விற்பனையை அண்டை மாநிலங்களை போன்று சட்டப்பூர்வமாக்குவோம் என எதிர்க்கட்சித் தலைவர்கள் சீமான் மற்றும் அண்ணாமலை போன்றோர் கடந்த காலங்களில் பேசி நாம் கேட்டிருப்போம்.
அதே வேளையில் திருநெல்வேலி நாங்குநேரி தொகுதியின் சட்டப்பேரவை உறுப்பினர் ரூபி மனோகரனுக்கும், வனத்துறை அமைச்சர் பொன்முடிக்கும் கடந்த மார்ச் மாதத்தில் சட்டப்பேரவையில் நடந்த ஒரு விவாதத்தில், கள் இறக்குவதன் மீதான தடையை நீக்கும் மனநிலையில் திமுக அரசு இல்லை என்பதும் தெரிந்தது.
'வெளிநாட்டு மதுபானங்களை தடை செய்யுங்க'
இந்நிலையில், கள் இறக்குவதற்கு எதிரான தடைச்சட்டத்தை உடனடியாக நீக்க வேண்டும் என தமிழ்நாடு கள் இயக்கத்தின் கள ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி தமிழ்நாடு அரசை வலியுறுத்தி உள்ளார். தர்மபுரியில் மட்லாம்பட்டி நேற்று (ஏப். 20) நடைபெற்ற கள்ளு விடுதலை மாநாடு நடைபெற்றது.
இதில் கலந்துகொண்ட நல்லசாமி செய்தியாளர்களிடம் பேசுகையில், "தமிழ்நாட்டில் மட்டுமே கள் இறக்குதல் தடை செய்யப்பட்டுள்ளது. கள் என்பது மதுபானம் அல்ல, அது உணவு. எனவே, கள் இறக்குதல் மீதான தடையை ரத்து செய்ய வேண்டும். தமிழ்நாட்டில் கள் இறக்குதலை தடை செய்து 38 ஆண்டுகளுக்கும் மேலாகிவிட்டது. மதுவிலக்கு, மது கொள்கையை ஆய்வு செய்ய அரசு அமைத்த எந்தக் குழுவும் கள்ளுக்குத் தடை விதிக்க வேண்டும் பரிந்துரைக்கவே இல்லை.
கள் உற்பத்தி மற்றும் கள் நுகர்வு அதிகரிக்க வேண்டும் என்றும் அந்த குழுக்கள் பரிந்துரைத்துள்ளன. இதேபோல், இறக்குமதி செய்யப்பட்ட மதுபானங்கள் மற்றும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட வெளிநாட்டு மதுபானங்களின் உற்பத்தியும் விற்பனையும் மட்டும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அவை குறைக்கப்பட வேண்டும், இல்லையெனில் முற்றிலுமாக தடை செய்யப்பட வேண்டும்.
'கள் இறக்குபவர்களை கைது செய்யக் கூடாது'
தமிழ்நாடு அரசு கள் இறக்குதலுக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்கவில்லை என்றால் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும். கள் இறக்குபவர்கள் மற்றும் விவசாயிகளின் எதிர்ப்பையும் அவர்கள் எதிர்கொள்ள வேண்டியிருக்கும். கள் இறக்குவோர் மீது வழக்குப் பதிவு செய்வது அரசியலமைப்புச் சட்டத்தை மீறுவதாகும். அவர்கள் குற்றவாளிகள் அல்ல. உண்மையான குற்றம் என்னவென்றால் அவர்களுக்கு எதிரான அரசின் நடவடிக்கையை தான் சொல்ல வேண்டும்" என திமுக அரசை கடுமையாக சாடினார்.
விவசாயிகளுக்கு புறக்கணிக்க கூடாது
தொடர்ந்து பேசிய தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் நிறுவனரும், வழக்கறிஞருமான ஈசன் முருகசாமி, "தமிழ்நாட்டில் கள் இறக்குவதற்கு தடை விதிப்பது விவசாயிகளுக்கு இழைக்கப்படும் அநீதியாகும். தமிழ்நாட்டில் 80 லட்சம் விவசாயக் குடும்பங்கள் உள்ளன, இங்கு மூன்று கோடிக்கும் மேற்பட்ட வாக்குகள் உள்ளன.
இந்த மக்களுக்கு பல தசாப்தங்களாக இழைக்கப்படும் அநீதிக்கு முற்றுப்புள்ளி வைக்க, தமிழ்நாடு அரசு கள் இறக்குவதற்கான தடையை ரத்து செய்ய வேண்டும். இல்லையென்றால், வரவிருக்கும் சட்டப்பேரவை தேர்தலில், இந்த விவசாயக் குடும்பங்களைச் சேர்ந்த மூன்று கோடி உறுப்பினர்களும் திமுகவைப் புறக்கணிப்பார்கள்" என்றார்.
கோவில்பட்டியில் சிக்கிய 40 லிட்டர் கள்
கள் இறக்குபவர்களை கைது செய்யக்கூடாது என நேற்று இவர்கள் கோரிக்கை வைத்திருந்த நிலையில், தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே பனையில் கள் இறக்கி விற்பனை செய்தவரை காவல்துறையினர் இன்று (ஏப். 21) கைது செய்துள்ளனர். கோவில்பட்டி அருகே உள்ள சிதம்பரம்பட்டி கிராம பகுதியில் கள் விற்பனை செய்யப்படுவதாக கோவில்பட்டி டி.எஸ்.பி. ஜெகநாதனுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.
இதையடுத்து தனிப் படை உதவி ஆய்வாளர் செந்தில்குமார் தலைமையில் போலீசார் சிதம்பரம்பட்டி பகுதியில் சோதனை மேற்கொண்டனர். அப்போது சுப்பையா என்பவருக்கு சொந்தமான தோட்டத்தில் அழகியபாண்டியபுரம் பகுதியை சேர்ந்த முருகன் (42) என்பவர் குத்தகைக்கு பனை மரங்கள் எடுத்து பதநீர் இறக்கி விற்பனை செய்து வருகிறார். அவரிடம் தனிப்படை போலீசார் சோதனை செய்த போது, அவரிடம் 2 பிளாஸ்டிக் குடத்தில் 40 லிட்டர் கள் இருப்பது தெரிய வந்தது.
இதனை தொடர்ந்து அவரை கைது செய்த போலீசார், அவரையும், கள் இருந்த குடங்களை நாலாட்டின்புதூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீசார் முருகன் மீது வழக்கு பதிவு செய்தனர். பின்னர் அவரை காவல் நிலைய ஜாமீனில் விடுவித்தனர்.
மேலும் படிக்க | மதுரை சித்திரை திருவிழா.. உள்ளூர் விடுமுறை அறிவித்த ஆட்சியர்!
மேலும் படிக்க | நிதியும் இல்லை, அதிகாரமும் இல்லை... பேரவையில் புலம்பிய PTR - என்ன மேட்டர்?
மேலும் படிக்க | இந்த ஆட்சியில் என்ன தவறு செய்துள்ளோம்? - அமைச்சர் துரைமுருகன் கேள்வி!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









