)
Coolie Movie Tamil Nadu FDFS Special Show: ரஜினிகாந்த் நடித்த கூலி திரைப்படம் நாளை மறுதினம் (ஆகஸ்ட் 14) உலகம் முழுவதும் திரையரங்குகளில் ரிலீஸ் ஆக உள்ளது. சிங்கப்பூர், மலேசியா, இலங்கை, ஆஸ்திரேலியா, அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளில் என 50 நாடுகளில் கூலி திரைப்படம் 4,500 முதல் 5 ஆயிரம் திரைகளில் ரிலீஸ் ஆகிறது. தமிழ்நாட்டில் மட்டும் 980 திரைகளில் படம் ரிலீஸாக உள்ளது.
கூலி திரைப்படம் தமிழ், இந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் ரிலீஸாக உள்ளது. கர்நாடகாவிலும், கேரளாவிலும் ஆகஸ்ட் 14ஆம் தேதி காலை 6 மணிக்கு முதல் நாள் முதல் காட்சி திரையிடப்படுகிறது. இந்தியாவை பொறுத்தவரை இங்கு முதல் காட்சிகள் திரையிடப்படுகின்றன. தொடர்ந்து, அமெரிக்காவில் முதல் காட்சி இந்திய நேரப்படி ஆகஸ்ட் 14ஆம் தேதி காலை 5 மணிக்கு போடப்படும் என கூறப்படுகிறது.
ஆனால், தமிழ்நாட்டில் மட்டும் முதல் காட்சி ஆகஸ்ட் 14ஆம் தேதி காலை 9 மணிக்கு திரையிடப்படும். கடந்த 2023ஆம் ஆண்டு பொங்கல் அன்று நள்ளிரவு 12 மணிக்கு துணிவு திரையிடப்பட்டது. அப்போது சிறப்பு காட்சிக் கொண்டாட்டத்தின்போது நடந்த அசம்பாவிதத்தில் ஒரு மாணவர் உயிரிழந்தார். இதனால், அதற்கு பிறகு நள்ளிரவு மற்றும் அதிகாலை காட்சிகளுக்கு அனுமதி இல்லை என உத்தரவிடப்பட்டது.
இதைத் தொடர்ந்து, காலை 9 மணிக்கே தமிழ்நாட்டில் சிறப்பு காட்சிக்கு அனுமதி அளிக்கப்படுகிறது. அந்த வகையில், ஆகஸ்ட் 14ஆம் தேதி காலை 9 சிறப்பு காட்சிக்கு கூலி திரைப்படத்தின் தயாரிப்பு நிறுவனம் சன் பிக்சர்ஸ், தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்த நிலையில், சிறப்பு காட்சிக்கு அனுமதி அளித்து தமிழ்நாடு அரசு ஆணை பிறப்பித்துள்ளது.
திரையரங்குகளில் சிறப்பு காட்சிகள் நடத்தும் நேரத்தை அதிகப்படுத்துவதால், சுகாதார குறைபாடுகள் மற்றும் கூட்ட நெரிசல் ஏதும் ஏற்படாமலும், திரைப்படம் காண்போரின் போக்குவரத்து பாதிக்கப்படாத வகையிலும், காவல் துறையினரின் ஒத்துழைப்பு மற்றும் பாதுகாப்பு பெறுவதற்கு தக்க ஏற்பாடுகள் செய்து கொள்ள வேண்டும் என்று தமிழ்நாடு அரசு உள்துறை கூடுதல் தலைமைச் செயலர் நீரஜ் குமார் அந்த ஆணையில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், மக்கள் மற்றும் பார்வையாளர்கள் திரளாக உள்ளே வரவும், சிரமமின்றி வெளியேறவும், திரையரங்கத்தினை சுத்தம் செய்து சுகாதாரமாக பராமரிக்கவும், போதுமான இடம் மற்றும் கால இடைவெளியுடன், உரிய பாதுகாப்பு நடைமுறைகளுடன் "கூலி" (Coolie) திரைப்படத்திற்கு ஆகஸ்ட் 14ஆம் தேதி அன்று ஒரு சிறப்புக் காட்சி திரையிட அனுமதி வழங்குவது குறித்து, தமிழ்நாடு திரையரங்குகள் (ஒழுங்குமுறை) சட்டம் மற்றும் உரிய விதிமுறைகளுக்குட்பட்டு அரசளவில் முடிவெடுக்கலாம் என தெரிவித்துள்ளார்.
இதன் அடிப்படையில், சன் டிவி நெட்வொர்க் லிமிடெட் நிறுவனத்தின் கோரிக்கையினை அரசு கவனமுடன் பரிசீலித்து, "கூலி" என்ற திரைப்படத்திற்கு ஆகஸ்ட் 14ஆம் தேதி அன்று வெளியாகும் நாள் மட்டும் கூடுதலாக ஒரு சிறப்பு காட்சியினை காலை 9.00 மணி முதல் இரவு 2.00 மணி வரை (ஒரு நாளைக்கு ஐந்து காட்சிகள் மட்டும் திரையரங்குகளில் திரையிட அனுமதிக்கலாம் என ஆணையில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், இதுகுறித்து முன்கூட்டியே உரிமம் வழங்கும் அதிகாரி மற்றும் சம்பந்தப்பட்ட கேளிக்கை வரி அதிகாரிக்கு தெரியப்படுத்த வேண்டும் என்ற நிபந்தனையும் விதிக்கப்பட்டுள்ளது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ