)
சொந்த வீடு என்பது ஒவ்வொரு மனிதனின் வாழ்நாள் கனவு ஆகும். அந்த மகத்தான கனவை, குறிப்பாக நடுத்தர மற்றும் குறைந்த வருவாய் பிரிவு மக்களின் கைகளுக்கு எட்ட செய்வதில் தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம் ஒரு முக்கிய பங்காற்றி வருகிறது. இருப்பினும் பலருக்கும் இதில் எப்படி வீடு வாங்குவது என்பது குறித்து சரியான புரிதல் இருப்பது இல்லை. இதனால் அரசின் நலத்திட்டங்களை பெற முடியாமல் போகிறது. அடுக்குமாடி குடியிருப்புகள், தனி வீடுகள் மற்றும் மனைகளை நியாயமான விலையில் வழங்கி வரும் இந்த அரசு சார்ந்த அமைப்பில், ஒரு வீட்டை பெறுவதற்கான முழுமையான செயல்முறைகள் மற்றும் தகுதிகள் என்ன என்பது குறித்து தெரிந்து கொள்ளுங்கள்.
தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் திட்டங்களில் பயன்பெற, விண்ணப்பதாரர்கள் சில அடிப்படை தகுதிகளை பூர்த்தி செய்ய வேண்டும். விண்ணப்பதாரர் தமிழ்நாட்டை சேர்ந்தவராக 21 வயது பூர்த்தியடைந்தவராக இருக்க வேண்டும். விண்ணப்பதாரர் அல்லது அவரது குடும்ப உறுப்பினர்கள் பெயரில் தமிழ்நாட்டில் வேறு எங்கும் சொந்த வீடு அல்லது மனை இருக்கக்கூடாது. விண்ணப்பிக்கும் திட்டத்தை பொறுத்து(பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவு, குறைந்த வருவாய்ப் பிரிவு, நடுத்தர வருவாய்ப் பிரிவு, உயர் வருவாய்ப் பிரிவு என அதற்கான வருமான சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும். ஒரு குடும்பத்தில் ஒருவர் மட்டுமே இந்த திட்டத்தில் விண்ணப்பிக்க முடியும்.
முன்பெல்லாம் விண்ணப்ப படிவங்களைப் பெற்று, பூர்த்தி செய்து, நீண்ட வரிசைகளில் நின்று சமர்ப்பிக்க வேண்டியிருந்தது. ஆனால், தொழில்நுட்ப வளர்ச்சியின் பயனாக, தற்போது முழு விண்ணப்ப செயல்முறையும் ஆன்லைன் மூலமாகவே எளிதாக்கப்பட்டுள்ளது. முதலில், தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான `https://tnhb.tn.gov.in/` -ஐ தொடர்ந்து கவனிக்க வேண்டும். புதிய திட்டங்கள் குறித்த அறிவிப்புகள், பத்திரிக்கை செய்திகள் போன்றவை இந்த இணையதளத்தில் வெளியிடப்படும். அறிவிப்பில், திட்டத்தின் இருப்பிடம், வீடுகளின் வகை, விலை, விண்ணப்ப கட்டணம் மற்றும் கடைசி தேதி போன்ற அனைத்து விவரங்களும் தெளிவாக குறிப்பிடப்பட்டிருக்கும்.
இணையதளத்தில் உங்கள் பெயர், ஆதார் எண், பான் எண், மற்றும் மொபைல் எண் போன்ற அடிப்படை விவரங்களை அளித்து, ஒரு பயனர் கணக்கை உருவாக்க வேண்டும். நீங்கள் விண்ணப்பிக்க விரும்பும் திட்டத்தை தேர்வு செய்யவும். உங்கள் தனிப்பட்ட, குடும், மற்றும் வருமான விவரங்களை ஆன்லைன் விண்ணப்ப படிவத்தில் கவனமாக பூர்த்தி செய்ய வேண்டும். தேவையான ஆவணங்களை ஸ்கேன் செய்து, குறிப்பிட்ட வடிவத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும். விண்ணப்பக் கட்டணம் மற்றும் ஆரம்ப வைப்பு தொகையை ஆன்லைன் மூலமாக செலுத்த வேண்டும்.
விண்ணப்பங்கள் பெறப்பட்ட பிறகு, தகுதியான விண்ணப்பதாரர்களின் பட்டியல் வெளியிடப்படும். ஒதுக்கீடு செய்யப்பட வேண்டிய வீடுகளின் எண்ணிக்கையை விட அதிகமான விண்ணப்பங்கள் பெறப்பட்டால், குலுக்கல் முறையில் பயனாளிகள் தேர்வு செய்யப்படுவார்கள். இந்த குலுக்கல், பொது பார்வையாளர்கள் மற்றும் அதிகாரிகளின் முன்னிலையில் வெளிப்படைத்தன்மையுடன் நடத்தப்படும். தேர்வு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு ஒதுக்கீட்டு ஆணை வழங்கப்படும். அதன் பிறகு, மீதமுள்ள தொகையை, குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் ஒரே தவணையாகவோ அல்லது வங்கி மற்றும் வீட்டுவசதி நிதி நிறுவனங்கள் மூலம் கடன் பெற்றோ செலுத்த வேண்டும். முழு தொகையும் செலுத்தப்பட்ட பிறகு, விற்பனைப் பத்திரம் பதிவு செய்யப்பட்டு, வீடு உங்கள் பெயருக்கு மாற்றப்படும்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ