கன்னியாகுமரி: தமிழக-கேரள எல்லைப் பகுதியான கன்னியாகுமரி மாவட்டம், பளுகல் காவல் நிலையத்துக்கு உட்பட்ட வன்னியூர் தெற்றிக்குழி மேக்கத்தட்டுவினை பகுதியைச் சேர்ந்த ரவீந்திரன் (56) என்பவரது வீட்டில் கதவை உடைத்து 16 பவுன் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில், கேரளாவைச் சேர்ந்த இரண்டு பிரபல கொள்ளையர்களை தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர்.
சம்பவம் நடந்தது என்ன?
தொழிலாளியான ரவீந்திரன், தனது குடும்பத்துடன் கடந்த டிசம்பர் 6-ம் தேதி குழிச்சலில் உள்ள தனது மூத்த மகள் வீட்டிற்குச் சென்றிருந்தார். பின்னர், 17-ம் தேதி காலை 10.30 மணியளவில் அவர் வீட்டிற்குத் திரும்பியபோது, வீட்டின் பின்பக்கக் கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.
வீட்டிற்குள் சென்று பார்த்தபோது, அறையில் இருந்த பீரோ உடைக்கப்பட்டு, அதிலிருந்த 16 பவுன் தங்க நகைகள் திருடப்பட்டிருந்தது தெரியவந்தது. உடனடியாக இது குறித்து அவர் பளுகல் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
போலீசாரின் தீவிர விசாரணை
புகாரின் பேரில், மாவட்ட எஸ்.பி. ஸ்டாலின் உத்தரவின் பேரில் அமைக்கப்பட்ட சிறப்புக் தனிப்படை போலீசார், மோப்ப நாய் மற்றும் கைரேகை நிபுணர்களின் உதவியுடன் விசாரணையைத் தொடங்கினர். சம்பவப் பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததில், ஊருக்கு சம்பந்தமில்லாத இருவர் இருசக்கர வாகனத்தில் வலம் வந்தது தெரியவந்தது.
வாகன எண் மற்றும் சிசிடிவி காட்சிகளைக் கொண்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்ட தனிப்படையினர், அந்த இருவரையும் திருவனந்தபுரத்தில் வைத்து மடக்கிப் பிடித்தனர்.
பிடிபட்ட கொள்ளையர்கள் யார்?
விசாரணையில், பிடிபட்டவர்கள் கேரள மாநிலம், நேமம் பன்சிலகம் சானல் கரையைச் சேர்ந்த ரபிக் (38) மற்றும் நேமம் கொடதலவளாகம் சுதீர் என்ற கருப்பாயி (47) என்பதும், இவர்கள் மீது கேரளாவில் உள்ள பல்வேறு காவல் நிலையங்களில் 12 வழக்குகள் நிலுவையில் உள்ளதும், கேரள போலீசாரால் தேடப்படும் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டிருந்ததும் தெரியவந்தது.
திடுக்கிடும் வாக்குமூலம்
கொள்ளையர்கள் அளித்த வாக்குமூலத்தில், அவர்கள் டிசம்பர் 16-ம் தேதி இருசக்கர வாகனத்தில் பளுகல் பகுதிக்கு வந்து, கருங்கல் பகுதியில் ஆட்கள் இல்லாத ஒரு வீட்டிற்குள் புகுந்து கொள்ளையடிக்க முயன்றதாகவும், பின்னர் திற்பரப்பு பகுதிக்குச் சென்று மது அருந்திவிட்டு, அருவியில் குளித்ததாகவும் தெரிவித்துள்ளனர்.
திரும்பும் வழியில் ரவீந்திரன் வீட்டின் வெளியே பூட்டு தொங்குவதைப் பார்த்த அவர்கள், பைக்கை நிறுத்தி, வீட்டின் பின்பக்கக் கதவை உடைத்து உள்ளே சென்று, பீரோவில் இருந்த 16 பவுன் தங்க நகைகளைத் திருடிச் சென்றதை ஒப்புக்கொண்டனர்.
இதையடுத்து, கொள்ளையர்களிடமிருந்து 16 பவுன் தங்க நகைகள் மற்றும் கொள்ளையடிக்கப் பயன்படுத்தப்பட்ட இருசக்கர வாகனம் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்து, மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் படிக்க - தமிழ்நாடு அரசின் குட் நியூஸ்! டிசம்பர் மாதம் அமலுக்கு வரும் 3 புதிய திட்டங்கள்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









